இந்த வலைப்பூவில் தேட....

திருக்குறள்

Thursday, December 13, 2012

2012 இல் உலகம் அழியாது

'சூரியனை மறைத்த கரும்புள்ளி : உலகம் அழியப் போவதாக வதந்தி'
 
இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் வெறும் வதந்தியை மட்டுமே பரப்புவோம் அல்லது பரப்பிக்கொண்டிருப்போம் என்பது விளங்கவில்லை. உலகமே அழியப் போகிறது என்று ஒருசாரார் இங்கே புலம்பி கொண்டிருக்கிறார்களே தவிர எந்த நாட்டின் அரசாங்கமும் இதனை பற்றி கவலைப்படுவதே இல்லை. யாரும் இது தவறான வதந்தி என்று குரல் கொடுப்பதில்லை. குரல் கொடுத்தாலும் அது அந்த அளவு வலிமையாய் இருப்பதில்லை.
 
உலகில் அறிவியல் கண்டுபிடிப்பாளர்கள் பலர் இருந்தும் இது தீர்க்க  முடியாத புதிராகவே இருப்பது என்னமோ உண்மைதான். இருந்தாலும் மக்களை ஒருநிலைப் படுத்தவேண்டியது அவர்களின் கடமை அல்லவா? இங்கே திரியும் சில வேலை வெட்டி இல்லாத சில மூடர்களின் விஷமத்தால் இன்று நாட்டில் பல்வேறு வதந்திகள் பரவுகிறது.
 
12-12-12 நல்ல நாளா? இல்லை பாவ நாளா? உடன் பிறந்த பெண்களுக்கு புடவை எடுத்து தர வேண்டுமென்று ஒரு வதந்தி. எங்கோ ஒரு கோவிலில் தீபம் அணைந்துவிட்டது. அபசகுனம் என்று ஒரு வதந்தி. இப்போது சூரியனில் கரும் புள்ளி. உலகம் அழியப்போகிறது என்ற வதந்தி. இதில் வேதனையான விஷயம் என்னவென்றால் படித்த முட்டாள்கள் தான் இத்தகைய வதந்திகளை பரப்புகின்றனர். இதற்கு செல்போனின் வரவும் ஒரு காரணம்.
 
ஒரே நாளில் உருவானது அல்ல பூமி. அதே போல் ஒரே நாளில் அழிந்தும் போகாது. அதனால் மக்களே! 2012 உலகம் அழியாது.

கிறுக்கல் (எ) கவிதை :

என்னை நானே
என்னுள் சிறை வைக்கிறேன்
 
செய்த தவறுக்காக அல்ல
செய்யாத நன்மைக்காக !
 
தினமும் பிறப்பதாய் எண்ணி
என்னை நானே ஏமாற்றுகிறேன்,
 
இன்றைக்கு மின்சாரம் வருமென்று
தினமும் நான் பிறக்கிறேன்!
 
வருமா வராதா என்று
கேளிக்கை பார்த்து சிரித்த நாட்கள்
 
இன்று என்னை பார்த்து
சிரிப்பதாய் தோன்றுகிறது.
 
என்னை நானே
என்னுள் சிறை வைக்கிறேன்
 
செய்த தவறுக்காக அல்ல
செய்யாத நன்மைக்காக !
 
 

குழந்தை கவிதைகள்:

பொம்மைக்கு
உறக்கம் வரவில்லை,
தாலாட்டு பாடியபடி
உறங்கியது குழந்தை!
 
சோறூட்டும் குழந்தையை
பார்க்கும் போது
சந்தேகம் வலுக்கிறது.
ஒருவேளை,
பொம்மைக்கும் பசிக்குமோ?
 
கொசு கடித்து
அழுதது குழந்தை.
மின்சாரம் இல்லா இரவில்
பனை விசிறி தேடி
விசிறியது
பொம்மைக்கு!
கொசு கடிக்குதாம்!

