இந்த வலைப்பூவில் தேட....

திருக்குறள்

Friday, February 8, 2013

விஸ்வரூபம் - திரைவிமர்சனம் அல்ல

          ஒவ்வொரு முறையும் நான் எழுத அமரும்போது, இந்த தலைப்பில் இவ்வாறெல்லாம் எழுதவேண்டும் என்று நினைப்பதில்லை. அவ்வாறு நினைத்து அமர்ந்த நாட்களில் எழுத்துக்கள் கிடைக்கவில்லை. எழுத்தே இல்லையெனில் வார்த்தைக்கு எங்கு போவேன். ஆதலால் எழுதுவதை விடுத்து கிறுக்க ஆரம்பித்துவிடுவேன். பின்பு அதற்கு 'கவிதை' என்று தலைப்பிட்டு வெளியீட்டு விடுவேன். இப்படித்தான் எனது வலைபக்கத்தில் கவிதைகள் முளைத்தன. என் நண்பர்கள் அவற்றையெல்லாம் படித்துவிட்டு, உரைநடை வடிவில் ஏதோ சிறியதாக இருந்தது, என்ன அது? என்று கேட்டு என்னை வெறுப்பேற்றி விளையாடுவதுண்டு. அதற்கெல்லாம் கவலைப்படுவேனா! விடாமல் கிறுக்கிக்கொண்டுதான் இருக்கின்றேன்.
 
           இலக்கண பிழை இல்லாமல் எழுத முயன்றதுண்டு. ஆனால் நமது கல்விமுறை அவ்வாறு எனக்கு பயிற்றுவிக்கவில்லை. மதிப்பெண்கள் பெற மனனம் செய்யும் முறையே சரியென்று போதிக்கபட்டதால், அன்று மனப்பாடம் செய்த உரைநடை வாக்கியங்கள் இன்று எனக்கு கைகொடுக்கவில்லை. ஏனெனில், நான் என் எண்ணப்படியே எழுத நினைக்கிறேன். என் எழுத்துக்களை நான் ஆள நினைக்கிறேன். பலமுறை தோற்றுப்போய் அதன் வழியே போய் என் படைப்புகளை வடித்ததுண்டு. இந்த பதிவும் அப்படித்தான். இந்த எழுத்துக்கள் தானாக உருவானவை. என்னால் எழுதப்பட்டன. அவ்வளவே!
 
              ஒரு சிறந்த எழுத்தாளனாக வேண்டும் என்பது எனது குறிக்கோள் இல்லை. எனக்குள் தோன்றும் எண்ணங்களுக்கு எழுத்து-வடிவம் கொடுக்கவே இப்பணியை தொடங்கினேன். கொடுக்கப்படும் வடிவம் அனைவருக்கும் புரியவேண்டும் என்று எண்ணியதால் என் தமிழில் தொடர்ந்தேன். உலகம் முழுவதும் பரவிக்கிடக்கும் தமிழ், என்னையும் உள்வாங்கி, இப்பூவுலகெல்லாம் பரப்பியது. இன்று இந்த எழுத்தினை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் படித்து, என்னை மகிழ்ச்சியுற செய்துள்ளனர். நான் கற்ற தமிழில் என் எண்ணங்களை வெளிப்படுத்த வேண்டும் என்பது மட்டுமே எனது குறிக்கோள். ஆகையால் இந்நாள் வரை, இப்பொழுது வரை எனது எழுத்துக்களை படித்த, படிக்கும் மற்றும் படித்துக்கொண்டிருக்கும் தமிழர்களுக்கு நன்றிகள். உங்களின் வாசிப்பை நான் பணமாக்குவதில்லை. அதில் எனக்கு உடன்பாடுமில்லை.
 
            விஸ்வரூபம் என்கிற இந்த தலைப்பு கமலுக்கு மட்டுமல்ல, எனக்கும் பொருந்தும், இந்த பதிவிற்கும் பொருந்தும். இன்னொரு முறை படித்து பாருங்கள்.

