இந்த வலைப்பூவில் தேட....

திருக்குறள்

Thursday, December 29, 2011

ஓட்டு போட்டால் மட்டும் போதுமா?

சமீப 'தானே' புயல் ஒரு கலக்கு கலக்கிவிட்டு போயிருக்கிறது. எங்கு நோக்கினும் தண்ணீர். சாலை, வீதி, வீடு என்று அனைத்து இடங்களிலும் மழை நீர் நிரம்பி வழிகிறது. சாக்கடை நீர் மேலெழும்பி மழை நீருடன் கலந்து 'நோய்' பரப்பிக்கொண்டிருக்கிறது. சற்றே தொலைக்காட்சியை உயிரூட்டி செய்தி அலைவரிசையை நாடினேன். அவர்கள் சாதாரணமாகவே அனைத்தையும் மிகைப்படுத்துவார்கள். இப்பொழுது கேட்கவே வேண்டாம். பிரச்சனைகளை உடனுக்குடன் வெளி சொல்வதற்கு மட்டும் இன்றைய ஊடகங்கள்.
 
செய்திகளுக்கிடையே நேரடி அறிக்கை அளித்த அனைத்து நிருபர்களும் ஏனோ மக்களின் பிரச்சனைகளை காட்ட மறுத்தனர். 'நைட்டி' அணிந்த பெண்கள் தங்களின் வாக்குமூலத்தில் 'இது வரை யாரும் வந்து எட்டிப்பார்க்கவில்லை' என்ற ஒரே முறையீட்டை வைத்தனர். யாரோ சொல்லி கொடுத்து பேசியதை போன்றதொரு உணர்வு. அது ஒருபுறமிருக்க, காமிரா கையால்பவர் வெறுமனே அலைகளையும், கடலையுமே காண்பித்து பீதியை கிளப்பிக்கொண்டிருந்தார். நம் மேல் அவருக்கு என்ன 'கொலவெறியோ'.
 
ஊடகங்கள் தங்களின் கடமையை மறக்கின்றன. ஓட்டு போடுவதோடு நமது கடமை முடிந்துவிடுகிறது. யார் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்ற மனப்போக்கு ஏன்? 'இது வரை யாரும் வந்து எட்டிப்பார்க்கவில்லை' - என்று வெறுமனே அடுத்தவர் மேல் பழி போட்டு நம் 'கடமையை' சரிவர செய்த திருப்தியை அடைகிறோம். அந்த 'யாரும்' என்பது யார் என்று குறை கூறுபவர்களுக்கும் தெரியாது, அதனை படம் பிடிப்பவர்களுக்கும் தெரியாது. ஏதோ செய்தி, ஒளிபரப்பினால் லாபம் வரும் என்று வெறும் வியாபார நோக்கே இங்கு தலை தூக்கி நிற்கிறது.
 
ஊடகங்கள் அந்த 'யாரும்' என்பதை வெளிக்கொணர வேண்டாமா? மக்களின் குறையை காண்பிக்கும் இவர்கள், நடவடிக்கை எடுக்க வேண்டியவர்களை சந்தித்து 'என்ன செய்யப்போகிறீர்கள்?' என்ற கேள்வியெழுப்பி, காத்திருக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்வழி காட்டவேண்டாமா? அதை விடுத்து 'வீடுகளில் கடல் நீர் புகுந்தது', 'மக்கள் நடுத்தெருவில் நிற்கிறார்கள்' என்று பிளாஷ் செய்தி போட்டு தங்களின் வியாபார லாபத்தை மட்டுமே பார்க்கிறார்கள்.
 
'யாரும்' வந்து பார்த்துவிட்டால் மட்டும் நம் குறை தீர்ந்து விடுமா? ஏன் நமக்குள் ஒரு ஒற்றுமை இல்லை. நமக்கு நாமே ஏன் தோள் கொடுத்துக்கொள்வதில்லை. யாரோ ஒருவரின் 'பார்வை' மட்டும் நமது பிரச்சனைக்கு தீர்வல்ல. ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து, இருப்பதை பகிர்ந்து ஏன் வாழக்கூடாது. ஒற்றுமையாக சென்று தேவைகளை அரசிடம் (ஆகிம்ஸா வழியில்) ஏன் முறையிடக்கூடாது. கடந்த மூன்று நாட்களாக ஒரே செய்தி, ஒரே பிரச்சனை, ஒரே குமுறல். விடியல் தான் வந்தபாடில்லை.
 
ஊடகங்களே மக்களின் பிரச்சனையை வெளியுலகுக்கு காட்டுவது மட்டும் உங்கள் கடமை அல்ல. அதற்கான தீர்வை எடுத்துக்காட்ட வேண்டியதும் உங்கள் கடமை தான்.

Wednesday, December 28, 2011

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்:

இனிய நண்பர்களே!
 
உங்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 2012 - ஏ வருக! வளம் தருக!

லோக்பால் :

அம்புலி காட்டி
அடம்பிடிக்கும் குழந்தைக்கு
அமுதூட்டும் தாய்!
அங்கே அது பாசம்!
 
லோக்பால் என்று சொல்லி
ஏதோ ஒரு பாலை
நமக்கூட்டும் அரசு!
இங்கே அது வேஷம்!
 
லஞ்சத்திற்கு இங்கே
அன்பளிப்பு என்று பெயர்,
வஞ்சதிற்கு இங்கே
அன்பு-அழிப்பு என்று பெயர்
 
விழித்துக்கொள் தோழனே
இது பருவமழை அல்ல
இவருடம் பொய்த்தால்
அடுத்த வருடம் மகசூல் பெற!
 
ஊழலுக்கு எதிர்க்குரல்
கொடுத்து உறங்கும்
சத்தியத்தை விழித்தெழ செய்வோம்!
நம் நாட்டிலிருந்து
லஞ்சத்தை விழுந்தோட செய்வோம்!

Monday, December 26, 2011

தமிழல்லா தமிழ் வார்த்தைகள்:

நமது அன்றாட வாழ்க்கையில் தமிழ் போர்வையில் உலா வரும் பிறமொழி வார்த்தைகள் தமிழின் தன்மையை மாற்றி விடுகின்றன. அவை பெரும்பாலும் செய்தித்தாள் மற்றும் தொலைகாட்சி செய்திகள் வழியே பரவுவது நிச்சயம் ஆரோக்கியமானதல்ல. பிற மொழி சொற்கள் பரவாயில்லை, சில சமயங்களில் ஆண்பால் பெண்பால் பிரச்சனைகள் வரும்போது கொஞ்சம் வருத்தமாக இருக்கும். உதாரணமாக குங்குமம் இதழில் வெளிவரும் கைத்தொழில் சார்ந்த கட்டுரையில் 'இதில் இவர் நிபுணி' எழுதுவார்கள். நிபுணர் என்பது ஆண்பால் என்பது எனக்கு இதுவரை தெரியாது. நண்பருக்கு பெண்பால் நண்பி மற்றும் வில்லனுக்கு பெண்பால் வில்லி என்றும் பிறகே என் சிறுமூளையால் புரிந்துகொள்ள முடிந்தது.
 
தலைப்பில் எதுகை, மோனை வேண்டுமென்று பிறமொழி கலப்பில் ஈடுபடும் எழுத்தாளர்கள் பலர். 'இன்று ஸ்டிரைக் வாபஸ்' இது முதலிடமென்று மார்தட்டிக்கொள்ளும் தினசரி செய்திதாள் தலைப்பு. அழகிய தமிழை வளர்க்கிறோம் என்று மிக அருமையாக 'கெடுக்கும்' செயல் கண்டிக்கப்படவேண்டியது. பத்திரிக்கை சுதந்திரம் என்று ஒரு மொழியை சிறுக சிறுக கொல்வது எந்த விதத்தில் நியாயம். சமானியனை அணுக அவன் மொழியில் செய்தியை தருவதே சிறந்தது என்று வாதிடும் மனிதர்களும் உண்டு. அவர்களை போலவே நீங்களும் தவறாகவே சொன்னால் அவர்களுக்கு தன்னுடைய தவறு எப்பொழுது புரிவது?
 
மொக்கை, களாசல், ஃபிகர், இவை இன்றைய இளைய தலைமுறையின் புதுத்தமிழ். 'அந்த ஃபிகர் மொக்கை மச்சான்', 'ஃபிலிம் மொக்கைடா', 'உடம்பு ரொம்ப பேஜார் பண்ணுது' இவை படித்த அனைவரும் பேசும் செந்தமிழ். சென்னையில் மட்டுமில்லை, தமிழகம் முழுவதும் தமிழ் செத்துக்கொண்டுதான் இருக்கிறது. ஆங்கிலேயன் அவன் மொழிக்கு இடையில் தமிழ் கலப்பதில்லை. ஏன்? தமிழனாய் பிறந்து 'ஆங்கிலம்' சரளமாக பேசுபவர்கள் மறந்தும் இடைச்செருகலாக தமிழை பயன்படுத்துவதில்லை. ஆனால் தமிழ் பேசும் பொழுது மட்டும் பல மொழிகளின் கலப்பு ஏன்?
 
தமிழுடன் கலந்துவிட்ட சமஸ்கிருத வார்த்தைகளை பற்றி பேசவில்லை தோழர்களே. அது முடிவில்லா பிரச்சனை. என்னுடைய இந்த பதிவில் எத்தனையோ சமஸ்கிருத வார்த்தைகள் எனக்கு தெரியாமலேயே நுழைந்துள்ளன. நமது அடிப்படை கல்வி அப்படி. எடுத்துக்காட்டு: ஆரோக்கியம், தினம், பத்திரிக்கை, வார்த்தை - இப்படி பல.
 
அர்த்தமில்லா வார்த்தைகள் பற்றிய எனது குமுறல் எரிமலை போல் ஒவ்வொரு நாளும் என்னுள் கொதித்துக்கொண்டே இருக்கிறது.
 
(பி.கு. ஆரோக்கியம் - நலம், தினம் - நாள், பத்திரிக்கை - செய்தித்தாள், வார்த்தை - சொல். இதன் மூலம் 4 தமிழல்லா வார்த்தைகளை அடையாளம் காட்டிய திருப்தி)

Thursday, December 22, 2011

நாணயம்:

 செயல் - 1 : பெட்ரோல் பங்கிற்கு சென்றிருந்தேன். என் பைக்கில் 100 ரூபாய்க்கு பெட்ரோல் போடச்சொன்னேன். அவரும் பம்பை இயக்கி நிரப்ப துவங்கினார். ரூ.99.52 வந்தவுடன் நிறுத்திவிட்டு, அடுத்த வண்டியை அழைத்தார். நான் அவரிடம் மெதுவாக 'நான் 100 ரூபாய்க்கு போடச்சொன்னேன்' என்றேன். அவரும் 100 க்கு தான் போட்டிருக்கிறேன் என்று கூறிவிட்டு, இன்னும் கொஞ்சம் விட்டால் 100.22 ஆகிவிடும், முதலாளி திட்டுவார் என்று கூறிவிட்டு தன் வேலையை தொடர்ந்தார். நுகர்வோருக்கு 50 பைசா நஷ்டம் ஆனாலும் பரவாயில்லை. தன்னுடைய 20 பைசா தான் முக்கியம் என்று நினைக்கும் இவர்களை என்னவென்று சொல்வது.
 
செயல் - 2 : மொபைல் டாபப் செய்ய சென்றிருந்தேன். ரூ.99 க்கு ரேட் கட்டர் போடச்சொல்லி ரூ.100 கொடுத்தேன். அவரும் பெற்றுக்கொண்டு டாபப் செய்தார். மீதி ரூ.1 ஐ தரவேயில்லை. இதோ தருகிறேன் பொறுங்கள் என்று சொல்லி 15 நிமிடம் காக்கவைத்து என்னை அலைக்கழித்ததுதான் மிச்சம். கடைசிவரை தரவேயில்லை.
 
பெரும்பாலும் நமக்கெல்லாம் பேருந்து பயணத்தின் போது நடத்துனரிடம் சண்டை போட்ட அனுபவம் இருக்கும். ஆனால் இவை தவிர்க்கபடவேண்டியவை. இத்தகு செயல்கள் நிச்சயம் ஆரோக்கியம் அல்ல. இவற்றுக்கு தீர்வே இல்லயா? ஏன் இல்லை. E-Money. ATM, DEBIT கார்ட் வகைகளில் சில்லறை என்ற பேச்சுக்கு இடமே இல்லை. அதுபோல் பணத்திற்கு பதில் SMART card வழங்கி இது போன்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

Tuesday, December 13, 2011

உழைப்பை திருடாதே!

கனவுக்கன்னியென்று கோயில் கட்டி
ரசிக்கும் என் இனிய ரசிகனே!
திரையில் என் அழகு கண்டு
மனமேங்கும் அருமை ரசிகனே!
 
என் இதழ் புன்னகையில் மயங்கி
மனைவி இவள்போல்
வேண்டுமென்று கிறங்கும் ரசிகனே!
நான் படும் வேதனைகள் விருதுக்காக
அல்ல உன் ரசனைக்காக!
 
நாற்று நடும் பெண்களுக்கு
சுட்டெரிக்க ஒரு சூரியன்!
திரையில் நான் அழகாய் மின்ன
படபிடிப்பில் எனை சுற்றி
பல சூரியன்கள்!
 
ஓவனுக்குள் சிக்கனை போல்
தினம் தினம் வேகிறேன் - நான்,
கோழிக்கு ஒருநாள் வேதனை
எனக்கோ தினம் தினம்!!
 
ஆனால் நீயோ,
என் உழைப்பிற்கு விலை தராமல்
என் நடிப்பை
ஆன்லைனில் இலவசமாய்
டவுண்லோட் செய்து பார்க்கிறாய்!
 
என் இனிய ரசிகனே என் வேதனையை
ஒருமுறை நினைத்து பார்
டவுண்லோட் பட்டனை
கிளிக் செய்யும் முன்பு!

Tuesday, December 6, 2011

வொய் திஸ் கொலவெறி டி!

       சமீப நாட்களாக இந்தியாவையே குலுக்கி கொண்டிருந்த விஷயம் தனுஷின் ' ஏன் இந்த கொலவெறிடி ' என்ற பாடல் (பாடல் என்றே வைத்துக்கொள்வோம்). சிறியவர்கள், இளைஞர்கள் என்று அனைவரின் வாயிலும் 'கொலவெறி' தான். அப்படி என்னதான் இருக்கிறது என்று யூட்யூப் - இல் தட்டினால் பாடல் வீடியோவுடன் பார்க்கமுடிந்தது. தங்லீஷ் என்று சொல்ல முடியாத அளவிற்கு ஏதோ ஒரு இங்கிலீஷ் உபயோக பட்டிருக்கிறது. பக்கத்திலேயே ஒரு குழந்தை பாடிய ' கொலவெறி' யையும் வெளியிட்டிருந்தனர். ஏதோ 'rhyms' போல குழந்தை என்ன அழகாக பாடுகிறது. பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
 
      மெட்டுக்காக அமைக்கபெற்ற போலி பாடல் வரிகள் தான் என்றாலும், இளைஞர்களை மையப்படுத்தி வருவதால் கொஞ்சம் ரசிக்கும் படி உள்ளது. ராகம், தாளம், அது இதுவென்று அலைபவர்களுக்கு நிச்சயம் இந்த பாட்டு பிடிக்க வாய்ப்பில்லை. குளியலறையில் பாடும் பாடலாக எடுத்துக்கொண்டால் நிச்சயம் ரசிக்கலாம். சில சமூகவலைதளங்கள் மூலமாக தான் இத்தனை 'அக்கபோரும்' என்று புலம்புபவர்களும் உண்டு.
 
       இவ்வளவு நடந்தாலும் தனக்கு எதுவுமே தெரியாதது போல் இருக்கும் 'தனுஷை' பாராட்டலாம். தொடரட்டும் தமிழ் மேல், தமிழ் இசை மேல்  அவருக்கு இருக்கும் 'கொலவெறி'.