Monday, November 12, 2012

இனியாவது திருந்துவோம்

             நமது நலனுக்காக ஆளும் அரசாங்கம் சில பல திட்டங்களை அறிவிப்பதுண்டு. அவற்றில் பல கிடப்பில் போடப்பட்டாலும், சில திட்டங்கள் மக்களை நேரடியாக சென்றடைய வேண்டி உடனுக்குடன் செயல்படுத்தப்படுவதுண்டு. அவ்வாறு செயல்படுத்தப்படும் திட்டங்கள் 'ஊடகங்கள்' மூலம் அனைத்து மக்களும் அறிந்துகொள்ளும் வகையில் ஒருசில மட்டுமே வெற்றிப்பெறுகின்றன. உதாரணமாக விலையில்லா பொருட்களை சொல்லலாம்.
 
            இவ்வாறு அறிவிக்கப்பட்ட நிலையிலிருந்து அமலாக்கம் வரை ஒவ்வொரு திட்டமும் போராடியே நம்மை வந்து அடைகின்றன என்பது உண்மையிலும் உண்மை. அப்படி நம்மை வந்து அடையும் திட்டங்கள் முழுமையாக நமக்கு பயனளிக்கிறதா என்று பார்த்தால் ஏமாற்றமே. உதாரணமாக 100 நாட்கள் வேலைவாய்ப்பு திட்டங்களை சொல்லலாம். விவசாயத்தை விட்டு 'ஓசியில்' பணம் கிடைக்கும் இந்த தொழிலை மக்கள் வெகுவாக நேசிக்கின்றனர். இன்றும் கிராமங்களுக்கு சென்றால், ஒரு விவசாயி தனது தோட்ட வேலைக்கு ஆள் கிடைக்காமல் திணறுவதையும், 100 நாள் வேலைக்கு செல்பவர்கள் ஏதேனும் மரத்தடியில் படுத்து தூங்குவதையும் சர்வ சாதாரணமாக பார்க்கலாம்.
 
           நம்முடைய நலனுக்காக வகுக்கப்பட்ட திட்டம் தான் இது. உள்ளூர் அரசியல்வாதிகளும், சில குள்ளநரி அதிகாரிகளும்  மக்களுக்கு சேரவேண்டிய கூலியில் பெரும்பகுதியை 'அமுக்கி' விட்டு, தூங்கிவிட்டு செல்வதற்கு சன்மானமாய் கொஞ்சம் கூலியை கொடுத்து மக்களை ஏமாற்றிவிடுகின்றனர். நாள் முழுதும் நிலத்தில் வியர்வை சிந்தி ரூ.100 கூலி பெறுவதைவிட, வெறுமனே மரத்தடியில் தூங்கிவிட்டு ரூ 30 அல்லது 40 பெறுவதை லாபம் என்று நினைப்பதால் தான் இவ்வாறு நடக்கிறது.
 
           இது ஒருபுறமிருக்க, ஒரு நலத்திட்ட பணிக்காக புதிய கட்டடம் கட்ட வேண்டும் என்று வந்தால் நடக்கும் அக்கப்போருக்கு யார் சாட்சி? கட்டடம் இருக்கும் ஆனால் இருக்காது என்ற நிலைமை தான். நமது கையாலாகாத தானம் தான் இவற்றுக்கெல்லாம் காரணம். தட்டிக்கேட்க நினைத்தாலும் 'பண' மற்றும் 'படை' பலதிற்கு முன் எடுபடுவதில்லை.
 
        இப்பொழுது உள்ளூர் அரசியல்வாதிகள் கொஞ்சம் சாமர்த்தியமாய் செயல்படுகின்றனர். தமது தொகுதியில் ஏதேனும் நலதிட்டப்பணி வரப்போகிறது என்றால் முன்பு இருந்ததைப்போல் தனக்கு வேண்டிய ஒப்பந்தக்காரர்களை நியமிப்பதில்லை. அதற்கு பதில் உள்ளூர் வாசிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வருகின்ற ஒப்பந்ததாரரிடம் சற்று காட்டமாகவே வலியுறுத்துகின்றனர். வரப்போகும் தேர்தலுக்கு செலவும் மிச்சம். வேலை வாங்கி கொடுப்பதற்கு தலைக்கு இவ்வளவு என்று கணிசமாக வசூல் வேட்டையும் நடக்கிறது.
 
