சமீப காலமாக செய்தித்தாள்களில் அடிபடும் விஷயங்கள் 'நில அபகரிப்பு', மற்றும் முந்தைய ஆட்சியில் நடந்ததாக பல்வேறு குற்றச்சாட்டுகள்.ஆட்சி மாற்றம் ஏற்படும்போது, முந்தைய ஆட்சியில் நடந்த தவறுகளை சுட்டிக்காட்டி திருத்துதல் என்பது ஆரோக்கியமான ஒன்றுதான். ஆனால் அதுவே ஐந்து வருட வேலையாகிப்போனால் மக்களுக்கு என்னதான் நல்லது நடக்கும்? ஆளும் வாய்ப்பை இழந்தவர்கள், ஆட்சியில் இருக்கும் பொது 'தவறுகளை' கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு, இப்போது 'நடப்பவை எல்லாம் ஆளுங்கட்சியின் சதி' என்று அறிக்கை வேறு விடுகின்றனர்.
ஓட்டு போட்ட குடிமகனுக்கு கடைசியில் மிஞ்சுவது என்ன? தினம் காலை பரபரப்பு செய்தி. சில பல அறிக்கைகள். ஆங்காங்கே 'சாலை மறியல்', கொடும்பாவி எரிப்பு. இதை தவிர மக்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள் எதுவும் கிடைப்பதாக தெரியவில்லை. 500 ரூபாய் கையூட்டு பெரும் ஒரு சாதாரண குமாஸ்தாவை மடக்கி பிடிக்க சட்டத்தில் வழியுண்டு (அவர் ஆளுங்கட்சியை சேர்ந்தவராயினும்). ஆனால் 500 கோடி ஊழல் செய்யும் ஒரு அரசியல்வாதியை அக்கட்சி ஆட்சியில் இருக்கும் போதே தண்டிக்க முடிவதில்லை. மக்களாகிய நாமும் உயிர் பயத்தால் எதையும் வெளிசொல்வதில்லை. ஆளுங்கட்சியில் இருக்கும் சிலர் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி நியாயம் பெற இந்தியாவில் வழியே இல்லையா அல்லது நியாயமே கிடைக்காதா? புரியவில்லை.
ஆட்சி மாற்றத்திற்கு பிறகு எத்தனை பேர் வழக்கு போடுகின்றனர். இவர்கள் முந்தய ஆட்சி காலத்தில் என்ன செய்தனர்? காவல் துறையில் புகார் அளித்தனரா? அல்லது அளித்த புகாருக்கு பதிலேதும் கிடைக்கவில்லையா? அதிகாரதில் இருப்பவர்கள் தவறு செய்யலாமா? அவர்களை தட்டிக்கேட்க மக்களுக்கு அதிகாரம் இல்லையா? அரசு அதிகாரிகளை கண்காணிக்க Vigilance என்றொரு துறை இருக்கிறது. அதுபோல் அரசியல் கண்காணிக்க துறை ஒன்றை ஏன் ஏற்படுத்தக்கூடாது. தவறு செய்பவனை தண்டிக்காமல் விட்டுவிட்டு தனது சுயலாபத்தை மட்டுமே குறிக்கோளாய் கொண்டவர்களால் மக்களுக்கு என்ன பயன்.
மக்களே! பயம் எதற்கு. தவறு செய்பவர்களை காவல் துறையின் துணை கொண்டு தண்டிப்போம். காலம் கடந்த நீதியினால் பயனேதும் இல்லை. காலத்தே பயிர் செய்வோம். காலத்தே களை எடுப்போம். சுயஒழுக்கம் ஒன்றே தீர்வு. அடுத்த தலைமுறையாவது நிம்மதியாக வாழட்டும்.