இந்த வலைப்பூவில் தேட....

திருக்குறள்

Thursday, September 27, 2012

சிந்திக்க ஒரு நொடி:

        வழக்கமான எனது பயணத்தின் அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இரண்டொரு நாட்களுக்கு முன்பு மழை பெய்யும் நேரத்தில் மின்சார ரயிலில் பயணம் செய்ய வேண்டி வந்தது. மழையென்றால் வெறும் தூறல் அல்ல. பேரிடி மின்னலுடன் கூடிய பெருமழை. நான் பயணம் செய்த பெட்டியில் சில மாணவர்களும், மாணவ பருவ காதலர்கள் சிலரும், பொதுமக்கள் பலரும் இருந்தனர். அந்த மழையில் ஏற்படும் குளிரில் உடலில் சில மாற்றங்கள் வரும் என்பது இயற்கை தான். வயதானவர்களுக்கு நடுக்கமும், இளம் வயதினருக்கு ஒரு வித கிறக்கமும், குழந்தைகளுக்கு குதூகலமும் நிச்சயம் ஏற்பட வேண்டும். அதுதான் மழையின் சக்தி. சிறியவர் முதல் பெரியவர் வரை மழையில் நனைய உள்ளுக்குள் ஆசை இருந்தாலும் அது நிறைவேறுவது சிலருக்குதான். ஜலதோஷம், ஜுரம் என்று பயந்துகொண்டு நானும் சற்று தள்ளியிருந்தேன்.
          நான் தள்ளித்தள்ளி சென்றாலும் மழை என்னை விடுவதாயில்லை. நான் நகர்ந்து அமர்வதும் அது என்னை நனைப்பதும் என்று ஒரு விளையாட்டு போலவே வெகு நேரம் சென்றது. சட்டென்று ஏதோ தோன்ற, வாயிலை நோக்கி பார்வையை திருப்பினேன். அப்பொழுதுதான் தெரிந்தது. அங்கே மாணவர்கள் சிலர் நின்று கொண்டு கதவை திறப்பதும், நனைவதும் பின்பு அடைப்பது போல் அடைத்து விளையாடுவதும் தான் நான் நனைய காரணம் என்று. அவர்களின் சேட்டை அருகிலிருக்கும் அனைவரையும் எரிச்சலூட்டும் வகையிலேயே இருந்தது. ஆனாலும் அவர்களை அதட்ட அங்கு யாருமில்லாதது கண்டு (என்னையும் சேர்த்துதான்) நிச்சயம் ஒரு கணம் திகைத்துதான் போனேன். காரணம் ஆக்கசக்தியாக உருவாக வேண்டிய மாணவ சக்தி இப்பொழுதெல்லாம் அழிவுசக்தியாகிப்போவது தான் காரணம் என்று என்னுடன் பயணம் செய்த சக பயணி ஒருவரின் புலம்பல் என்னுள் ஏதோ செய்தது.
 
          இங்கிருந்து வெளிநாடு சென்று படிக்கும் மாணவன் தனது கைசெலவிற்கு பகுதிநேர பணிசெய்கிறான். அங்கிருக்கும் சட்டங்களை மதிக்கிறான். ஒழுக்கத்தை கடைபிடிக்கிறான். ஆனால், உள்நாட்டில் படிக்கும் மாணவனுக்கு இவை பொருந்தாமல் போவது வியப்பளிக்கிறது. பெற்றோர் பணத்தில் ஆட்டம் போடும் இவர்களைப்போன்ற இரண்டாம்தர மாணவர்களால், மாணவ சமூகதிற்கே இழுக்கு. மாணவ சமுதாயம் இப்படிதான் இருக்கவேண்டும் என்ற ஒரு வரைமுறை இந்தியாவிலேயே இல்லையா? தனக்கு பிரச்சினை என்றால் பேருந்தின் கண்ணாடி உடைக்கும் மாணவன், சக மாணவனுக்கு பிரச்சினை என்றால் ஒன்று கூடி போராடும் மாணவர்கள் ஒரு சுயநல கூட்டமாகதான் எனக்கு தெரிகிறது. இன, மத வேறுபாடு இன்றி ஒற்றுமையாக இருக்கும் ஒரு சமூகம் 'மாணவர்கள்' தான். அவர்கள் படிக்கும் வயதில் யாரைப்பற்றியும் கவலைப்படாமல் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பதெல்லாம் சரிதான். அதற்கு மற்றவர்களின் உணர்வுகளை பலி கொள்வது எந்தவித்தில் நியாயம் என்றுதான் புரியவில்லை.
 
          சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு என்று நாடே கொள்ளை போய்க்கொண்டிருக்கிறது. இதில் 'பேருந்து நாள்' கொண்டாட்டம் தான் ரொம்ப முக்கியம். ஊழலும், வன்முறைகளும் மலிந்து கிடக்கும் மண்ணில் உங்களின் கேலிக்கூத்து நிச்சயம் ஒருநாள் அனைவரையும் பார்த்து கேலியாய் சிரிக்கத்தான் போகிறது. மாணவர்களே! அரட்டையும் வேண்டும், கேலி கிண்டலும் வேண்டும். இல்லையென்று மறுப்பதற்கில்லை. அதோடு கொஞ்சம் பொறுப்பும் வேண்டும். நாடு உங்களுக்காக காத்திருக்கிறது. நீங்களோ 08:40 க்கு வரும் 'ஃபிகர்' க்காக காத்துக்கிடக்கிறீர்கள். காதல் வேண்டும். தப்பில்லை. அது பொது இடத்தில் வேண்டாம். சிந்தியுங்கள்.
 
        (பொது இடத்தில் அட்டூழியம் செய்யும் மாக்களை, மக்கள் நிச்சயம் தட்டிக்கேட்க வேண்டும்)

பள்ளிக்குழந்தைகளும் பாதுகாப்பும்:

        " நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி, சின்னஞ்சிறு கைகளை நம்பி ஒரு சரித்திரம் இருக்குது தம்பி " என்று ஒரு திரைப்பாடல் உண்டு. இன்றைய நாளிதழ்களில் கண்ணில் அடிபடும் முக்கியமான செய்தி 'குழந்தைகளுக்கு' ஏற்படும் விபத்துதான். நாளை சரித்திரம் படைக்கும் என்று எண்ணிய குழந்தை விபத்தில் மாள்வது பெருந்துயரம். எப்பொழுதும் நிகழ்ந்துக்கொண்டிருக்கும் நிகழ்வு இப்பொழுதான் வெளிச்சத்திற்கு வருகிறதா? அல்லது இப்பொழுது விபத்துகள் அதிகமாகிவிட்டதா? என்ற விவாதத்தை விடுத்து கொஞ்சம் சிந்திப்போம்.
 
         குழந்தைகளுக்கு இப்பொழுது பாதுகாப்பே இல்லையோ என்கிற ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது இந்த விபத்துகள். பள்ளியின் உள்ளே பாதுகாப்பது பள்ளியின் கடமை. அதுபோல், பள்ளியை விட்டு வெளியே வரும் குழந்தை வீடு சேரும்வரை பாதுகாக்கவேண்டியதும் பள்ளிதான். பள்ளியின் வளாகத்தை தாண்டிவிட்டால் எங்களின் பொறுப்பல்ல என்று கூறும் நிர்வாகம் நிச்சயம் தம் கருத்தை மாற்றிக்கொள்ளவேண்டும். எங்கோ ஏதோ ஒரு தொலைக்காட்சியில் நடந்த போட்டியில் வெற்றிப்பேற்ற மாணவன் 'எங்கள் பள்ளியில்' தான் படிக்கிறான் என்று போஸ்டர் அடித்து விளம்பரம் தேடும் பள்ளி நிர்வாகம் நிச்சயம் மாணவர்களின் பாதுகாப்புக்கும் உத்திரவாதம் அளிக்கவேண்டும். எங்கள் பள்ளி பாதுகாப்பானதுதான் என்பதை நிரூபிக்க வேண்டும்.
 