Wednesday, November 30, 2011

பாரதியார் கவிதைகளும் புதுமை பெண்களும்:

            நிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட பார்வை கொண்டு பெண்ணாடிமை செய்வோரை தன் பார்வயாலே சுட்டெரிக்க வேண்டும், அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு வேண்டாம் என்று சொன்ன மூடர்கள் அழிய பெண்கள் உயர்படிப்பு பெறவேண்டும், உயர்படிப்பு அதன்மூலம் நல்லாட்சி நடத்தி ஆணுக்கு பெண் இளைப்பில்லை என்று நிரூபிக்க வேண்டும் என்றெல்லாம் கனவு கண்டவன் பாரதி. அப்போது அவன் கனவு மெய்யானதோ தெரியாது. ஆனால் இன்று பல புதுமை பெண்கள் இந்தியாவில் இருப்பதை கண்டு நிச்சயம் அவன் ஆத்மா சந்தோஷங்கொள்ளும்.
 
           நிற்க. இன்றைய செய்தித்தாள் (அல்லது இ-பேப்பர்) படித்தீர்களா? அதில் நீங்கள் கண்ட புதுமை பெண்களை மட்டும் (நற்செயல், சமூக சேவை, கள்ள காதல், திருட்டு, லஞ்சம், ஊழல் - என்று அனைத்தும் தான்) பட்டியலிட்டு ஒரு அட்டவணை தயார் செய்யுங்கள். அட்டவனையில் அவரவர் செயல்களுக்கேற்ப மதிப்பெண் கொடுங்கள். நற்செயலுக்கு + ve மதிப்பெண்களும், தீயதிற்கு - ve மதிப்பெண்களும் கொடுத்து (100 க்கு) பின்னால் அவற்றின் சராசரியை பாருங்கள். நிச்சயம் 30% குறைவான மதிப்பெண்களே வரும்.
 
           பெண்விடுதலை என்பது கலாச்சார மீறல் அல்ல. பெண்விடுதலை என்பது அடுத்தவரை மதியாமை அல்ல. பெண்விடுதலை என்பது மிருகத்தனம் அல்ல. ஆண்களிடம் அடிமையாய் வாழ்ந்த பெண்களை படிக்கச்சொல்லி அவர்களையும் சமுதாயத்தில் ஒரு அங்கமாக பாவித்து சமநிலையை ஏற்படுத்த நினைத்தான் பாரதி. ஆனால் வளந்து நிற்பதோ 'முள்' காடு. புதுமை என்று சொல்லி கலாச்சார மீறல்களில் ஈடுபடும் பெண்கள்தான் ஏராளம். பெரியோரை மதிக்காமல், மிருகத்தனமான வாழ்க்கைக்கு இன்று வித்திட்டு கொண்டுள்ளனர். எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்வோம் என்பதை மறந்துவிட்டார்கள்.
 
            ஆண்களுக்கு இணை என்ற பாரதி கனவு பல துறைகளில் இன்று பெண்களை முன்னேற வைத்துள்ளது. அதோடு ஆண்களின் கெட்ட செயல்களிலும் (குடி, சிகரெட், கள்ள காதல், திருட்டு, லஞ்சம், ஊழல் - என்று அனைத்தும் தான்) இணையாக செய்ய முடியும் என்றும் நிரூபித்துள்ளனர். செய்தித்தாள் பாருங்கள். பாரதி கனவு இன்று நனவாகி (partial) இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. பெண்கள் போகப்பொருளாக கருதப்பட்ட காலம் மலையேறிவிட்டது என்ற கூற்று மட்டும் மாறவேயில்லை.  விளையாட்டில் ஒரு சானியா, அறிவியலில் ஒரு கல்பனா என்று ஒருபுறம் பார்த்து ரசிக்கிறோம். விமான பணிபெண்ணாக, ஹோட்டல் வரவேற்பாளராக, விளையாட்டுத்துறையில் CHEER GIRLS ஆக, பெண்கள் இன்றும் போகப்பொருளாவதை நாமே பார்த்து ரசிக்கிறோம்.
 
          பெண்விடுதலை பாரதியின் கனவுதான். இன்றைய பெண்களின் கனவல்ல.

Monday, November 28, 2011

சமூக வலைதளங்கள் - ஒரு எச்சரிக்கை:

            தோழர்களே! நம்மில் 100 க்கு 99 பேர் பேஸ்புக் அல்லது இதர சமூக வலைதளத்தின் பயனர் என்பது மறுக்கமுடியாத உண்மை. சமூக வலைதளங்களால் நன்மைகளும் உண்டு. அதே சமயம் தீமைகளும் உண்டு. நன்மைகளை விடுத்து தீமைகளை மட்டுமே எடுத்தாளும் கயவர்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது. குறிப்பாக இளம் பெண்கள் பலர் பாதிக்கப்பட்டும் வெளியில் சொல்லாமல் உள்ளுக்குள்ளே அழுத்திவிடுகின்றனர். சமுதாய நலன் மட்டுமின்றி நமது கலாச்சாரம், பெண்களின் பாதுகாப்பு போன்றவையும் தான் கேள்விக்குறியாகின்றன.
 
        எதில் தான் இல்லை குறை நிறைகள்? உங்கள் கேள்வி நியாயமானது தான். அதே சமயம் உங்களை சார்ந்தவர்களை அல்லது தெரிந்தவர்களை காப்பாற்றவேண்டியது உங்களது / நமது கடமையல்லவா? பாதையில் புதைகுழி இருப்பது தெரிந்தும் அவ்வழியே போவோரை தடுக்காமல் வேடிக்கைபார்ப்பது எந்த விதத்தில் தர்மம். குறைந்தபட்சம் புதைகுழி பற்றி எச்சரித்து அனுப்பலாமே. மீறி செல்பவர்கள் பலனை அனுபவிக்க வேண்டியதுதான். அடுத்தவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பாதிக்கப்பட்டோர் தங்களை வெளிப்படுத்தி, அதன் மூலம் சமூக விரோதிகளை அடையாளம் காண்பிக்கலாம். இதனால் சமூகமும், பெண்களும் பாதுகாப்பாக இருப்பர்.
 
          தயவுசெய்து சமூக வலைதளங்களால் பதிக்கப்பட்டோர் யாராகினும் தயவுசெய்து தங்களை வெளிப்படுத்தி அனைவருக்கும் விழிப்புணர்வூட்டுங்கள். நீங்கள் ஏற்றும் இந்த தீபம் நல்லவர்களுக்கு வழிகாட்டும் ஒளியாகவும், தீயவர்களுக்கு தீயாகவும் இருக்கட்டும்.

Sunday, November 27, 2011

அடைமழை:

        சமீப காலங்களில் மழையே பெய்யவில்லையோ என்று நினைக்கும் அளவிற்கு கொட்டோ கொட்டென்று கொட்டி தீர்த்துவிட்டார் வருணன். தமிழகத்தில் எங்கு நோக்கினும் ஒரே மழை நீர். வெள்ளக்காட்டின் மத்தியில் மாட்டிக்கொண்டோரின் நிலைதான் கொஞ்சம் பரிதாபம். விவசாய நிலங்கள் எல்லாம் பாழ். நகரங்களில் சாக்கடைகள் நிரம்பி மழை நீருடன் கலந்து ஒரே நாற்றம். நோய் கிருமிகளை சுமந்துகொண்டு இங்கும் அங்குமாக அலைகிறது, ஆள் தேடி. சாலைகள் எல்லாம் சேதமடைந்து பல ஊர்கள் தொடர்பு துண்டித்து போய்விட்டது. குண்டும் குழியுமான பாதைகள் இன்று முழு பள்ளங்களாக மாறி வாய் பிளந்து காத்திருக்கின்றன.
 
        நிவாரண பணிகளை துரிபடுத்தும் நிலையில் அரசு. ஆங்காங்கே நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள். மக்களும் தங்களுக்குள்ளே ஒற்றுமையோடு ஒருத்தருக்கு ஒருத்தர் உதவியாய். புயல் சின்னம் அரபிக்கடலை நோக்கி சென்றதால் கொஞ்சம் தப்பித்தோம். இல்லையென்றால் மழையின் கோரப்பிடியில் சிக்கி சின்னாபின்னமாகியிருப்போம்.
 
         இந்த மழைநீரையாவது சேமிப்போமா? சந்தேகமே. நமக்கென்ன. பழிபோடத்தான் அரசும், அரசாங்க அதிகாரிகளும் உள்ளனரே. நம் கடமையை என்றைக்கு செய்திருக்கிறோம்>

Wednesday, November 23, 2011

பேருந்து கட்டணம் உயர்வு:

                    சில நாட்களுக்கு முன்பு நமது அரசு பேருந்து கட்டணம், பால் விலை, மின்கட்டணம் ஆகியவற்றை உயர்த்தி ஆணையிட்டது. ஆணையிட்டது முதல் இன்று வரை சென்னை மாநகர போக்குவரத்திற்கு இவ்வளவுதான் கட்டணம் என்று வரையறுக்கவில்லை. மற்ற பேருந்துகளுக்கு கி.மீ க்கு இவ்வளவு என்று ஏற்றியதால் அதிக குழப்பம் இல்லை. ஆனால் சென்னைக்குள் இயங்கும் பேருந்துகளில் எந்தவித வரைமுறையும் இல்லாமல் வசூலிக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் பேருந்தின் அறிவிப்பு பலகையின் நிறத்தை மட்டும் மாற்றி இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கும் 'அராஜகம்' நடந்தேறுகிறது.
 
                    எங்கள் ஏரியாவில்: பேருந்து நிலையத்தில் இருந்து எங்கள் ஏரியாவுக்கு சாதாரண பேருந்து 'M' அடைமொழியுடன் இயங்கி வந்தது. கட்டணம் ரூ.4 வசூலித்தனர். அறிவிப்புக்கு பின்பு 'M' நீக்கிவிட்டு 'Express' என்று எழுதிவிடு ரூ.8 வசூலிக்கின்றனர். 'M' சீரிஸ் வண்டிகளின் நிலை அனைவரும் அறிந்ததே. விவேக் காமெடியில் வரும் ஷேர் ஆட்டோவும் 'M' மற்றும் சாதாரண பேருந்துகளின் (White போர்டு) நிலையும் ஒன்றுதான்.  சேவையின் தரத்தை உயர்த்தமல் வெறுமனே கட்டணத்தை மட்டுமே உயர்த்தி ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வயித்தெரிச்சலை கிளப்பியுள்ளது மாநகர போக்குவரத்து கழகம்.
 
                    சேவையின் தரம் உயராமல் வெறும் விலையேற்றம் என்பது மக்களை ஏமாற்றும் வேலை. விலையேற்றத்திற்கு காரணம் முந்தய ஆட்சியின் தவறு என்றே எடுத்துக்கொண்டாலும் இப்படி ஒரே அடியில் அடித்தது கொஞ்சம் வேதனைக்குரிய விஷயம்.

Wednesday, November 16, 2011

வேலாயுதம், ஏழாம் அறிவு - திரை விமர்சனம்

இந்திய நாட்டுக்கு எதிராக செயல்படும் தீய சக்தியை அழிக்கும் ஒருவனின் கதையே இரண்டு படங்களின் மூல கருவாகும். ஒரே கதையை திரைக்கதையில் மட்டும் சில மாற்றங்களை செய்து இரண்டு விதமான படங்களாக தந்துள்ளனர். தன்னுடைய கதாநாயகனுக்காக திரைக்கதையை எழுதிய இயக்குனர்களை நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும். இதில் 'போதி தர்மர்' என்ற தமிழரின் பெருமையை எடுத்துணர்த்திய இயக்குனர் முருகதாசுக்கு தமிழர்கள் சார்பாக எனது பாராட்டுக்கள்.
 
வேலாயுதம் திரைப்படத்தில் ஹன்ஸிகாவை நீக்கி பார்த்தாலும் திரைக்கதையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. பழைய திரைப்படங்களில் வரும் கவர்ச்சி நடிகையின் வேலையை மட்டும் 'திறம்பட' செய்திருக்கிறார். ஹன்ஸிகா, பாஸ்கர், மற்றும் விஜய்யின் நண்பர்களின் பங்கு திரைக்கதையில் ஒட்டவில்லை. ஆரம்பத்தில் விஜய் மற்றும் சரண்யா மோகன் செய்யும் குறும்புக்காக அவர்களை ஊர்க்காரர்கள் விரட்டுவதைப்போல் கதையை ஆரம்பிக்கும் இயக்குனர் பின்பு தங்கையின் திருமணத்திற்கு பொருள் வாங்க சென்னை வருவதாய் குழப்பியுள்ளார். வழக்கமான 'விஜயகாந்த்', 'அர்ஜூன்' பட ஃபார்முலா தான் என்றாலும் விஜய் ரசிக்க வைக்கிறார்.
 
ஏழாம் அறிவில் கதாநாயகியின் பங்களிப்பு திரைக்கதையில் ஒன்றி வருகிறது. ஆராய்ச்சி, டி‌என்‌ஏ என்று ஏகத்துக்கு குழப்பியிருந்தாலும் தமிழனின் பெருமையை கூறுவதால் அதனை பொறுத்துக்கொள்ளலாம். பாடல்கள் சுமார் ரகம்தான். சண்டை காட்சிகள் பிரமிப்பூட்டுகின்றன. போதி தர்மராக சூர்யா வரும் சண்டை காட்சிகள் அற்புதம். புதிய, அறிவியல் சார்ந்த திரைக்கதை தமிழுக்கு ஏ.ஆர். முருகதாஸ் -ன் பரிசு. ஹாலிவுட் வில்லன் தமிழுக்கு புதுவரவு. மனோவசியத்தை வைத்துக்கொண்டு கார், பைக் -ஐ சூர்யா மேல் மோதவிடும் சண்டை காட்சிகள் புதுமை, அருமை.
 
வேலாயுதத்தில் ஜெனிலியா, ஏழாம் அறிவில் ஸ்ருதிஹாஸன் - கதாநாயகனை 'சூப்பர் மேன்' ஆக மாற்றுகிறார்கள்.
 
இரண்டு திரைப்படங்களிலும் கதாநாயகர்கள் சொல்லும் செய்தி ' உள்ளுக்குள் புதைந்திருக்கும் வீரத்தையும், விவேகத்தையும், அறிவையும் வெளிக்கொணர்ந்து தீய சக்திகளை அடியோடு அழிக்க வேண்டும்' என்பதே. அநியாயத்தை பார்த்தால் தட்டிக்கேட்க வேறு ஒருவனுக்காக ஏன் காத்திருக்கவேண்டும் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.
 
ஒரே தோசைமாவில் மசாலா சேர்த்து இரண்டு வித 'தோசைகளை' வழங்கிய இயக்குனர்களை பாராட்டியே ஆகவேண்டும்.

Saturday, November 12, 2011

தினம் தினம் தீபாவளி

       சென்னையில் குடியிருப்போருக்குத் தெரியும் நான் என்ன சொல்ல வருகிறேன் என்று. தீபாவளி திருநாள் அன்று காலை வெளியில் வந்து நின்று பாருங்கள். எங்கும் பட்டாசு ஒலி, புகை, பட்டாசினால் ஏற்பட்ட குப்பை என்று அந்த திருநாளின் கோரத்தாண்டவம் கண் முன்னே அரங்கேறும். இது சாதாரண நிகழ்வாக தெரிந்தாலும் அதனால் சுற்றுப்புறத்திற்கு ஏற்படும் தீங்கு அளவிடமுடியாத ஒன்று. விஷயத்திற்கு வருகிறேன். நம் சிங்கார சென்னையில் நாள்தோறும் பெருகும் மக்கள் தொகையினால் ஏற்படும் குப்பை, பெருகிவரும் வாகனங்களால் வரும் புகைமண்டலம் மற்றும் இரைச்சல் என்று தினம் தினம் இங்கு தீபாவளிதான்.
 