Monday, February 4, 2013

பெண்களுக்கெதிரான வன்கொடுமை:

         இன்று இந்திய மண்ணில் அதிகம் விவாதிக்கப்படும் விஷயம் 'பெண்களுக்கெதிரான வன்கொடுமை'. வெகு சாதாரணமாக நடந்தேறும் கொடுமைகளினால் பாதிக்கப்படும் பெண்கள், தங்களை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மறைந்து கொள்வதால் இப்பொழுது 'பெரும்' கூட்டமாக சேர்ந்து போராடவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளோம். மாறி மாறி அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் செய்திதாள்களில் வெறும் செய்தியாக மட்டுமே வந்து போன 'டெல்லி' விவகாரம் ஒரு எடுத்துக்காட்டு. அரசு தரப்பு 'ஆழ்ந்த' அனுதாபங்களையும், 'அதிர்ச்சியையும்' வெளிப்படுத்தி தனது கடமையை முடித்துக்கொண்டது. பின்பு ஒரு குழுவை அமைத்து, அக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறை படுத்துவதாக சொல்லியதோடு சரி. தேர்தல் வருகிறதே. வேறென்ன செய்ய !!!
 
         ஒரு வார இதழில் ஒரு எழுத்தாளர் இப்படி பொருள்படும்படி எழுதியிருந்தார், 'நாமெல்லாம் வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கயவர்கள்' என்று. படித்த கணத்தில் கோபமுற்றாலும், சிறிது அந்த வட்டத்தை விட்டு வெளியே வந்து சிந்தித்து பார்த்ததில், அது 100% உண்மை என்ற விஷயம் மண்டையில் உரைத்தது. எத்தனைபேர் இக்கருத்தை ஒப்புக்கொள்வார்கள் என்று தெரியவில்லை.
 
         காலை முதல் மாலை வரை மதுபானக்கடை திறந்திருக்கும். யார் வேண்டுமானாலும் (18+) எவ்வளவு வேண்டுமானாலும் குடிக்கலாம். அப்படியே பக்கத்தில் இருக்கும் திரையரங்கத்திற்கு சென்று அங்கு ஓடும் இரண்டாம்தர திரைப்படங்களை பார்க்கவேண்டியது. வெளியே வந்து குற்றத்தில் ஈடுபடுவது. இப்படித்தான் நமது நாட்டில் குற்றம் ஆரம்பமாகிறது. இதனை தடுக்கவேண்டிய அரசு 'உயர்ரக மதுபானக்கடை' திறக்க நினைக்கிறது. சமூக நலவிரும்பிகள் 'பெண்களின் கவர்ச்சியான ஆடை', 'ஆண்களின் வக்கிரபுத்தி', 'பெண்களின் இரவுப்பயணம்', அது இது என்று தங்களுடைய கருத்தை பதிவு செய்துவிட்டு கடமை முடிந்ததென்று அமர்ந்து விடுகின்றனர். இன்னும் சிலரோ நாம் நாட்டில் கல்விதிட்டம் சரியில்லை. அதனை மாற்ற வேண்டுமென்று போர்க்கொடி தூக்குகின்றனர்.
 
        அய்யா, உயர்ந்தோர்களே! எவ்வளவு படித்தாலும், எந்த நாட்டில் போய் படித்தாலும், ஒருவன் 'குடித்தால்' அவன் மூளை வேலை செய்யாது. மூளை இல்லாதவனிடம் 'மனிதனை' எதிர்பார்க்க முடியாது. அப்புறம் சட்டமென்ன! ஒழுங்கென்ன! படிப்பதால் மட்டுமே ஒருவன் ஒழுக்கமுடையவன் ஆவதில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். தீவிர மதுவிலக்கு ஓரளவிற்கு, ஆம் மக்களே, ஓரளவிற்கு மட்டுமே இந்த பிரச்சினையை தீர்க்கும். மீதி தனிமனித ஒழுக்கத்தால் மட்டுமே விளையும். இதில் ஆண் பெண் என்ற பேதமில்லை. நமது பண்பாடு என்பது பெண்களுக்கு விலங்கு பூட்ட அல்ல என்பதை ஒவ்வொருவரும் புரிந்துகொண்டால், நாட்டில் பெண்களுக்கெதிரான வன்கொடுமை குறைந்து விடும்.
 
      பெண்களே! வக்கிர எண்ணமுடையவர்கள் வாழும் இந்த மண்ணில் உங்களை காத்துக்கொள்வது உங்கள் கடமை. தயவு செய்து  தற்காப்பு கலை ஒன்றை கற்றுக்கொள்ளுங்கள். மற்றவற்றை விட்டுத்தள்ளுங்கள்!