            பள்ளி வாகனம் வந்தது. குழந்தையை அனுப்பிவிட்டேன். என் கடமை முடிந்தது என்று நினைக்கும் பெற்றோரே! கொஞ்சம் சிந்தியுங்கள். வண்டியின் தரம், ஓட்டுனரின் நிலைமை, வண்டியில் அவசர உதவிக்கு ஆள், அவசர அழைப்பு எண்கள் இவை அனைத்தையும் சரிபார்க்க வேண்டியது உங்கள் கடமை அல்லவா. 100 ரூபாய் புடவையை 1000 முறை பிரித்து பார்க்கும் பெண்கள் ஏனோ இந்த விஷயத்தில் தலையிடுவதில்லை. ஒரு ரூபாய் செலவு செய்வதற்கு ஓராயிரம் முறை யோசிக்கும் பெற்றோர்கள் கூட தான் கட்டும் கட்டணத்திற்கு இந்த பள்ளி உகந்தது தானா? பாதுகாப்பு எப்படி? என்றெல்லாம் சிந்திப்பதில்லை. அதேபோல் வெறுமனே சமூகத்தில் ஒரு 'STATUS' க்காக ஒரு பள்ளியில் சேர்ப்பதும் கூடாது.
 
           சாலையில் நடக்கும் விபத்துகளுக்கு வாகன ஓட்டிகள் தான் காரணமென்றாலும், நமது கையாலாகாதத்தனமும் ஒரு காரணம். சாலையில் பாதுகாப்பாக வர வேண்டும் என்று நாம் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுப்பதே இல்லை. சொன்னால் மட்டும் கேட்டு விடப்போகிறானா? என்கிற அலட்சியம். 'எறும்பூற கல்லும் தேயும்' இது பழமொழி. சாலை பாதுகாப்பு விதிகளை குழந்தைக்கு சொல்லிக்கொடுக்க வேண்டியது பள்ளி மற்றும் பெற்றோரின் கடமை. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மட்டுமே இத்தகைய சாலை விபத்துகளை தடுக்க ஒரே வழி. அதே போல் பெற்றோர்களின் பாதுகாப்பு விழிப்புணர்வே குழந்தைகளை பாதுகாக்கும்.
 
          வெறும் முதல் மதிப்பெண் மட்டும் போதும். மற்றதெல்லாம் எனக்கும் தேவையில்லை என்றிருக்கும் பெற்றோர்களுக்கும், பள்ளிக்கும் ச்சயம் நான் சொல்வது ஏதோ புரியாத புதிர் போலதான் தெரியும்.

Thursday, September 6, 2012

வளர்ப்பு பிராணிகள்:

             உங்களில் பலரின் வீட்டில் வளர்ப்பு பிராணிகள் இருக்கும். அப்படி இல்லாயென்றால் உடனே ஒன்றினை உடனே வளர்க்க ஆரம்பியுங்கள். இதை நான் சொல்லவில்லை. மேற்கத்திய நாடுகளில் 'மனோதத்துவ' நிபுணர்களின் பரிந்துரை. எந்திர மயமாகிப்போன யுகத்தில் யாரிடம் எப்பொழுது கேட்டாலும் 'மன உளைச்சல்'. பணிச்சுமை காரணமாக நம்மில் பலருக்கும் 'மன அழுத்தம்' அதிகமாகி, மற்றவர்கள் மேல் எரிச்சலை கொட்டுகிறோம். இதனால் மனித உறவுகளில் விரிசல். நிம்மதி இல்லாத வாழ்க்கை. ஆனால் இதற்கெல்லாம் மருந்து 'வளர்ப்பு பிராணிகள்'.
 