      கிராமபுரத்தில் இருந்து இங்கு குடிபெயரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அவர்களின் தேவை 'பணம்'. கிராம மக்களின் தேவைகளை சிறிது சிறிதாக பூர்த்தி செய்வதன் மூலம் இந்த 'இடப்பெயர்ச்சியை' சிறிது குறைக்கலாம். கூட்டம் குறைந்தால் குப்பையும் குறையும். குற்றங்களும் குறையும். நிறைவேற்றுமா அரசு?
 
        தனி ஒருவர் அலுவலகம் செல்ல 'இன்னோவா' எதற்கு? ஒரு மணிநேரத்தில் எனை கடந்து சென்ற 154 கார்களில் 78 தனியே சென்றவர்கள், 54 ஓட்டுனர் மற்றும் ஒருவர் மட்டும், மீதி 22 கார்களில் 5 வயது முதல் 12 வயதுள்ள பள்ளி செல்லும் பிள்ளைகள் (அதுவும் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் மட்டுமே பயணம்). இது தவிர இருசக்கர வாகனங்கள் புற்றிலிருந்து ஈசல் போல் கிளம்பி எங்கும் நிறைந்து வழிந்தோடின. அரசே ஏற்று நடத்தும் பேருந்து போக்குவரத்து இருந்தும் இவ்வளவு மக்கள் தங்களின் சொந்த வண்டியில் செல்வதேன்? ஒன்று கௌரவம் (?), மற்றொன்று கூட்ட நெரிசல். இந்த இழிநிலையை போக்க, பேருந்து எண்ணிக்கையை உயர்த்தி, பயணத்தின் தரத்தினை உயர்த்தினால் நிச்சயம் பலன் கிடைக்கும்.
 
        நிறைவேற்றுமா அரசு?

Wednesday, November 2, 2011

மழலை விளையாட்டு :

பிஞ்சு கையால்
என் கண் மறைத்து
கண்ணாமூச்சி விளையாட்டு
 
அம்மாவின் புடவையில்
ஒளிந்து கொண்டு
ஓடிப்பிடித்து விளையாட்டு
 
தத்தித் தத்தி நடந்து
சிறிது தூரம் சென்ற பின்பு
லேசாய் திரும்பி பார்த்து,
பின்னால் நான்
தொடர்வதை கண்டு
எனக்கு போக்கு காட்டி
ஒரு விளையாட்டு
 
யாரிடம் கற்கிறாய்
என் செல்ல மகளே!
இந்த புது புது விளையாட்டுகளை
எப்போதும் நீயே ஜெயிக்கிறாய்
எங்கள் மனதை
கொள்ளை கொண்டு!

காதல் மொழி

கதவிடுக்கு வழியே
காதல் வலை வீசும் விழிகள்
வெட்கத்துடன் சொல்லிற்று
'சீ போ!'
 
பதிலேதும் சொல்லாமல்
செல்லும் தென்றல் காற்றை
மடக்கிக் கேட்டேன்
என்ன சொன்னாள் என்னவள் என்று
 
பார்த்ததும் உள் மறையும்
நிலவும் சொல்லாமல் மறைத்தது
அவள் விழி மொழியின்
அர்த்தங்களை
 
ஆனது ஆகட்டுமென்று
ஏதோ ஒரு தைரியத்தில்
என்னவோ சொன்னாய் அன்று!
அது முதல்
கண்ணில் தூக்கமில்லை
வயிற்றில் பசியில்லை
மற்றும் சில பல இல்லைகள்
இன்றாவது சொல்!
 
கதவிடுக்கு வழியே
காதல் வலை வீசும் விழிகள்
வெட்கத்துடன் சொல்லிற்று
மீண்டும்
'சீ போ!'

Monday, October 24, 2011

பருவ மழை

சோவென்று பெய்யும்
புது மழையில் துள்ளித்
தாளம் போட மனமில்லை
குளிரில் நடுங்கிய
புன்னை மரத்து
குருவி குஞ்சை
பார்த்தபின்பு!
 
 

கலப்பு திருமணம்

கறவை மாடு அதிகம் கரக்க,
வயலில் மகசூல் பெருக
கனிவகை விரைவில் காய்க்க என்று
விவசாயத்தில் வேண்டும் 'கலப்பு'
 
காவலுக்கு வீரம் சேர்க்க
உடலில் கம்பீரம் மிளிர
பெண்ணுக்கு பரிசாய் கொடுக்க என்று
நாயிலும் வேண்டும் 'கலப்பு'
 
சூடு அதிகம் தாங்க
சக்தி அதிகம் பெருக
தாங்குதிறன் மிகுதியாய் என்று
உலோகத்தில் வேண்டும் 'கலப்பு'
 
பணத்திற்காக
கலப்பினை ஏற்பவன்
மணமென்று வந்தால்
கசப்பினை உமிழ்வதேன்?
 
கலப்பின் பலனை
மனதனிலும் புகுத்திட்டால்
சக்தி பெருகுமென்றும்
பலன் ஆயிரமென்றும்
புரிந்துகொள் 'சாதி வெறியனே'!

Thursday, October 20, 2011

மாணவ சக்தி

பகல் வரும் சூரியனின் ஒளி
உயிர் கொடுக்கும் ஆக்க சக்தி
புவி உயிர்க்கு!
அதையே
குவித்தால் கொன்று குவிக்கும்
அழிவு சக்தி
அது அழிக்கும் சக்தி!
 
மாணவர் என்றோர் ஆக்க சக்தி
குவிகிறது அழிப்பதற்கு மட்டும்.
ஆக்கத்தை போதிக்க ஆளில்லை!
போதிக்கத் துணிந்தோர்
அச்சக்தி முன் நிலைப்பாரில்லை.
 
கல்விபயில கூடம் செல்வோர் கூட்டு
இப்போ போதைக்கு மட்டும்.
படிப்பயண உற்சாகம்
பெண்களிடம் கலாட்டா என்று
இன்றைய மாணவ பருவம் தயாரானது
நாளைய மாணவருக்கு அறிவுரை கூற!
 
ஆக்கசக்தியை ஒன்றாக்கி நாட்டுக்கு
உயிர் கொடுக்க ஆளில்லை!
மாணவர் தனது சக்தி உணர
நமது கல்வி தரமில்லை!
 

Monday, October 17, 2011

மனதில் தோன்றியது

ஒருநாள் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தேன். திடீரென என் மூளைக்குள் ஏதோ திரும்ப திரும்ப ஒலித்துக்கொண்டிருப்பது போன்றோரு பிரமை. சிறிது ஓரமாய் நின்று அமைதியாக யோசிக்க, வார்த்தைகள் தெளிவாக புரிய ஆரம்பித்தன.
 
"நீ என்னை எவ்விதம் பார்க்கிறாயோ, நான் அவ்விதமே உனக்கு காட்சியளிப்பேன்!"
"நீ என்னை எவ்விதம் பார்க்கிறாயோ, நான் அவ்விதமே உனக்கு காட்சியளிப்பேன்!"
"நீ என்னை எவ்விதம் பார்க்கிறாயோ, நான் அவ்விதமே உனக்கு காட்சியளிப்பேன்!"
 
எனக்கொன்றும் விளங்கவில்லை. பழையபடி நடக்க ஆரம்பித்தேன். இன்றும் எனக்குள் ஒரு ஐயம், அன்று நடந்தது என்ன? வினாவுக்கு விடைதான் கிடைக்கவில்லை. தேடல் தொடர்கிறது. அன்றிரவு நல்ல இடியுடன் கூடிய மழை. மின்னல் வெளிச்சம் என்னுள் பாய்ந்த உணர்வு. இறந்து விட்டேனா? இல்லை. உணர்விருக்கிறது. பின்பு நடந்தது என்ன? உங்களுக்கு புரிகிறதா?
 
அன்று தான் நான் என்னை உணர்ந்தேன். 'நான்' என்பதை துறந்தேன். பேரின்பம் என்னை ஆட்கொண்டது.
 
----
ஒரு கற்பனை சொற்பொழிவிலிருந்து....
 

Saturday, October 15, 2011

சமுதாயம் ஒரு கேள்விக்குறி

           என்னுடைய முந்தைய பதிவு வேடிக்கை கதைதான் என்றாலும் அதில் புதைந்துள்ள உண்மைகளை பார்த்தால் நமக்கு தலை சுற்றல் வரும் போல் உள்ளது. மதத்தின் பெயரால் அனைவரும் தங்களது சுயநல தேவையை மட்டுமே பூர்த்திசெய்து கொள்கின்றனர் என்பது தெளிவாக புலனாகும். மனித நேயம் என்பதையே மறந்து தங்களது சுய லாபத்திற்காக 'மதத்தை' பயன்படுத்தும் இழிநிலை வருந்த தக்கது.
 
          ஆதியில் மனிதன் மிருகத்தோடு மிருகமாய் வாழ்ந்த காலத்தில், அவைகளிடமிருந்து தனித்து தெரிய சற்று புத்தி முற்றிய மனிதரால் தோற்றுவிக்கப்பட்டது தான் 'சமூக கட்டுபாடு'. அதுதான் நாளடைவில் மாறி மதமாய், பின்பு ஜாதியாய் உருவெடுத்தது. நாகரீகம் தோன்றிய காலத்தில், குழுக்களாய் வாழ்ந்த மனிதன் வேறொரு குழுவை எதிரிகளாக பாவித்து பகை பாராட்டி வந்தான். ஒரு நாகரீகத்தை சேர்ந்தவன் மற்றவனை பகையாக நினைத்தான்.
 
          நாகரீகம் வளர்ந்த இன்றைய காலகட்டத்தில் மதத்தின் பெயரால் பகை பாராட்டி வருகிறோம். மிருக வாழ்க்கை வாழ்ந்த 'கற்கால' மனிதர்களாய் இன்றும் நம்முள் சில புல்லுருவிகள். வெறும் பாண்ட், சட்டை, டை மட்டுமே நாகரீகமில்லை. மனித நேயம் தான் நாகரீகம். வெறும் மதப்பற்று மட்டுமே பக்தியில்லை, பிற உயிர்களின் மேல் அன்பு தான் பக்தி.

சிங்கும் மதபோதகரும் (நெட்டில் படித்தவை)

                ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வேலை முடிந்த பின்பு, வீட்டிற்கு வெளிப்புறத் தோட்டத்தில் நமது திருவாளர் சிங் அவர்கள் தந்தூரி சிக்கனையும், மட்டன் வருவலையும் செய்வது வழக்கம். ஆனால் பக்கத்து வீடுகளில் குடியிருப்பவர்கள் அனைவரும் தீவிர கத்தோலிக்கர்கள். அவர்கள் வெள்ளிக்கிழமைகளில் அசைவம் சாப்பிடுவதில்லை. அசைவம் சமைக்கும் போது அதிலிருந்து வரும் வாசம் கத்தோலிக்கர்களின் விரதத்தை சீண்டி பார்த்தது. அதனால் அவர்கள் தங்களின் மதபோதகரிடம் முறையிட்டனர்.
 
                ஒருநாள் அவரும் திருவாளர் சிங்கை சந்தித்து மதம் மாறிவிடும்படி வற்புறுத்தினார். நீண்ட நாள் போதனைகளுக்கு பிறகு அந்த நன்னாளும் வந்தது. போதகர் சிங்கின் மீது புனித நீரை தெளித்து " ஒரு சீக்கியனாக பிறந்தாய், சீக்கியனாக வளர்ந்தாய். ஆனால் இப்போது நீ ஒரு கத்தோலிக்கன்" என்றார்.
 
               பிறகென்ன, அண்டைவீட்டார் அனைவருக்கும் சந்தோஷம் தாங்கமுடியவில்லை. ஆனந்த கூத்தாடினர். ஆனால் அவர்களின் ஆனந்தம் நீடிக்கவில்லை. அடுத்த வெள்ளிக்கிழமையே அசைவத்தின் வாசம் அவர்களின் மூக்கை துளைத்தது. கோபமுற்ற அவர்கள் மதபோதகரிடம் முறையிட்டனர். உடனே புறப்பட்ட அவர் சிங்கின் தோட்டத்திற்கு விரைந்தார். இன்று அவனை கடுமையாக கண்டிக்கவேண்டும் என்று சென்றவர் அங்கு நடந்ததை பார்த்து அதிர்ச்சியுற்று மயங்கி விழுந்தார்.
 
                 நடந்தது இதுதான். நம்ம திருவாளர் மிகவும் பக்தியுடன் புனித நீர் இருத்த ஒரு புட்டியை திறந்து வறுத்த கோழி மற்றும் ஆட்டு கறி துண்டுகள் மேல் தெளித்து இவ்வாறு சொன்னார் "நீங்கள் கோழியாகவும், ஆடாகவும் பிறந்தீர்! கோழியாகவும், ஆடாகவும் வளர்ந்தீர்! ஆனால் இன்று நீங்கள் உருளை கிழங்கும் தக்காளியும்".

Monday, October 10, 2011

தேர்தல் அறியாமை:

தேர்தல் நாள்?
வினா எழுப்பினேன்
 
ரூவா ஐநூறு
கிடைக்கும் நாள்,
இலவசமாய் வாசலில்
அஞ்சி கிலோ
அரிசி கெடைக்கும் நாள்,
 
பிரியாணி கூடவே
முட்டையும் போடும்
ஃபங்சன் என்று
பலவாறு பதில்கள்!
 
எப்படி புரிய வைக்க?
 
அஞ்சுக்கும் பத்துக்கும்
சுயமரியாதையை
அடகு வைக்கும்
மூடர்களுக்கு
'உங்கள் தலைவிதி'யை
நீங்களே எழுதும்
நாளென்று!
 

காதலி !

அவள்
என் காதலி!
 
அவள்
என்
இதயம் கிழித்து
இரத்தம் பூசிக்கும்
அழகிய ராட்சசி,
 
அவளின்
கடைக்கண்
பார்வையால்
கசையடி கொடுக்கும்
கன்னி அரசி,
 
அவள்
கண்ணசைவால்
கட்டளையிடும்
காவிய நாயகி,
 
அவள்
சிரிப்பால் என்
உயிர் குடிக்கும்
சிரிப்பழகி,
 
அவள்
என் காதலி!

மாணவபருவ குறும்புகள்:

         சமீபத்தில் நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த பொது சிறுவயதில் படித்த பள்ளிகளை பற்றி பேச்சு வந்தது. அப்போது அவர் சொன்ன ஒரு 'குறும்பை' உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.நண்பர்  எட்டாம் வகுப்பு படிக்கும் பொது அரையாண்டு தேர்வின் பொது வேறு சில காரணங்களால் சரியாக படிக்கவில்லை. வேறு என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு நல்ல சினிமா பாடலை பத்து மதிப்பெண்கள் பகுதிக்கு எழுதி இருக்கிறார். தேர்வு முடிந்து விடுமுறை ஆரம்பமாக அனைவரும் மகிழ்ச்சியாக வெளியூர் சுற்ற கிளம்பிவிட்டனர்.
 
        அரையாண்டு விடுமுறை கழிந்து பள்ளிக்கு சென்ற அவருக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. ஆம். அவரின் பாடலுக்கு ஆசிரியர் 10 மதிப்பெண்கள் இட்டிருந்தார். லேசாக அதிர்ச்சியுற்றவர் ஆசிரியரை வினவ, அவர் புண் சிரிப்புடன் " பாட்டு புத்தகம் வாங்கி சரிபார்த்தேன். ஒரு பிழையும் இல்லை. அதனால் தான் முழுமதிப்பெண்கள்" என்று கூற, வகுப்பில் ஒரே சிரிப்பலை. ஆனால் மற்றுமொருமுறை இவ்வாறு நிகழ்ந்தால் 10 மதிப்பெண்கள் கழிக்கப்படும் என்று பின்குறிப்பாக கூற மாணவர்கள் இன்னும் பெருங்குரலெடுத்து சிரிக்க அன்றைய தினம் மறக்க முடியாத ஒரு 'கல்வெட்டாக' அனைவரின் மனதிலும் நீங்கா இடம்பெற்றதாக அதே களிப்புடன் பகிர்ந்துகொண்டார்.

Friday, September 30, 2011

மங்காத்தா - திரை விமர்சனம்:

            வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் அடுத்த கிரிக்கெட் திரைப்படம். 'தல' அஜீத், 'ஆக்ஷன் கிங்' அர்ஜுன் இணைந்து மிரட்டி இருக்கிறார்கள். கதைக்களம் கிரிக்கெட் சூதாட்டம் மற்றும் அதனை சார்ந்தவர்கள். கொள்ளைக்காரனிடம் கொள்ளை அடிக்கும் கதாநாயகன் கதை. கதைதான் நாயகன் என்றாலும் கதாநாயகிகள் என்று எடுத்துக்கொண்டால் செண்டிமெண்டுக்காக த்ரிஷா, ஆன்ட்ரியா மற்றும் அஞ்சலி, கவர்ச்சிக்காக லஷ்மி ராய் மற்றும் பிரபலமான வாரிசு நடிகர்கள். சலிப்பில்லாத திரைக்கதையாலும் யுவனின் இசையினாலும் படம் 'போர்' இல்லாமல் நகர்கிறது.
 
           பிரேம்ஜி அறிமுகமாகும் காட்சியில் இருந்து குண்டடி படும் கட்சி வரை நூடுல்ஸ் தலையனாக வந்து காமெடி செய்கிறார். அஜித்தும், அர்ஜுனும் ஒன்றாக போலீஸ் ட்ரைனிங் எடுத்தவர்கள் என்று கிளைமாக்ஸில் 'போட்டோ' வுடன் காட்டிவிட்டு, ஆண்ட்ரியாவுக்கு அஜித்தை தெரியாதது போல் காட்டியது, 40 வயது இளைஜனை கண்டதும் காதலிக்கும் த்ரிஷா, மனவளர்ச்சி குன்றியவராக போக்குவரத்து துறை கட்டுப்பட்டு அறையில் பிரேம்ஜி செய்யும் தில்லு முள்ளு, அந்த நால்வரும் செய்யும் அனைத்து திட்டங்களையும் அவர்களுக்கு தெரியாமலே 'ஃபாலோ' செய்வதாய் அவர்கள் பின்னாலேயே அலையும் அஜீத் என்று திரைக்கதையில் ஆங்காங்கே சிறு மற்றும் பெரிய லாஜிக் ஓட்டைகள். மற்றபடி 'மங்காத்தா' ஒரு சிறந்த பொழுதுப்போக்கு திரைப்படம்.
 
           பைக் சாகசம், கார் சேசிங் என்று அஜீத் அசத்தி இருக்கிறார். கிளிமாக்ஸ் சண்டை ஆக்ஷன் பிரியர்களுக்கு தீனி போடுகிறது. லக்ஷ்மி ராய் வரும் பாடல் காட்சிகள் ரசிக்கும்படி இருந்தாலும் வில்லத்தனமாக பணத்தை அடிக்க திட்டம் தீட்டுவதை எளிதாக எடுத்துக்கொள்ளமுடியவில்லை. கதைக்கு ஆன்ட்ரியா மற்றும் அஞ்சலி போன்ற நடிகைகளின் தேவை என்ன என்று சத்தியமாக விளங்கவில்லை. வெங்கட் பிரபு தான் விளக்கவேண்டும். அந்த பாத்திரங்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் திரைக்கதையில் இல்லை. புதுமுகங்களை கூட போட்டிருக்கலாம்.
 
           மங்காத்தா – வெங்கட்பிரபுவின் சிக்சர்.
 
 

Monday, September 26, 2011

கவித்தூறல்:

சூரியன்:
 
நாள் முழுதும்
சுட்டெரித்தாலும்
ரசிக்க மறப்பதில்லை
மேகத்திற்கு பின்புறம்
கண்ணாமூச்சி விளையாடும்
மாலை நேர
சூரியனை!
 
வானம்:
 
மழையில் குளித்து
வானவில் உடையணிந்து
வெட்க சிரிப்புடன்
வானம்!

Thursday, September 22, 2011

கடவுளும் நானும் – IV (பக்தி வியாபாரம்):

         இப்பொருள் விற்பனைக்கு அல்ல என்று சில நுகர்பொருட்களில் பார்த்திருக்கலாம். அவை அரசால் ஏழைகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டவை. அவ்வாறு இறைவன் மக்களுக்கு இலவசமாய் வாரி இறைப்பது 'அருள்' தான். அதற்கு மனிதன் செய்யும் கைமாறு தூய பக்தி. ஏதோ சங்ககால கடவுள்கள்தான் 'இலவச' அருள் வழங்கினார்கள், இப்போதெல்லாம் அப்படி இல்லை என்று கூறுமளவிற்கு 'பக்தி' வெறும் வியாபாரமாகி போய்விட்டது.
 
         ஸ்வாமி தரிசனம் ரூ.500, சிறப்பு பூஜை ரூ.350, தட்சணை ரூ.51, பூ மற்றும் பழம் கொடுத்தால் கடவுளின் பூரண நல்லாசி உங்களுக்குத்தான். கோவிலுக்கு வெளியே நம்ம யானையார் ரூ.1 வாங்கி கொண்டு ஆசீர்வதிப்பார். விலங்கு என்பதால் 'ரேட்' குறைவு. மற்றபடி எல்லாம் ஒன்றுதான்.
 
        பரிகாரம் செய்தால் செய்த பாவம் போய்விடும். இது லேட்டெஸ்ட். கொலை செய்துவிட்டு அரசுக்கு ஏதேனும் 'பரிகாரம்' செய்துவிடலாமே. எதற்காக காவல் துறை, நீதிமன்றம், சட்டம், தண்டனை. ஒருவரின் வாழ்க்கையை கெடுத்துவிட்டு இறைவனுக்கு பரிகாரம் செய்வதால் வாழ்வை இழந்தவனுக்கு மீண்டும் கிடைக்குமா? 'கொன்றால் பாவம் தின்றால் போச்சு' பழமொழியை உருவாக்கியவர்களே நாம் தானே. எங்கே திருந்தபோகிறோம்.
 
         ஆடு, மாடு, கோழி என்று கடவுளுக்கு பலி கொடுத்து, ஒரு உயிரை வதைத்து இறைவனை குஷிப்படுத்தும் கடமை உணர்ச்சியை என்னவென்று சொல்ல!

Tuesday, September 20, 2011

கடவுளும் நானும் – III (பெயர்கள் பலவிதம்):

              இஸ்லாமியர் வணங்கும் கடவுளுக்கு ஒரே பெயர் 'அல்லா'. கிறித்துவர்கள் வணங்கும் கடவுளுக்கும் ஒரே பெயர் 'ஏசு'. இந்துக்கள் வணங்கும் கடவுளுக்கு மட்டும் ஏன் ஆயிரமாயிரம் திருநாமங்கள். தெருவுக்கு தெரு கோயில். ஒவ்வொரு கோயிலிலும் கடவுளுக்கு வேறு வேறு பெயர். கடவுளுக்கு பெயர் சூட்டு விழா நடத்த நாம் யார். நடத்துபவன் அவனே என்று சப்பை கட்டுபவர்கள் விளக்கம் கூறட்டும். இந்தியாவில் மொழி, இனம், ஜாதி, மதம் என்று அனைத்திலும் வேறுபட்டு, ஊழலில் ஒற்றுமையாய் வாழ்ந்துகாட்டி 'வேற்றுமையில் ஒற்றுமை' கண்டோம். கடவுளுக்கும் அதே நிலையை கொடுத்துள்ளோம். வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் அனைத்தும் வேறு வேறு கதைகள் கூறினாலும் 'உண்மை' என்பது ஒன்றாகத்தான் இருக்கவேண்டும். அந்த 'உண்மை' என்ன?
 
            இறைவனின் ஆதி என்ன?
 
            Linux என்ற ஒரு கணினி OS உண்டு. அதனை யார் வேண்டுமானாலும் தனது இஷ்டத்திற்கு மாற்றியமைத்துக் கொள்ளலாம். அதனை பிறருக்கும் கொடுக்கலாம். எந்தவித கட்டுப்பாடும் இல்லை. அது போல் யார் வேண்டுமானாலும் கடவுளின் உருவத்தை மாற்றியமைத்து இது என் கடவுள் என்று சொல்லிக்கொள்ளலாம். கட்டுப்பாடு இல்லை. நமது விநாயகர் படும் பாடு இருக்கிறதே... வாயில்லாபிள்ளை. கம்ப்யூட்டர் விநாயகர், கிரிக்கெட் விநாயகர், அந்த விநாயகர், இந்த விநாயகர் என்று கடவுளை விளையாட்டு பொம்மை போல் பாவிக்கும் கொடுமை கலியுகத்தில் நடக்கிறது. இதையெல்லாம் பொறுத்துக்கொள்ளும் கடவுளுக்கு இவை 'தெய்வக்குற்றம்' ஆகாது.
 
           ஏன் மற்ற மதங்களில் உள்ளது போன்று இந்துக்கடவுளை ஒரே 'பெயரில்' வணங்கக்கூடாது? கூட்டு பிரார்த்தனை ஒரே திசை நோக்கி, ஒரே நிலையில், ஒரே ஒரு கடவுளிடம் செய்தால் தான் பலன். இல்லையேல் ஆழ உழாமல் அகல உழுத கதைதான்.

Friday, September 16, 2011

கடவுளும் நானும் – II (கருவறை):

             கோவில்களில் கடவுளை இருளில் வைத்திருப்பதேன்? கோவில் முழுவதும் இருளில், காற்றோட்டமில்லாமல் இருப்பதேன்? சுற்றுப்புறம் சுகாதாரமில்லாமல் அசுத்தமாக இருப்பதேன்? கோயிலென்றால் இப்படித்தான் இருக்க வேண்டுமா? அந்த காலத்தில் மின்சாரம் கிடையாது. அதனால் இருள் எங்கும் பரவி இருந்தது. இப்போது? கருவறை இருளில் கடவுளை வைத்து 'ஒளிகொடுப்பவன்' இவனே என்ற பொய்யுரை கடவுளை கோபமூட்டுவதில்லை. அண்டவெளி இருள். அதனால் தான் கடவுள் கருவறையும் இருள் என்று விளக்கம் கூறுபவர்கள் உண்டு. ஆனால் கடவுளுக்கு கோபமே வருவதில்லை.
 
              இறைவனை பூஜிக்க ஒரு மொழி. அந்த மொழி தெரிந்த, ஒரு குறிப்பிட்ட வகுப்பினை சேர்ந்தவர்கள் மட்டுமே அந்த 'மொழி'யில் இறைவனை பூஜிக்கலாம். மற்றவர்கள் சுற்றி நின்று வேடிக்கை மட்டுமே பார்க்கவேண்டும் (புரிந்தாலும் புரியாவிட்டாலும்). பின்பு அவர் கொடுக்கும் 'எதையும்' பிரசாதமாக ஏற்றுக்கொள்ளவேண்டும். அவரது தட்டில் தட்சணை என்ற பெயரில் பணம் போட்டாகவேண்டும். பிறகு உண்டியல் எதற்கு? கோவில் வாசலிலும் பிச்சைக்காரர்கள், உள்ளேயும். இவ்விதிகள் எதற்காக ஏற்படுத்தபட்டன? யாரால் விதிக்கப்பட்டன?
 
               கருவறை கடவுளை தரிசிக்க 0.5 நொடிகள் மட்டுமே. அதற்கு 8 மணிநேரம் நீண்ட வரிசை. அப்படியே வரிசையில் சென்றாலும் கருவறை அருகில் நின்று கொண்டு 'சீக்கிரம் வா, வேடிக்கை பார்க்காதே' என்று கடவுளை வேடிக்கை பொருளாக்கி கூச்சலிடுகின்றனர். கடவுளுக்கு கோபமே வருவதில்லை.
 
              திரையரங்கத்தில் நமது விருப்ப கதாநாயகனின் நடிப்பை பார்ப்பதற்கு முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, முற்றம் என்று பணத்தை வாரி இறைக்கிறோம். அதே போல் இன்று கோவில்களில் தரிசனத்திற்கு ரூ.1000, ரூ.500, ரூ.250, ரூ.100 மற்றும் இலவச தரிசனம் என்று கடவுளை நாடக கோமாளியாக்கி இருக்கிறார்கள். கடவுளுக்கு கோபமே வருவதில்லை.
 
               உலகில் சக்தி வாய்ந்தது பணபலமே! என்று பட்டிமன்றம் நடத்தி தீர்ப்பு சொல்லாத குறைதான், கடவுள் மட்டும் மௌனமாய்.

கடவுளும் நானும் – I (மனித சாயம்):

            கடவுள் என்பவர் யார்? எங்கே இருக்கிறார்? என்ற கேள்விகள் எல்லாம் பழைய திரைவசனங்களாக மாறிப்போய் இன்று கடவுள் 'எந்த வடிவில்' இருக்கிறார் என்ற ஐயம் தலைதூக்கி நிற்கிறது. மனித வடிவில் வடிக்கப்பட்ட கடவுளின் உருவம் 'மனிதனின்' இயல்புகளுடன் இருப்பது போன்ற பிரம்மையை ஏற்படுத்தி சென்றுள்ளனர் நம் முன்னோர். பலவகையான குழப்பங்களையும், குளறுபடிகளையும் விதைத்து சென்றுள்ளனர். எந்த ஒரு செயலுக்கும் சரியான விளக்கமில்லை. விளக்கிச்சொல்ல ஆளும் இல்லை. மீறி வினா எழுப்பினால் 'தெய்வக்குற்றம்'. தினம் நாம் வணங்கும் கடவுளை அறிய ஏன் இத்தனை கட்டுப்பாடுகள்.
 
           நான் எந்த கோட்பாடுகளுக்கும் எதிர் கேள்வி கேட்கவில்லை. விளக்கம் தான் கேட்கிறேன், ஏன் கோபிக்கிறார்கள் என்று பக்தன் ஒருவன் புலம்பிச்செல்வதை பார்த்தேன். ஏன் இந்த நிலை. அனைத்து மதங்களிலும் எல்லாம் விரிவாக, எளிதாக, சாதாரண மக்களுக்கும் புரியும்படியாக கோட்பாடுகள், விதிமுறைகள், கட்டுப்பாடுகள் இருக்கும் போது, பழமை வாய்ந்த இந்து மதத்தில் ஏன் இந்த 'இருள்'. குடும்பத்துடன் அருள்பாலிக்கும் இறைவனை அடைய 'துறவு' தான் வழி என்ற பாரபட்சம் ஏன்? சகோதரன், மாமன் , மச்சான் உறவு கொண்ட கடவுள்களை வணங்குபவர்கள் வேறு வேறு ஜாதியாய், உயர்வு தாழ்வு பாராட்டி வாழ்வதேன்?
 
மனிதர்களின் சாயம் கடவுளுக்கு பூசப்பட்டது ஏன்?