               கிளி, புறா,பூனை, மீன், லவ் பேர்ட்ஸ், தவளை, ஆமை, பச்சோந்தி என்று எவ்வளவோ 'pets' இருந்தாலும் இவற்றில் முதலிடம் 'நாய்' க்கு தான். எஜமானர் எந்த நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்தாலும் அதனை மோப்பம் பிடித்து வாலாட்டிக்கொண்டே குழைந்துவரும் நாயை அவ்வளவு சீக்கிரம் யாரும் வெறுத்துவிட முடியாது. அப்படியே நீங்கள் உங்களின் கோபம் முழுவதையும் கொட்டினாலும் தன் முகத்தில் ஒரு விதமான ஏக்கத்தை புதைத்துக்கொண்டு தான் முன்னங்காலினால் உங்களுக்கு  'கைக்கொடுக்க' முயற்சிக்கும். இன்னமும் நீங்கள் உங்கள் மனநிலையிலிருந்து விடுபடவில்லை என்றால் உங்களுக்கு பிடித்த ஏதோ ஒரு பொருளை உங்கள் முன் கொண்டுவந்து போட்டு உங்களை சாந்த படுத்த முயற்சிக்கும். நமது குடும்ப அங்கத்தினர்களையும் தாண்டி நம் மீது அக்கறை கொள்ளும் ஒரு ஜீவன் எப்படி வெறும் 'விலங்கினமாக' இருக்க முடியும்.
 
                கலப்பின, உயர்ந்த ரக நாய்கள் தான் நகர சூழலுக்கு ஏற்றது என்று நம்மில் பலர் தவறாக கணக்கு போடுகிறோம். நமது தெருவில் விளையாடும் நாய்கள் எந்த விதத்திலும் குறைந்தது அல்ல. கொஞ்சம் அக்கறை கொண்டால் அழுக்கான தெருநாயும் சுத்தமாகும். கொஞ்சம் பாசம் வைத்தால் தெரு நாய்க்கும் ஒரு உறவு கிடைக்கும். பிரபல நடிகையை பார்த்து சொல்லவில்லை. நானும் ஒரு நாய் வளர்த்தேன். அது சாதாரண ரக நாய்தான். ஆயினும் அது அன்பில், அக்கறையில், விசுவாசத்தில் உயர்ந்த ரகம். நள்ளிரவில் வீடு திரும்பினாலும் எனக்காக காத்திருந்து, நான் வந்த பின்பு என்னுடன் 5-10 நிமிடங்கள் செலவழித்த பின்பு தான் உறங்க செல்லும். பலமுறை நான் வரும் வரை சாப்பிடாமல் கூட காத்திருந்த நாட்கள் உண்டு. வயோதிகம் அதனால் மரணம். இருப்பினும் எங்கள் உள்ளங்களில் நீங்கா இடம் பிடித்து இன்றும் வாழ்கிறது.
 
               ஒரு விஷயம் தான் புரியவில்லை. எனது செல்ல பிராணி இறந்த பின்பு எனக்கு வேறு ஒரு 'pet' வைத்துக்கொள்ள தோன்றவில்லை. குடும்பத்தினர் வற்புறுத்தலால் ஒரு நாயை வளர்க்க நினைத்தாலும் மனம் பழைய நாயையே இந்த புதிய உறவிலும் தேடுகிறது. அது கிடைக்காத பட்சத்தில் மனம் மற்றொரு செல்ல பிராணியை ஏற்றுக்கொள்வதில்லை. அதே போல் வளர்ப்பு பிராணிகளும் 'ஒரே ஒரு' எஜமானரை தான் ஏற்றுக்கொள்ளும். மற்றவர்கள் மேல் பாசம் காட்டினாலும் 'எஜமானர்' ஒருவரே. இந்த ஒரு வினோதமான பாசப்பிணைப்பு நிச்சயம் உன்னதமானது தான். ஆதலினால் செல்ல பிராணிகளை  வளருங்கள். அது எந்த உயிரினமாகவும் இருக்கலாம். சமீபத்தில் ஒருவர் 'மலை பாம்பை' செல்ல பிராணியாக வளர்ப்பதாக எங்கேயோ படித்த ஞாபகம்.