Wednesday, September 14, 2011

ரயில் பயணங்களில்:

தினமும் ரயில் பயணத்தின் போது என்னை பாதித்த சில நிகழ்வுகள்,
 
1. சுமார் 48 முதல் 54 வயதிருக்கும் இளைஞர்களின் அரட்டை (கொட்டம்): அதே பெட்டி, அதே இருக்கைகள். தினமும் அவர்களை அங்கு பார்க்கலாம். எல்லாம் ஒரு வயதினர் என்பதால் வாடா... போடா... என்று வசனங்கள் இருக்கும். பரவாயில்லை. ஆனால் சிறிது நேரத்திற்கு பிறகு அவர்களின் பேச்சு வேறு திசையில் பயணிக்கும். ஒருவர் மற்றவரை விளையாட்டாக 'ஓட்டுவதாக' நினைத்துக்கொண்டு சில அந்தரங்க விஷயங்களை கிளறுவார். அவரும் சளைத்தவர் அல்ல. கேட்ட கேள்விக்கு கொஞ்சம் அதிகமாகவே பதில் சொல்வார். அப்படியே இறங்கும் இடம் வரை அவர்களின் கொட்டம் தாளமுடியாது. "அருகில் பள்ளி குழந்தைகள், கல்லூரிப் பெண்கள், பணிக்கு செல்லும் பெண்கள் இன்னும் பலர் இருப்பதையும் மறந்து அப்படி என்ன அரட்டை அதுவும் பொது இடத்தில்" என்று கேட்க பலர் நினைத்தாலும் அவர்களின் நாக்கு வாய்க்குள்ளேயே சிறை வைக்கப்படுகிறது. அரட்டை தேவைதான். அதுவே மற்றவர் மனது புண்படும்படி, அதுவும் இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டியாக வேண்டிய வயதில் தேவையா?
 
2. அதே பெட்டியில் சற்றுத்தள்ளி ஒரு பெண்மணி குழந்தைகளுடன்: பள்ளிக்கு செல்லும் தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் (4 மற்றும் 3 வகுப்பு பயில்பவர்கள்) அவசரமாக ஏறும் பெண் பலமுறை தடுக்கி அடுத்தவர் மீது முட்டி, மோதி ஏறுவதை தினமும் பார்க்கலாம். தினமும் அந்த குழந்தைகளுக்கு 'சிற்றுண்டி' அங்குதான். குழந்தைகள் சாப்பிடும் போதே தலைசீவி, பவுடர் பூசி தயார் செய்வார்.(ஏறும் பொது தூங்கு மூஞ்சியாகவே இருக்கும்) அவரின் பேச்சின் மூலம் அவர் பணிக்கு செல்லும் பெண் அல்ல என்பது தெரிந்தது. இத்தனைக்கும் காலை 8 மணிக்கு நடக்கும் விழயம் இது. ரயில் பயணமோ வெறும் 20 நிமிடங்கள். மிஞ்சிப்போனால் ஒரு குழந்தையை தயார் செய்ய அரை மணிநேரம், சமைக்க ஒரு மணிநேரம் என்று எடுத்துக்கொண்டாலும் காலை 6 மணிக்கு எழுந்தால் கூட போதுமே. சீரியல் பைத்தியங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளின் மனநிலை என்னவாகும்? இந்த சிறுவயதிலேயே நேரத்தின் அருமை தெரியாமல் வளர்க்கப்படும் பிள்ளைகளின் எதிர்காலம் என்னவாகும்?
 
3. படியில் தொங்கும் ஆண், பெண்: உள்ளே இடமிருந்தாலும் இறங்கும் வழியில் தொங்கும் 'இளைஞர்'கள், நம் பாதையை மறிப்பதோடு காற்றையும் உள்ளே வரவிடாமல் தடுக்கின்றனர். சில நேரம் 'பெண்கள்' பெட்டியிலும் இதே நிலைமை. ஆணுக்கு பெண் சளைத்தவரில்லை என்று இப்படித்தான் நிரூபிக்க வேண்டுமா? இன்னும் சிலர் ஒருபடி மேலே போய் பெண்கள் பெட்டி தானே என்று தலைசீவுவது, புடவையை சரி செய்வது என்று சகட்டு மேனிக்கு நடக்கின்றனர், வண்டி பிளாட்பார்ம்-இல் வந்து நின்றுவிட்டது கூட தெரியாமல்!
 
மற்றும், தேவையற்ற அரட்டை, நேர மேலாண்மை இல்லாமை, இடம் பொருள் ஏவல் தெரியாமல் நடத்தல், செல்போனில் 'லவுட்ஸ்பீக்கர்' இல் மட்டுமே பாட்டு கேட்பது, அருகில் இருப்பவரை பற்றி சிறிதும் கவலைப்படாமல் போதை பாக்கு மென்று ஜன்னல் வழியே துப்புவது, பெட்டி கொஞ்சம் காலியாக இருந்தால் கொஞ்சம் 'சில்மிஷ'த்தில் ஈடுபடுவது என்று நமது சக மனிதர்களின் 'சேட்டைகள்' இன்னும் எத்தனையோ.
 
நாகரீக வளர்ச்சி அடைந்துவிட்டதாக மார்தட்டிக்கொள்பவர்கள் கொஞ்சம் சென்னை மின்சார ரயிலில் பயணம் செய்து பாருங்கள். இறங்கும் போது நிச்சயம் என் புலம்பல்கள் புரியும்.

Tuesday, September 13, 2011

அறியாத மொழி அழகு :

அறியாமை:
 
வண்டொன்று பூ தேடி
ஊரெல்லாம் அலைகிறது!
பூக்கள் எல்லாம்
என்னவளைத்தேடி சென்றது
தெரியாமல்!
 
மொழி:
 
திகட்டுகிறது
தேனிசை
அவள் கண்களின்
குயிலிசை
கேட்ட பிறகு!
 
அழகு:
 
குயிலின் நிறம் போல
கூந்தல் கருமை
 
தாமரை மலர் போல
மலர்ந்த முகம்
 
மலரின் தேனைப் போல
உதிரும் புன்னகை
 
ஆனால்!
இதயம் மட்டும்
தங்கத்தை போல
ஏழை என்னால்
அடைய முடியாத
உயரத்தில்!

Friday, September 9, 2011

வீட்டு மருத்துவம்:

அமிலத்தன்மை நீங்க:
 
1. 8-10 அரிசிகளை எடுத்துக்கொள்ளுங்கள்
2. காலை சிற்றுண்டிக்கு முன்பு அல்லது எதுவும்  சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீரில் விழுங்கவும்
3. இவ்வாறு 21 நாட்கள் செய்துவர அமிலத்தன்மை நீங்கும்.
 
ரத்த கொழுப்பு குறைய:
 
1. கொட்டை பாக்கை எடுத்து சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
2. சாப்பிட்ட பின்பு 30-45 நிமிடங்களுக்கு நன்றாக வாயில் போட்டு மென்று பிறகு துப்பிவிடவும்.
3. பாக்கானது உமிழ்நீரில் கலந்து ரத்தத்தை இளகுவாக்கி எளிதில் ஓட வைக்கிறது.
 
உயர் ரத்த அழுத்தம் குறைய:
 
1. சிறிதளவு வெந்தயங்களை எடுத்துக்கொள்ளுங்கள்
2. காலை சிற்றுண்டிக்கு முன்பு அல்லது எதுவும் சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீரில் விழுங்கவும்
3. இவ்வாறு 30 நாட்கள் செய்துவர உயர் ரத்த அழுத்தம் குறையும்.
 
ரத்த சர்க்கரை கட்டுப்பட:
 
1. வெண்டைக்காயை இரண்டு துண்டுகளாக்கி ஒரு டம்ளர் தண்ணீரில் இரவு முழுவதும் போட்டு வைக்கவும்.
2. காலை சிற்றுண்டிக்கு முன்பு வெறும் வயிற்றில் அந்த நீரை குடித்துவர ரத்த சர்க்கரை கட்டுப்படும்.
 
குறிப்பு: இந்த மருத்துவக்குறிப்புகள் புத்தகங்களில் படித்தவை. என் சுய அனுபவம் அல்ல.

Thursday, September 8, 2011

முகம் :

முப்பது வருடம் கழித்து ஒரு இனிய சந்திப்பு, கல்லூரி தோழர்கள் சங்கமிக்கும் சிறு திருவிழா, வாழ்க்கை ஆரம்பித்த இடத்திற்கு மீண்டும் ஒரு பயணம், ஏதோ கனவுகளோடு கூட்டத்தில் என் கண்கள் யாரையோ தேட, எங்கு நோக்கினும் வயதானவர்கள் கூட்டம், அதோ அங்கே நிற்பது அவன்... இல்லை அவர்...அவர் ஜாடையில் ஒரு யுவன். என் நினைவுகள் பின்னோக்கி செல்ல, அப்படியே அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தேன்.
 
பாடம் படித்ததை விட உன் காதல் கடிதங்கள் படித்ததுதான் அதிகம். கல்லூரி வகுப்புகளில் நேரம் போக்கியதைவிட உன்னுடன் பூங்காவில் பொழுதை போக்கியது தான் அதிகம். படித்தோம் வாழ்க்கையை. மறந்தோம் உலகத்தை. வருடங்கள் உருண்டோடி, இருவரும் மணம் முடித்தோம் வேறு வேறு மணமேடையில். நான் அமெரிக்காவிற்கும் நீ மதுரைக்கும் பறந்தோம்.நான் கலாச்சாரம் தவறாமல் கணவர் பணி செய்து, பிள்ளையிரண்டு பெற்று கடமை ஆற்றியாகிவிட்டது. இடையில் இந்தியா வரவே முடியாத சூழ்நிலை நம் இருவரையும் நிரந்தரமாக பிரித்தது. தொலைதொடர்பு வளர்ந்துவிட்ட இந்நாளில் இருபது வருட பிரிவு பெரிதில்லைதான்! வெறும் டைரி மட்டும் உன் நினைவுடன், முகவரிகள் பல மாறிய பின்பு தொலைந்தது நம் கடித தொடர்பு. நம்மை தொலைத்துவிட்டோம் வாழ்க்கை எனும் சக்கரத்தில்!
 
"ஆன்டி" என்ற அழைப்பு எனை உலுக்க, சுயநினைவுத் திரும்பினேன். "அப்பா இதை உங்களிடம் சேர்க்க சொன்னார்" என்றவன் ஏதோ ஒரு புத்தகத்தை என் கையில் திணித்தான். அது நீ எழுதிய 'சுய சரிதை'. நீ மதுரை கல்லூரி பேராசிரியர் மற்றும் ஆதரவற்ற பெண்கள் இல்லத்தின் நிறுவனர் என்பதை அறிய முடிந்தது. மற்றபடி கல்லூரி காலங்கள் பற்றி ஒரு வார்த்தை கூட உண்மையில்லை. உன் மகனிடம் கேட்டேன்" அப்பா எப்படி இருக்கிறார்". அவனின் கைகள் மேல் நோக்கி காட்டின உன் இருப்பிடத்தை.
 
கனத்த மனதோடு அமெரிக்கா திரும்பினேன் உன் 'சுய சரிதையோடு'. சொல்லி இருக்கலாம் உன் மகனிடம் உன் நடத்தையை பற்றி. வெறும் பொழுது போக்கான உன் காதலை பற்றி. மனம் வரவில்லை, உன் பழைய முகத்தை அப்படியே உன் மகனிடம் பார்த்த பின்பு.

Monday, August 29, 2011

தண்டனை :

பசுவிற்கு பெண்ணும்
தனக்கு ஆணும் வேண்டி
கிடா வெட்டினான்
பால்காரன்,
 
காளை கன்றையும்
பெண் குழந்தையும்
அருளினான் இறைவன்,
கிடாவை கொன்ற
பாவத்திற்காக!

Saturday, August 27, 2011

முதிர்கன்னி:

பிரம்மன் படைப்பில் ஜோடி இல்லாமல் தனியே வாழ(ட) சபிக்கப்பட்டவள். 'உனக்கென ஒருவன் பிறக்காமலா இருப்பான்' என்ற கூற்றை பொய்யென உணர்த்துபவள். பெண்ணின் திருமணவயது 21 என்ற சட்டத்திலிருந்து தப்பித்தவள். இன்னும் எத்தனயோ விளக்கங்கள் உண்டு 'முதிர்கன்னி' என்ற வார்த்தைக்கு. முதலில் தந்தை, அடுத்து சகோதரன், பின்பு கணவன், கடைசியில் பிள்ளை என்று முல்லைகொடியாய்  'துணை' சார்ந்தே வாழ்ந்து பழக்கப்பட்ட பெண்ணினம், தனிமை சாபத்துடன் வாழ்வது சாவினும் கொடுமையானது.
 
வெறும் தோலும் சதையும் மட்டும் விலைபோகும் இந்த சமுதாயத்தில் 'மனசுக்கு' மதிப்பில்லை. உடல் அழகில்லை என்று ஒடுக்கப்பட்டோர் சிலரே என்றாலும், கேட்கப்பெற்ற வரதட்சணை கொடுக்கமுடியாமல் முடங்கிப்போனோர் பலர். 'முதிர்க்கன்னி'யின் சோகத்திற்கு பின்னே இருப்பது 'வரதட்சணை' தான். ஆம். அழகு நிலையங்கள் பல உண்டு அழகில்லா பெண்ணை அழகு பெற செய்வதற்கு. ஆனால் விடிவே இல்லை 'பொன்' இல்லா பெண்ணுக்கு.
 
கைம்பெண்ணுக்கு கூட நலவாழ்வு கொடுக்க ஆளுண்டு. 'முதிர்கன்னிக்கு' என்றும் சாப விமோசனமே இல்லை. தனியே வாழ்ந்து 'சாதிக்கும்' திருமணமான பெண்களுக்கு ஈடாக வெகுண்டெழ நினைத்தாலும் சமுதாயம் தனது கேலிப்பேச்சால் அவளை கூண்டுக்கிளியாக மாற்றிவிடுகிறது. பெண்ணே பெண்ணை இழிவுபடுத்தும் நிலைக்கு ஆளாகி பின்பு மரணத்தை மணந்தோர் ஏராளம்.
 
இலவச தாலி மட்டும் போதுமா இவர்களின் கண்ணீர் துடைக்க? நல்ல கல்வியும், தகுதிக்கு வேலைவாய்ப்பும் அல்லவா வேண்டும் இவர்களின் துயர் துடைக்க.

Friday, August 26, 2011

மீனவப்பெண் :

மீனவ புதுப்பெண்
காத்திருந்தாள்
கடல் சென்ற
கணவனுக்காக,
 
திரும்ப வந்தது
படகு மட்டும்
ரத்தக்கறை
தோட்டாவுடன்!
 
பாவம்!
மீனுக்கு தெரிவதில்லை
இந்திய எல்லையை
கடந்துவிட்டோம் என்று!

Thursday, August 25, 2011

தீண்டாமை:

சமீபத்தில் என் நண்பர் ஒருவரின் கிராமத்திற்கு சென்றிருந்தோம். இன்றும் அந்த ஊரில் 'அவர்கள்' கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. உயர்ந்த சாதி மக்களின் வீட்டிற்குள் செல்ல அனுமதியில்லை. அப்படியே படியில் கால் பட்டுவிட்டாலும், உடனே கழுவி விடுகின்றனர். ஆனால் வயல்களில் வேலை செய்வது, தோட்டங்களில் காவல் காப்பது, மற்ற எடுபிடி வேலைகள் செய்வது 'அவர்கள்' தான்.அவர்களின் உழைப்பு வேண்டும். உறவு வேண்டாமா?
 
அவர்களுக்கு தனி கோயில் உண்டு. அவர்களே பூஜை செய்துகொள்வர். இப்படி பல விதமான கொடுமைகள் இன்றும் இருப்பது வேதனை அளிக்கிறது. உள்ளூர் கோயில்களில் 'தீட்டு'. அதுவே திருப்பதி, பழனி, திருத்தணி போன்ற பெரிய கோயில்களுக்கு பொருந்தாது. கடவுளுக்கும் 'தீட்டில்' நம்பிக்கை உண்டோ? உள்ளூர் தேவதைகளுக்கு மனிதர்கள் விதித்த 'எல்லைகள்' உண்மைதானோ? தன் எல்லைக்குள் இருக்கும் 'அவர்கள்' தன்னை வெளியில் இருந்துதான் வணங்கவேண்டும், ஆனால் வெளியூர் கோயில்களுக்குள் செல்ல அனுமதி உண்டு. ஆண்டவா! என்ன இது. உன் சட்டத்திலும் 'ஓட்டை'. தண்டனை (தாழ்ந்த குலத்தில் பிறந்ததற்கு) என்றால் பாரபட்சமின்றி அல்லவா இருக்க வேண்டும்.
 
'Cloud Computing' காலத்திலும் 'தீண்டாமை'. மூடர்களே! உங்கள் சுயநல கூட்டில் இருந்து வெளியே வாருங்கள். உலகம் எவ்வளவு அழகு. அதனை 'அவர்களும்' அனுபவித்துவிட்டு போகட்டும். ஏன் ஒரவஞ்சனை? இயற்கை உனக்கென ஒன்று, அவர்களுக்கு ஒன்று என தனியே எதையும் படைக்கவில்லை. நீயே ஏன் முட்டுக்கட்டை போடுகிறாய். உனக்கேது அந்த உரிமை?
 
காலம் நிச்சயம் நல்ல வழியை காட்டும் என்ற நம்பிக்கையுடன் ஆண்டவனிடம் ஒரு விளக்கம் வேண்டுகிறேன், "ஒருவனுக்கான அந்த ஒருத்தியை ஏன் அவன் சாதியிலேயே படைக்கிறாய். அப்படி என்றால் சாதியையும் மதத்தையும் நீதான் படைத்தாயா? ஆம் என்றால், ஏன்? பதில் சொல்!"

Wednesday, August 24, 2011

மதமாற்றமா? மனமாற்றமா?

மதம்மாறி வேண்டிய பின்பு
வாரி கொடுத்த ஆண்டவன்
செவிமடுக்கவில்லை
மனம்மாறி கெஞ்சியபோது!
 
மனிதர்களின் மதப்பித்து
கடவுளையும்
விட்டு வைக்கவில்லை!
 
ஆண்டவா!
நீயே சொல்!
தேவை மனமாற்றமா?
மதமாற்றமா?

மலர்:

மெல்லிதழ் திறந்து
காலை பனி அருந்தி
எனை பார்த்து
புன்னகைக்கும்
இயற்கை அழகு இல்லை
வெளிநாட்டிலிருந்து
வரவழைத்த
அலங்கார
பிளாஸ்டிக்
மலர்களில்!

வானவில்:

காலை பெய்த
அமில மழையில்
சாயம் போனது
வானவில்!

Tuesday, August 23, 2011

அதிகார துஷ்ப்ரயோகம்:

"நான் நெனச்சா உன்ன இல்லாம பண்ணிடுவேன்"
"நான் நெனச்சா உன்ன பொய் வழக்குல உள்ள தள்ளிடுவேன்"
"நான் நெனச்சா உன்ன பணி இடமாற்றம் செஞ்சிடுவேன்"
"நான் நெனச்சா உன் சொத்தை எல்லாம் அழிச்சிடுவேன்"
 
"நான் மனசு வெச்சாதான் உனக்கு ப்ரமோஷன்"
"நான் மனசு வெச்சாதான் இந்த ஃபைல் அடுத்த மேசைக்கு போகும்"
"நான் மனசு வெச்சாதான் இந்த ப்ராஜக்ட் பிரச்சனை இல்லாமல் நடக்கும்"
"நான் மனசு வெச்சாதான் உன் மேல் உள்ள பழியை தொடைக்கமுடியும்"
 
இவை திரைப்படத்தில் வரும் 'பன்ச்' டயலாக் இல்லை. தினசரி நாம் கேட்கும் சிலரின் 'மிரட்டல்' மொழிகள். அதிகார துஷ்ப்ரயோகம். ஆம். அதிகாரம் இருப்பவன் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற இழிநிலை இன்றைய இந்தியாவை ஆட்டிப்படைக்கிறது. ஏன்? நான் நினைத்தால் 100 பேருக்கு நல்ல வேலைவாய்ப்பை வழங்குவேன், 4 குடும்பங்களை வாழ வைப்பேன், சட்டம் ஒழுங்கை பாதுகாப்பேன் என்று யாரும் சூளுரைப்பதில்லையே? ஒருவனை அழிக்க பயன்படுத்தும் அதிகாரத்தை, ஒருவர் வாழ உபயோக படுத்தலாமே? நாம் ஏன் செய்வதில்லை? நமது பலத்தை ஏன் எப்பொழுதும் பலவீனமானவர்களிடமே காட்டுகிறோம்?
 
பி.கு:என்றைக்கு தான் அவரவர் தனக்கு இடப்பட்ட வேலையை (மட்டும்) சரியாக பார்க்கப்போகிறோம்?

Tuesday, August 16, 2011

பிச்சை:

இந்திய திருநாட்டில் 'வேற்றுமையில் ஒற்றுமை' என்று மார்தட்டிக்கொள்ளும் இக்காலத்தில் நாமெல்லாம் பெருமை பட்டுக்கொள்ளவேண்டிய இன்னொரு விஷயம் 'பிச்சை'. ஆம். இந்தியாவில் 'பிச்சைக்காரர்கள்' இல்லாத இடமே இல்லை. இன்ன ஜாதி, இன்ன மதம், இன்ன இனம் என்று இல்லாமல் ஒரே 'இனமாய்' உள்ளனர். பெருமை பட இது போதாதா?  இங்கு பிச்சைக்காரர்களில் எதற்கும் வழியில்லாதவன், கொஞ்சம் இருப்பவன், எல்லாம் இருப்பவன் என்று பலவகை உண்டு. பிச்சையை ஒழிக்க முடியுமா என்று தெரியவில்லை. முடிந்தவரையில் குறைக்க முயற்சி செய்யலாம். (நாளை 'வல்லரசு' என்று மார்தட்ட வேண்டுமே).
 
முதல் வகை: சாலையோரம் அனாதையாய், உடம்பெல்லாம் அழுக்கெறி, உண்ண உணவின்றி, இருக்க இடமின்றி, உயிர் வாழ்வதற்கே கையேந்த வேண்டிய நிலையில் இருப்பவர்கள் இவர்கள். வயதானவர்கள், பிள்ளையால் கைவிடப்பட்டோர், வழி தவறி வந்தவர்கள், மனநிலை சரியில்லாதவர்கள் இவ்வகையை சார்ந்தவர்கள். இவர்கள் ஆதரவு தேடி அலையும் 'கொடி' போன்றவர்கள். இவர்களிடம் வெறுமனே பரிதாபம் மட்டும் காட்டாமல், ஏதேனும் ஒரு மறுவாழ்வு மையத்திற்கு தகவல் தந்து உதவலாம்.
 
இரண்டாம் வகை: மின்சார ரயிலில் இவர்களை பார்க்கலாம். நன்றாக குளித்து, சிகை அலங்காரம் செய்து, ஏதேனும் ஒரு வாத்தியத்துடன் களமிறங்கும் 'பார்வை' இல்லாதோர் இந்த வகையில் அடக்கம். அவர்களின் தேவையை பூர்த்தி செய்து கொள்ளுமளவிற்கு பொருள் பெற்றவர்கள் இவர்கள். இவர்களுக்கு அதே ரயிலில் ஏதேனும் விற்று சம்பாதிக்கும் 'பார்வை' இல்லாதோர் எவ்வளவோ மேல். அவர்களிடம் பொருள் வாங்குவதன் மூலம் நாளைய பிச்சைக்காரர் ஒருவரை குறைக்கலாம். அதே போல் கை, கால், பார்வை அனைத்தும் இருந்தும் வெறுமனே பிச்சை எடுப்பவர்களும் உண்டு. ('ஏதோ ஒரு பாட்டு' - தெலுங்கில் பாடி கொல்பவர்கள்).
 
மூன்றாம் வகை: பள்ளி, கல்லூரி, கோயில், அரசு அலுவலகம் என்று இவர்களை எங்கும் பார்க்கலாம். பள்ளி சிறப்புக்கட்டணம் என்று பெற்றோரை சுரண்டுபவர்கள், கல்லூரி வளர்ச்சிநிதி என்று மாணவர்களை சுரண்டுபவர்கள், தட்சணை என்ற பெயரில் பக்தர்களை நோகடிப்பவர்கள், லஞ்சம் என்ற பெயரில் பொது மக்களை அலைகழிப்பவர்கள் அனைவரும் இவ்வகையை சேர்ந்தவர்கள். முதல் இரண்டு வகையினரால் எந்த ஆபத்தும் இல்லை. பொருள் கொடுக்கவிட்டால் அடுத்தவர்களை நாடி சென்று விடுவர் அல்லது வசை படி செல்வர். ஆனால் இந்த மூன்றாம் வகையினர் மிகவும் ஆபத்தானவர்கள். நாட்டின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாய் இருப்பவர்கள். இவர்களை நம்மால் ஒன்றும் செய்யமுடியாது. சட்டம்தான் பதில் சொல்லவேண்டும்.
 
இந்த மூன்று வகை மட்டுமில்லாமல் இன்னும் பலவகை 'பிச்சைக்காரர்கள்' உண்டு. பேருந்து மற்றும் ரயிலில் பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பவர்கள், முக்கிய இடங்களில் வரிசையில் நில்லாமல் 'பண' பலத்தால் முன்னே செல்பவர்கள், கலப்படம் செய்பவர்கள், அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்களை கடத்துபவர்கள், வண்டியில் அனைத்தும் இருந்தும் 'ஓவர் ஸ்பீடு' என்று பணம் பறிப்பவர்கள், நடைபாதையில் கடை போட அனுமதித்து 'கமிஷன்' அடிப்பவர்கள், பொருட்களை அதிக விலைக்கு விற்பவர்கள், லஞ்சம் கொடுத்து 'லாபம்' அனுபவிப்பவர்கள் என்று பட்டியல் நீள்கிறது. இவர்கள் அனைவரும் மூன்றாம் வகையினை சேர்ந்தவர்கள். நாட்டின் வளர்ச்சியை அரிக்கும் 'விஷ' உண்ணிகள். இவர்களை அழிக்காமல் இந்தியா என்றுமே ' வல்லரசு' ஆக முடியாது. வறுமை கோட்டுக்கு புதிய விளக்கம் கொடுத்து 'ஏழ்மையை' வெறும் ஏட்டில் மட்டும் அழித்த இன்றைய ஆள்பவர்கள், ஊழலுக்கு புதிய விளக்கம் கொடுத்து அதற்கு 'நியாய' சாயம் பூசி, இந்தியாவை காகிதத்தில் மட்டும் 'வல்லரசு' ஆக்குவார்கள் போலிருக்கிறது.
 
பிச்சைக்காரர்கள் இல்லா நாடு இந்தியா என்ற புகழை பெற நம்மால் இயன்றதை செய்வோம். வாழ்க இந்தியா. வளர்க ஊழல் மன்னிக்கவும் வளர்க _______ , என்ன சொல்வதென்று தெரியவில்லை (கோடிட்ட இடத்தை நிரப்பிக்கொள்க).

Saturday, August 13, 2011

சுதந்திரதின வாழ்த்துக்கள்:

இந்தியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த சுதந்திரதின வாழ்த்துக்கள். பெரியோர்கள் அரும்பாடுப்பட்டு பெற்றுத்தந்த 'சுதந்திரத்தை' கட்டிக்காப்போம். ஊழல், லஞ்சப்பேய்களை விரட்டியடிப்போம்.

கவிதை தொகுப்பு:

சாண்ட்விச்:

இரு ஆண்களுக்கு
இடையில்
ஒரு பெண்ணின்
பைக்
பயணம்!

குமுறல்:
எங்களின்
பள்ளி கல்விக்கு,
சிறிது நாட்கள்
புத்தகங்கள் தான்
இல்லை.

ஆனால்
எங்கள் பள்ளியில்
வெகுநாட்களாய்
ஆசிரியர்களே இல்லை!
 
நீதித்துறை
தலையீட்டால்
புத்தகங்கள் கிடைத்தன.
எந்தத்துறை
தலையிட்டால்
ஆசிரியர்கள்
கிடைப்பார்கள்?
 
வானம் பார்த்த
பூமி போல
வாசலை நோக்கி
கண்ணீர் விழிகளுடன்
நாளைய
இந்திய தூண்கள் (?)
 

Thursday, August 11, 2011

நாங்களும் உங்கள் 'நண்பர்கள்' தான்:

காவல்துறையில் பணிபுரியும் அனைத்து தோழர்களுக்கும் ஒரு சிறு விண்ணப்பம். ஐயா, சில நாட்கள் முன்பு லேசான தூறல். அதுசமயம் குடையுடன் மக்கள் நடப்பது என்பது சாதாரண விஷயம். அதுபோல் தான் அன்றும் ஒரு பெரியவர் குடையுடன் கூட்டத்தில் நடந்து வந்தார். ஆளில்லா ரயில்வே கிராசிங் – ல் வரும் பொது ஒரு இளம் பெண்ணின் குரல், 'கொடைய மடக்கி புடிச்சினு போயா" என்று. அந்த பெண்ணுக்கு சுமார் 20 அல்லது 21 வயதிருக்கும். சீருடை அணிந்திருந்தார். சமீபத்தில் தான் பணியில் சேர்ந்திருப்பர் என்று நினைக்கிறேன். தலையில் தொப்பி இல்லை என்பதால் அவர் பணி முடிந்து வீட்டிற்கு செல்கிறார் என்பது உறுதி. அப்பெரியவர் 'ஏம்மா, தூறல் போடுதே, உனக்கு கஷ்டமாயிருந்தால் கொஞ்சம் பொறுமையுடன் சொல்லக்கூடாதா?' என்றார். அதற்கு 'அப்படிதான் யா பேசுவேன், மூடிகினு போ' என்று பொரிந்து விட்டு சென்று விட்டார்.
 
ஐயா, நீங்கள் எப்போதும் குற்றவாளிகளை கையாள்பவராக இருக்கலாம். அதற்காக மக்கள் அனைவரையும் 'குற்றவாளிகள்' போல் நடத்துதல் சரியா? நாங்களும் உங்கள் 'நண்பர்கள்' தான். எங்களுடனும் அன்பாக பேசுங்கள். பொது இடத்தில் வயதுக்கு சிறிது கரிசனம் காட்டலாம். சிலர் மக்கள் குடும்பத்துடன் நடக்கலாம், ஆசிரியர் மாணவர்களுடன் நடந்து செல்லலாம், ஏன், ஊர் பெரியவர் மக்களுடன் நடந்து செல்லலாம். அனைவரின் முன்பாக 'அவமதிப்பது' என்பது சரியாகுமா? சராசரி குடிமகன் ஒரு குற்றவாளியா?
 
கண்டிக்கும் உரிமை உங்களுக்கு மட்டும் தான் உண்டு. தேவைப்பட்டால் அனுமதியுடன் 'தண்டிக்கும்' உரிமையும் உண்டு. அதனை சாமானிய மக்களிடம் தான் காட்டுவதா? பேருந்து பயணத்தின் போது படியில் தொங்குவோரை இறக்கி விடுங்கள். தேவைப்பட்டால் 10 நிமிடங்கள் ரோட்டோரமாய் நிற்க சொல்லுங்கள். தவறே இல்லை. ஆனால் அனைவரின் முன்பிலும் '....யே, உள்ளே போயேன்' என்று திட்டுவது நிச்சயம் மனதை காயப்படுத்தும். மற்றொரு சம்பவம். ஒருநாள் போக்குவரத்தை சரிசெய்யும் தோழர் ஒருவர், 'அந்த பக்கம் எங்கே போற. அதான் பிளாக் பண்ணி வச்சிருக்கில்ல. இப்பிடி போ' என்று சற்று காட்டமாகவே சொல்லிக்கொண்டிருந்தார். மேலோட்டமாக அவரின் செயல்பாடு சரியென்றாலும், அணுகுமுறை தவறல்லவா?
 
இதனால் மக்கள் அனைவரும் சரி என்று வாதிடவில்லை. சூழ்நிலை, வயது பார்த்து கொஞ்சம் 'அன்பாகவும்' நடந்து கொள்ளலாமே என்று தான் சொல்ல வருகிறேன். மக்களும் சற்று யோசித்து நடக்க வேண்டும். சூழ்நிலையை பார்த்து, புரிந்து நடக்க வேண்டும்.
 
தோழர்களே, தனிமனித ஒழுக்கத்தை கடைபிடிக்க உதவுங்கள். மாறாக மனங்களை காயப்படுத்தாதீர்கள்.
 
நாங்களும் உங்கள் 'நண்பர்கள்' தான்.

Monday, August 8, 2011

காஞ்சனா - திரை விமர்சனம்:

"கொலையுண்டவன் கொலையாளிகளை ஆவியாய் வந்து பழிவாங்கும்" பேய் கதை. அதை சிறிது மசாலா தூவி விருந்து படைத்திருக்கிறார் இயக்குனர் லாரன்ஸ். மாலை 6 மணிக்குமேல் 'பேய்' பயம், இரவு சிறுநீர் கழிக்கவும் தாயின் துணை, பகலில் அதிபயங்கர வீரன் என்று பல காட்சியமைப்புகள் முனி முதல் பாகத்தை அடிக்கடி நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளன.
 
வெறும் பாடலுக்காக மட்டும் வந்து போகும் கதையின் நாயகி லஷ்மி ராய், ஒரே ஒரு காட்சியில் வரும் வீட்டு வேலைக்காரி, கதாநாயகன் அதிரடி அறிமுகத்திற்காக வரும் கிரிக்கெட் போட்டி என்று படத்தில் ஒட்டாத பல அம்சங்கள் நிறைந்துள்ளன. காதலியை வெறுப்பேற்ற வரும் பாடல் காட்சி 'வாழ்வே மாய'த்தை நினைவுபடுத்துகிறது.
 
சுப்ரீம் ஸ்டார் 'சரத்குமார்' திருநங்கையாய் அசத்தியுள்ளார். அவர் வரும் காட்சிகள் அனைத்தும் அழுத்தமாக, விருவிருப்புடன் உள்ளன. படத்தின் சில பல குறைகளை சமன் செய்கிறது அவரின் பள்ளி மேடை பேச்சு.
 
லாரான்சின் 'ஜவுளிக்கடை' நடிப்பு பிரமாதம். வீட்டில் குளிக்கும் போது மஞ்சளை பார்க்கும் பார்வையிலேயே 'அனைத்தையும்' புரியவைத்துவிடுகிறார். நடிப்பில் நல்ல முதிர்ச்சி. திருநங்கைகளின் பிரச்சனைகளை கையில் எடுத்தது பலம். இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம். இருந்தாலும் அவரின் முயற்சிக்காக ஒரு 'சபாஷ்'.
 
நில அபகரிப்பு வில்லனாக வரும் நபருக்கு திரைக்கதையில் சரியான முக்கியத்துவம் தரப்படவில்லை. சர்வ சாதாரணமாக செத்துப்போகிறார். காணாமல் போன தன் கோஷ்டியினரை பற்றி 'சாமியாரிடம்' முறையிடுகிறார். சாமியாரும் 'நீ கொலை செய்து புதைத்த சடலங்களை....' ரீதியில் பேசுகிறார். போலீஸ் எங்கே? திரைக்கதையில் ஏன் இல்லை?
 
வழக்கமான கிளைமாக்ஸ் தான் என்றாலும் ஸ்பெஷல் ஏபெக்ட்ஸ் பின்னிஎடுக்கிறது. தேவதர்ஷணி, கோவை சரளா வயிறு புண்ணாகும் அளவிற்கு காமெடியில் மிகவும் இயல்பாக கலக்கியுள்ளனர்.
 
திருநங்கைகளும் இறைவனின் படைப்புகள் தான் என்ற நல்லதொரு செய்தியை சமுதாயத்திற்கு எடுத்து சொல்ல நினைத்த லாரான்சுக்கு எனது மனமார பாராட்டுக்கள்.

Monday, August 1, 2011

Holographic சேமிக்கும் தொழில்நுட்பம்:

Compact டிஸ்க்-கள் புழக்கத்தில் வந்ததிலிருந்து Data Storage தொழில்நுட்பம் நல்ல வளர்ச்சி அடைய ஆரம்பித்தது. காலங்கள் ஓட ஓட CD-R என்பது DVD என்று வளர்ந்தது. சினிமா மற்றும் இதர வீடியோ கோப்புகளை அதன் தரம் குறையாமல் ஒரே டிஸ்கில் சேமிக்க முடிந்தது. காலங்கள் மாற, இப்போது HDD தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பித்துள்ளது. அதன் தேவைக்கு தீனி போடும் வகையில் உருவாக்கப்பட்டது தான் Blu-Ray டிஸ்க். சுமார் 25 ஜி‌பி முதல் 50 ஜி‌பி அளவுக்கு அதில் DATA சேமிக்க முடியும்.
 
இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தானே. சரி, விஷயத்திற்கு வருகிறேன்.
 
Blu-ray டிஸ்க்கிற்கு மாற்றாக, இன்னும் அதிக கொள்ளவு திறன் கொண்ட  ஒரு DISC ஐ உருவாக்க GE யின் வல்லுனர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். அந்த தொழிநுட்பத்திற்கு 'Holographic Disc' என்று பெயரிட்டுள்ளனர். அது சுமார் 500 ஜி‌பி முதல் 1000 ஜி‌பி (1 டெராபைட்) கொள்ளவு திறன் கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு disc இல் ஒரு பெரிய மருத்துவ மனையின் அனைத்து எக்ஸ்ரே படங்களையும் சேமிக்கும் திறன் கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
 
மேலும் விபரங்களுக்கு http://news.discovery.com/tech/ge-holographic-storage-110730.html

Friday, July 29, 2011

பயம் எதற்கு:

சமீப காலமாக செய்தித்தாள்களில் அடிபடும் விஷயங்கள் 'நில அபகரிப்பு', மற்றும் முந்தைய ஆட்சியில் நடந்ததாக பல்வேறு குற்றச்சாட்டுகள்.ஆட்சி மாற்றம் ஏற்படும்போது, முந்தைய ஆட்சியில் நடந்த தவறுகளை சுட்டிக்காட்டி திருத்துதல் என்பது ஆரோக்கியமான ஒன்றுதான். ஆனால் அதுவே ஐந்து வருட வேலையாகிப்போனால் மக்களுக்கு என்னதான் நல்லது நடக்கும்? ஆளும் வாய்ப்பை இழந்தவர்கள், ஆட்சியில் இருக்கும் பொது 'தவறுகளை' கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு, இப்போது 'நடப்பவை எல்லாம் ஆளுங்கட்சியின் சதி' என்று அறிக்கை வேறு விடுகின்றனர்.
 
ஓட்டு போட்ட குடிமகனுக்கு கடைசியில் மிஞ்சுவது என்ன? தினம் காலை பரபரப்பு செய்தி. சில பல அறிக்கைகள். ஆங்காங்கே 'சாலை மறியல்', கொடும்பாவி எரிப்பு. இதை தவிர மக்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள் எதுவும் கிடைப்பதாக தெரியவில்லை. 500 ரூபாய் கையூட்டு பெரும் ஒரு சாதாரண குமாஸ்தாவை மடக்கி பிடிக்க சட்டத்தில் வழியுண்டு (அவர் ஆளுங்கட்சியை சேர்ந்தவராயினும்). ஆனால் 500 கோடி ஊழல் செய்யும் ஒரு அரசியல்வாதியை அக்கட்சி ஆட்சியில் இருக்கும் போதே தண்டிக்க முடிவதில்லை. மக்களாகிய நாமும் உயிர் பயத்தால் எதையும் வெளிசொல்வதில்லை. ஆளுங்கட்சியில் இருக்கும் சிலர் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி நியாயம் பெற இந்தியாவில் வழியே இல்லையா அல்லது நியாயமே கிடைக்காதா? புரியவில்லை.
 
ஆட்சி மாற்றத்திற்கு பிறகு எத்தனை பேர் வழக்கு போடுகின்றனர். இவர்கள் முந்தய ஆட்சி காலத்தில் என்ன செய்தனர்? காவல் துறையில் புகார் அளித்தனரா? அல்லது அளித்த புகாருக்கு பதிலேதும் கிடைக்கவில்லையா? அதிகாரதில் இருப்பவர்கள் தவறு செய்யலாமா? அவர்களை தட்டிக்கேட்க மக்களுக்கு அதிகாரம் இல்லையா?  அரசு அதிகாரிகளை கண்காணிக்க Vigilance என்றொரு துறை இருக்கிறது. அதுபோல் அரசியல் கண்காணிக்க துறை ஒன்றை ஏன் ஏற்படுத்தக்கூடாது. தவறு செய்பவனை தண்டிக்காமல் விட்டுவிட்டு தனது சுயலாபத்தை மட்டுமே குறிக்கோளாய் கொண்டவர்களால் மக்களுக்கு என்ன பயன்.
 
மக்களே! பயம் எதற்கு. தவறு செய்பவர்களை காவல் துறையின் துணை கொண்டு தண்டிப்போம். காலம் கடந்த நீதியினால் பயனேதும் இல்லை. காலத்தே பயிர் செய்வோம். காலத்தே களை எடுப்போம். சுயஒழுக்கம் ஒன்றே தீர்வு. அடுத்த தலைமுறையாவது நிம்மதியாக வாழட்டும்.

Saturday, July 16, 2011

கவிதை தொகுப்பு :

முரண்பாடு:
 
சிறிய எழுத்துக்கள்
பெரியதாய் தெரிய
லென்ஸுடன் பேனா
விலை ஐந்து
விற்கிறான்
பார்வை இல்லாதவன்!
 
காகம்:
 
இட்லி துண்டில் பங்கா?
விரட்டியது காகம்!
விதைத்து விட்டானா
மனிதன்
காகத்திற்குள்ளும்
சுயநல
விஷத்தை?
 
மரவெட்டி:
 
ஒற்றைக்கால்
தவசிகளை
வதைக்கும்
அரக்கன்.
 

Tuesday, July 12, 2011

அடைகாக்கும் சேவல் (கவிதை):




















காதல் கண்மறைக்க
பெற்றோரை விட்டு வந்து
எதுவும் தெரியாத ஊரிலே
புதிதாய்
ஒரு குடித்தனம்!
மனமெல்லாம் மகிழ்ச்சி
பின்பு கருவாகி
ஆனந்த கண்ணீருடன்
ஓரினிய வாழ்க்கை!
கையிருப்பு கரைந்த பின்பு
கூலிவேலை பல
செய்தும்
தீரவில்லை சுயதேவை,
கனவுடன் ஓடிவந்து
இன்று
கனவு மட்டும்
கையிருப்பு!
கனவை நனவாக்குபவன்
தான்
கணவன் என்று
கள்ள காதல் கண்மறைக்க,
பெற்ற குழந்தையை
கைவிட்டு
வேறு ஊருக்கு பயணம்!
கையில் குழந்தையும்
நெஞ்சில் காதல் மனைவியும்
சுமந்தவன்
குழந்தையின் பசி போக்க
இன்று சுமை தூக்கியாய்!
தாயில்லா குழந்தைக்கு
தாயாகி
அடைகாக்குது சேவல்!

Saturday, July 9, 2011

நெட்டில் படித்தவை:

சிரிப்பதற்க்கு மட்டும்:
-------------
தருமன் தனது பாட்டியின் நினைவு நாளை முன்னிட்டு அவரின் சமாதியில் மலர் கொத்தை வைத்து வணங்கிவிட்டு தன்னுடைய காருக்கு திரும்பிக்கொண்டிருந்தார். வழியில் அவர் கண்ட காட்சி அவரை மிகவும் நெகிழ வைத்துவிட்டது. அங்கு ஒருவன் ஒரு சமாதியின் முன்னே மண்டியிட்டு கதறி அழுதுகொண்டிருந்தான். ஏன் என்னை தவிக்கவிட்டு போனாய்? ஏன் என்னை தவிக்கவிட்டு போனாய்? என்று அவன் கதறியது தருமனின் நெஞ்சத்தை ஏதோ செய்தது.
 
அவனருகே சென்று ஆறுதலாய், 'தம்பி, உங்கள் தனிப்பட்ட விஷயத்தில் தலையிடுவதற்கு மன்னிக்கவும். நீங்கள் இப்படி துடிப்பதை பார்க்க மிகவும் வருத்தமாய் உள்ளது. இறந்து போனது உனது பையனா? என்று கேட்டார்.
"இல்லை".
பின்பு அண்ணனா?.
"இல்லை".
உன் நண்பனா?
"இல்லை"
.......!?!?!
 
சற்றே கோபமுற்ற தருமன், சற்று வேகமாய் " பின்னே யாருக்காக இப்படி அழுகிறாய்?" என்று கேட்க,
சிறிது நேரம் நிதானித்து பின்பு இப்படி பதிலளித்தான்,
 
"இவன் என் மனைவியின் முதல் கணவன்"
-----------
ஒரு ஊரில் ஒரு குளம் இருந்தது. அந்தக்குலத்தில் யாரேனும் வேண்டுதலோடு காசு போட்டால் நினைத்தது கைகூடும் என்ற நம்பிக்கை இருந்தது. ஒருநாள் ஒரு கணவனும் மனைவியும் அங்கு வந்தனர். கணவன் கண்ணை மூடி வேண்டிக்கொண்டு காசு போட்டான். பின்பு மனைவி கண்ணை மூடிக்கொண்டு காசை போட எத்தனிக்க, தவறிப்போய் உள்ளே விழுந்து இறந்துபோனாள். கணவன் மனதுக்குள் "அதற்குள் பலித்துவிட்டதே!".
-----------

Thursday, July 7, 2011

பருவ மழை :

கடலிடம் கடன் வாங்கி
மேகமாய் திரிந்து
மழையாய் பெய்து
பின்பு
கடலுக்கு திரும்பும் பொது
வட்டியாய்
மனித உயிர்கள்!
 
துளி துளியாய்
வானத்து நீர்
விழும்போது
வரமாய் ,
பின்பு
உயிர்களை வாங்கும்போது
சாபமாய்.
 
ஒரே மழை
இரு வேடங்களில்!

ஏன் இலவசங்கள் :

தமிழகத்தில் இப்போது இலவசங்களின் அணிவகுப்பு சற்று மும்முரமாகவே இருக்கிறது. எந்த வகையிலும் மக்கள் தானாக சிந்தித்துவிடக்கூடாது என்பதில் இன்றைய அரசியல்வாதிகள் மிகவும் கவனத்துடன் செயல்படுகின்றனர். இலவசங்களை வாரி வாரி இறைப்பதால் 'ஓட்டு வங்கி'யில் ஓட்டு குவிந்துவிட போவதில்லை. அதற்கு நடந்து முடிந்த தேர்தல் ஒரு நல்ல உதாரணம். இருந்தாலும் அவர்களும் கொடுக்காமல் விடப்போவதில்லை, இவர்களும் வாங்காமல் விடப்போவதில்லை.
 
'ஒருவனுக்கு மீனை தானமாக கொடுக்காதே, அதற்கு பதில் அவனுக்கு மீன் பிடிக்க கற்றுக்கொடு' என்பது உலகவழக்கில் உள்ள தத்துவம். அதுபோல, நம் மக்களுக்கு சிறந்த வேலைவாய்ப்பினை அமைத்து தருவதன் மூலம் அவர்களின் வறுமையை ஒழிக்கலாமே. அவர்களின் தேவையை பூர்த்தி செய்து கொள்ள நல்ல வழியை காட்டலாமே. அவர்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்தலாமே. இலவச அரிசி ஏன்? எதற்கு?
 
படிப்பதற்கு நல்ல பள்ளி இல்லை. அப்படியே நல்ல பள்ளியை கண்டெடுத்தாலும், கல்வி கட்டணம் மலை போல் அழுத்துகிறது. நல்ல தரமான கல்வி, நியாமான கல்விகட்டணம், உலக தரத்திற்கு படத்திட்டம் போன்றவற்றினை அமைத்து மக்களின் 'அறிவுக்கண்'ணை திறக்கலாமே. அரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை உயர்த்தி, தனியார் பள்ளிகளின் கொட்டத்தை அடக்கலாமே. இலவச 'மடிக்கணினி' ஏன்? எதற்கு?
 
கிராமங்களில் விவசாயம் இல்லை. இயற்கை வளங்கள் இல்லை. வாழ வழி இல்லை. சுகாதாரம் இல்லை. இப்படி பல 'இல்லை'கள் இருக்கும் போது, இலவசங்கள் எதற்கு?  ஆயிரம் 'ஏன், எதற்கு'கள் இருக்கும் போது கோடி கோடியாய் பண விரயம் எதற்கு? அவற்றை வேறு நல்ல நோக்கில் பயன்படுத்தலாமே.
 
சிந்திப்போமா இனியாவது!

Wednesday, July 6, 2011

மழலை:

ஆ..ஆ..ஆ.ஆ
மம்..மம்...மம்
பிர்ர்...பிர்ர்
க்கும்...க்கும்..
தித்..தித்..தித்
 
எந்த அகராதியில்
தேடினாலும்
கிடைக்கவில்லை
என் பிஞ்சு மகளின்
செல்ல
மழலை மொழிக்கு
அர்த்தம்!

Tuesday, June 28, 2011

ஹன்சிகா (சிறுகதை) :

எங்கள் அலுவலகத்தில் யாரேனும் நீண்ட விடுப்பில் சென்றாலோ அல்லது பிரசவ விடுப்பில் சென்றாலோ, அப்பணிகளை செய்ய தற்காலிகமாய் ஒப்பந்த அடிப்படையில் அலுவலர்களை வேலைக்கு அமர்த்துவதுண்டு. அவ்வாறு புதியதாய் பணியில் சேர்ந்த சிலரில் ஹன்சிகாவும் அடக்கம். நல்ல திறமைசாலி. வேலையில் சேர்ந்த ஓரிரு நாட்களில் மிகவும் சுறுசுறுப்பாகவும், திறமையாகவும் செயல் பட்டாள்.
 
அலுவலகம் முடிந்ததும் வீட்டிற்கு செல்ல பேருந்து நிறுத்ததிற்கு வந்தேன். அவள் சாலையின் மறுபுறத்தில் நின்றிருந்தாள். நான் முதலில் பேருந்தில் ஏறினாலோ அல்லது அவள் முதலில் பேருந்தில் ஏறினாலோ ஒருவரை ஒருவர் கடந்துதான் செல்ல வேண்டும். அவ்வாறு கடக்கையில் பரஸ்பரம் ஒரு புன்னகையை பரிமாறி கொள்வதுண்டு. ஒரு நாள் அவளை அலுவலக கேண்டீனில் காபி சாப்பிட அழைத்தேன். மறுப்பேதுமின்றி வந்தாள். சிறிது நேரம் பேசிவிட்டு இருக்கைக்கு திரும்பி விட்டோம். இவ்வாறு பல நாட்கள் சென்றன. இதை கவனித்த என் சக ஊழியர் ஒரு நாள் இது விஷயமாக அவளிடம் வம்பிழுக்க, விஷயம் விபரீதமானது.
 
பின்பு அவள் என்னிடம் பேசுவதுமில்லை. பேருந்து நிறுத்தத்தில் பார்த்தாலும் முகத்தை திருப்பிக்கொள்ள எனக்கு கோபம் கோபமாய் வந்தது. அவளிடம் கேட்டே விட்டேன். பதிலேதும் சொல்லாமல் வெடுக்கென்று சென்று விட்டாள். நாட்கள் நகர்ந்தன. அவளின் ஒப்பந்தம் முடியும் நாளும் வந்தது. எனக்கு அலுவலகத்தில் கொஞ்சம் வேலை இருந்ததால், அன்று சிறிது காலதாமதமாகவே புறப்பட்டேன். அன்று அவள் எதிர் புறத்தில் நின்றிருந்தாள். காத்திருந்தாள் என்றே சொல்லலாம். அவளை கவனிக்காததுபோல் பேருந்தில் ஏறினேன். இருக்கையில் அமர்ந்து, அவளை பார்த்தேன். அவளின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்ததை என்னால் கவனிக்க முடிந்தது. அது வெறும் கண்ணீர் மட்டுமல்ல என்பதையும் நான் கவனிக்க தவறவில்லை.

Tuesday, June 21, 2011

ஓவியம் (கவிதை) :

பெண்ணென்னும்

ஓவியம் பார்த்து

கவிதை ஒன்று

எழுதினேன்.

 

காப்புரிமை

வழக்கு போட்டான்

பிரம்மன்...

 

அவன் படைப்பை

நான்

காப்பி அடித்து

விட்டேன் என்று !!!

 

ஹைக்கூ :

கடந்து சென்றது

ரோஜாக்கள் ஒட்டிய கார்

என் கைகளில்

மல்லிகை பூ !

============================

மேகம் கறுத்தது

முகம் இருண்டது

சலவை தொழிலாளி !

============================

கோடை முடிகிறது

வருத்தப்பட்டான்

குச்சி ஐஸ் கடைக்காரன் !

============================

சிரிக்கும் பேரக்குழந்தையை

தொட்டு கொஞ்ச முடியவில்லை

வீடியோ சாட்டில்

தாத்தா, பாட்டி

============================

ஆசிரியர் என்னும் 'ஏணி' :

சமீபத்தில் கலெக்டர் ஒருவர் தனது பெண் குழந்தையை அரசினர் பள்ளியில் சேர்த்ததை செய்தித்தாளில் படித்தேன். மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. அதுவும் அவர் மிகவும் தன்னடக்கத்துடன் நடந்து கொண்டது அவருடைய மன முதிர்ச்சியை காட்டுகிறது. அரசு பள்ளிகள் ஏழைகளுக்கு மட்டும் தான் என்பதை உடைத்தெறிந்து, நல்லதொரு விஷயத்திற்கு வித்திட்டுள்ளார். அவருடைய குழந்தையும் அதை ஏற்று மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து சத்துணவு சாப்பிட்டதையும் குறிப்பிட்டு இருந்தார்கள்.
 
ஒரு வேதனைக்குரிய செய்தி என்னவென்றால் ஒரு தமிழன், ஒரு தமிழ் பள்ளியில் தன் குழந்தையை சேர்ப்பத்தை ஏதோ உலக அதிசயம் போல ஊடகங்கள் பறைசாற்றியதை 'நம் தமிழ் மண்ணின் பெருமை இப்படியா சிறுத்து போய்விட்டது என்று ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய ஒரு மிகப்பெரிய விஷயமல்லவா இது' என்று நினைத்து சிரிப்பதா இல்லை அழுவதா என்று தெரியவில்லை. எப்படியோ ஒரு அரசு பதவியில் இருக்கும் ஒருவருக்கு, தன் பிள்ளையை 'அரசினர் பள்ளி'யில் சேர்க்கும் எண்ணம் வந்ததே அதற்காக அவருக்கு ஒரு சபாஷ் மற்றும் ஒரு சிறிய பூச்செண்டும் கொடுக்கலாம். இதில் யோசிக்க வைத்த விஷயம் என்னவென்றால் அரசு அலுவலர்களே தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளுக்கு அனுப்புவதில்லை என்பதே.
 
எனது ஐயம் : ஒரு அரசு பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர் / ஆசிரியை / இதர அலுவலர் யாருமே தங்கள் குழந்தைகளை அப்பள்ளியில் சேர்ப்பதில்லை ( எங்கேயாவது ஒன்றிரண்டு பேர் விதிவிலக்காக இருக்கலாம் ). தான் பயிற்றுவிக்கும் பள்ளியில் தங்கள் பிள்ளையை சேர்க்காத ஆசிரியர்கள், மற்ற பிள்ளைகளுக்கு எப்படி மிக சிறந்த 'ஏணி' யாக இருக்க முடியும்? சிந்திப்பார்களா இனியாவது?

Saturday, June 18, 2011

புதிய பாடத் திட்டம் :

கல்வி வியாபாரம் மும்முரமாக நடக்கும் தமிழகத்தில், சம காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்று நினைக்கும்போது அப்படியே மெய் சிலிர்க்கிறது. என்ன கொடுமை 'சரஸ்வதி'? தனியார் பள்ளியில் பிள்ளையை சேர்க்க துடிக்கும் பெற்றோர் ஒருபுறம், காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்று மொத்தமாக சுரண்ட நினைக்கும் பள்ளி நிர்வாகம் ஒருபுறம், இதில் பிள்ளைகளின் பாடுதான் திண்டாட்டமாகிறது. பாவம் பெற்றோரையும் குற்றம் கூற முடியாது. வேலைப்பளு அவர்களை அவ்வாறு கட்டாயப்படுத்துகிறது. தான் கவனிக்காவிட்டாலும் பள்ளியும், ஆசிரியரும் கவனிப்பார்கள் என்று எண்ணி நல்ல தரமான பள்ளியை நோக்கி படை எடுக்கிறார்கள். இதுதான் சமயம் என்று பள்ளி நிர்வாகமும் தனி கட்டணம், சிறப்பு கட்டணம், கட்டட மேம்பாடு கட்டணம், பேருந்து கட்டணம், புத்தக கட்டணம் மற்றும் இன்ன பிற கட்டணங்களை விதித்து பெற்றோரை விழி பிதுங்க வைக்கிறார்கள்.
 
தமிழகத்தில் மட்டும் தான் இந்த நிலையா? இல்லை இந்தியா முழுவதுமே இந்த நிலை தானா? கடவுளுக்கு தான் வெளிச்சம். புற்றீசல் போல இன்று எங்கு நோக்கினும் பள்ளி, கல்லூரி என்று இருந்தாலும் இந்த கட்டண முறை அனைத்தையும் பாழ் படுத்திவிடுகிறது. இன்றைய எல்.கே.ஜி யின் விலை 20 ஆயிரம். நாளைய கல்லூரி கட்டணத்தை நினைக்கும் பொது இதயம் நின்று விடும் போலிருக்கிறது.
 
இவ்வளவு அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகள் இருந்தும் மக்கள் தனியார் பள்ளிகளை நாடுவது ஏன்? அரசு நிறுவனங்கள் தனியார் மயமாக்கல்'ஐ எதிர்க்கும் இந்நாட்டு குடிமக்கள் பள்ளிகள் தனியார் மயமாக்கல்'ஐ வரவேற்றது ஏன்? நல்ல தரமான கல்வியை தர அரசு பள்ளிகள் முன்வந்தாலும், தனியாருக்கு இருக்கும் மவுசு இவற்றுக்கு இல்லை என்றே சொல்லலாம். இதற்கு 'பாட திட்டமும்' ஒரு காரணம். உலக அளவில் ஒருவன் உயர தாய்மொழி வழி கல்வி உதவாது என்ற நல்லெண்ணம் (!) தான் காரணம். இதற்கு பாட திட்டத்தில் நல்ல மாற்றம் தேவை. மெட்ரிக், CBSE க்கு இணையானதொரு பட திட்டம் தேவை.
 
பெற்றோர்களே! தனியார் பள்ளிகளை ஒதுக்கி, அரசு பள்ளிகளின் தரம் உயர அரசுக்கு தோள் கொடுங்கள். இந்த கல்வி கட்டண பூதத்தை நாட்டை விட்டே விரட்டுங்கள்.

தப்பும் தவறும் :

நாம் தெரிந்தே செய்யும் தப்புகளும் தெரியாமல்(!) செய்யும் தவறுகளும்...
 
1. தன் உயிரை குடிக்கும் என்று தெரிந்தும் 'புகை' பிடிப்பது
2. தன் குடும்பத்தின் உயிரை சேர்த்து குடிக்கும் என்று தெரிந்தும் 'மது' அருந்துவது
3. பிறரின் உயிரை சேர்த்து குடிக்கும் என்று தெரிந்தும் 'சாலை விதி'யை மதிக்காதது
4. தன் மற்றும் உடன் வருபவரின் உயிரை குடிக்கும் என்று தெரிந்தும் 'தலை கவசம்' அணியாதது
5. மக்களின் உயிரை குடிக்கும் என்று தெரிந்தும் 'லஞ்சம்' வாங்குவது
6. நாட்டின் உயிரை குடிக்கும் என்று தெரிந்தும் 'ஊழல்' செய்வது
7. உலகத்தின் உயிரை குடிக்கும் என்று தெரிந்தும் 'பூமி வெப்பமயமாதலுக்கு' துணை போவது
8. நாளைய தலைமுறைக்கு தேவையில்லை என்று, இருக்கும் வளங்களை தின்று தீர்ப்பது
9. BLOG ஒன்றை நிறுவி இப்படி அடுத்தவங்களை குறை சொல்வது (சத்தியமா இது எனக்கு மட்டும் பொருந்தும்)
10. ......
11. .......
 
இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம்.
 
இவற்றுள் தப்பு எவை, தவறு எவை என்று நீங்கள் தான் முடிவு செய்யவேண்டும்.

காதலும் நாமும் :

சில நாட்கள் முன்பு மின்தொடர் வண்டியில் பயணம் செய்ய நேர்ந்தது. அதில் நான் கண்ட காட்சி என்னை மிகவும் பாதித்து விட்டது. ஒரு வயதான ஜோடி, பயணிகள் ஏறுமிடத்தில் அமர்திருந்தது. அதில் அந்த பெண்மணிக்கு சிறிது உடல் நிலை சரியில்லை என்று நினைக்கிறேன். பெரியவருக்கு சுமார் 85 வயதிற்கு மேலிருக்கும். அந்த தள்ளாத நிலையிலும் தான் மனைவியை மடிமேல் படுக்க சொல்லி, ஆதரவாய் அவர்களின் தலையை வருடியவாறு வந்தார். வண்டியில் அதிக கூட்டமில்லை என்பதால் அவர்களுக்கு தொந்திரவு ஏதும் ஏற்படவில்லை.
 
மெதுவாக பேச்சு கொடுத்ததில், அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு செல்வதாகவும், தங்களுக்கு தாங்கள் மட்டுமே துணை என்றும், அதில் ஒருவருக்கு எதேனும் ஆகிவிட்டால் உலகில் உயிர் வாழ மற்றவருக்கு வேறு எந்த காரணமும் இல்லை என்றும் பெரியார் புன்னகை பூத்த முகத்துடனே சொன்னார். ஆனால் முடிக்கும் பொது அவரால் தன் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. கணவன் கண் கலங்குவதை கண்ட அப்பெண்மணி அவருக்கு ஆறுதல் சொல்லி, அவரின் கண்ணீரையும் துடைத்துவிட்டார். அருகில் இருந்த அனைவரும் சிறிது நேரம் செய்வதரியாது நின்று இருந்தோம்.
 
இறங்க வேண்டிய இடம் வந்தது. அந்த பெண்மணியால் நடக்க கூட முடியவில்லை. அந்த தள்ளாத வயதிலும் தன் மனைவியை தூக்கிக்கொண்டு இறங்கிய அந்தப்பெரியவரின் மன உறுதியை பார்த்து வாயடைத்து போனேன். நிச்சயம் 'கடவுள்' துணை இருப்பார் என்று தன் மனைவியை தேற்றிக்கொண்டே அவர் சென்றதை பார்த்துக்கொண்டே என் பயணத்தை ஒருவித மனபாரத்துடன் தொடர்ந்தேன்.
 
திருமணம் முடிந்து மறுநாளே விவாகரத்துக்கு விண்ணப்பிக்கும் இன்றைய தலைமுறைக்கு, காதல் என்றால் என்னவென்று எப்படி சொல்லி புரியவைப்பது?
 
நீங்களாவது சொல்லுங்களேன் 'காதல்' என்றால் என்னவென்று?