         உள்ளூர் வாசிகள் பெரும்பாலும் வேலை செய்வதைவிட தூங்குவதிலும், சீட்டாடுவதிலும் மிக்க அக்கறையுடன் செயல்பட்டு, வளர்ச்சிப்பணிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்றனர். மீறி ஒப்பந்ததாரர் வெளியூரிலிருந்து வேலையாட்களை அமர்த்தினால் அவர்களை அடிப்பது, மிரட்டுவது என்று சகட்டுமேனிக்கு அட்டகாசம் செய்வது என்று அவர்களின் ஆதிக்கம் அதிகம் ஆகும். சமரசம் செய்ய உள்ளே வரும் அரசியல்வாதிக்கு பணம் கொடுத்தால் தான் சமரசம். இல்லையேல் வேலைநிறுத்தம்.
 
            ஆக நமக்காக அரசாங்கம் அறிவிக்கும் நலதிட்டப்பணிகள் நம்மை வந்து அடையாததற்கு, நாம் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தவர்கள் தான்  காரணம் என்பது புலனாகிறது. சரியானவர்களை தேர்ந்தெடுக்காமல், பணத்திற்கு ஆசைப்பட்டு யாரையோ தேர்ந்தெடுத்து நமக்கு நாமே 'ஆப்பு' வைத்துக்கொள்கிறோம். இனியாவது திருந்துவோம்.

Saturday, November 10, 2012

தீபாவளி நல்வாழ்த்துக்கள்

இனிய  தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Friday, October 19, 2012

தமிழ்சினிமாவும் அரைத்தமாவும்:

நமது தமிழக திரைப்படங்களை பார்க்கும் போது எனக்கு ஏற்பட்ட சலிப்புணர்வை இந்த பதிவின் மூலம் வெளிப்படுத்துகிறேன். எனக்கு தோன்றியதையும் காதால் கேட்ட சிலவற்றையும் தொகுத்துள்ளேன். அரைத்த மாவாக இருந்தாலும் ( அதாவது வேறு எங்காவது படித்த மாதிரி தோன்றினாலும்) மீண்டும் ஒருமுறை ருசித்துதான் பாருங்களேன்.
 
1. கதாநாயகன் / கதாநாயகியின் தோழர்கள்/தோழிகள் முழு ஒப்பனையிலும் சுமாராக தான் இருப்பார்கள்.
2. கதாநாயகி அறிமுக காட்சியில் ஒரு குழந்தையையோ அல்லது வயதானவர்களையோ நெரிசல் மிக்க சாலையை கடக்க உதவுவார். அதுவே கதாநாயகனுடன் செல்லும் பொது கடக்க பயப்படுவார். கதாநாயகன் அணைத்தபடி அழைத்து செல்வார்.
3.  கதாநாயகியின் தந்தை நிச்சயம் காமெடியன் அல்லது வில்லன்.
4. கதாநாயகனின் தந்தை நேர்மையான காவல்துறை அதிகாரி / ஆசிரியர் / நாட்டாமை.
5. எல்லா காமெடியன்களும் வேலை தேடுவார்கள் அல்லது வெட்டியாய் ஊர் சுற்றுவார்கள்.
6. கிராமத்தில் பிறந்து வளர்ந்த கதாநாயகி மாடர்ன் உடையணிந்து வெளிநாட்டில் பாட்டு பாடி ஆடுவாள்.
7. வெறுமனே சுற்றும் கதாநாயகன் துப்பாக்கி எடுத்து குறி தவறாமல் சுடுவார். ஆனால் நன்கு பயிற்சி பெற்ற போலீசோ / தீவிரவாதியோ குறி தவறியே சுடுவார்கள்.
8. 100 அடியாட்கள் வந்தாலும், ஒருவர் பின் ஒருவராக வரிசையில் வந்து தான் அடிவாங்குவார்கள்.
9. காக்கை குரல் கதாநாயகன் கூட குயில் குரலில் பாடுவான்.
10. கதாநாயகனின் காதலுக்கு உதவி செய்வது மட்டுமே நண்பர்களின் வேலையாக இருக்கும்.
11. நண்பர்கள் சாப்பிட்டுவிட்டு, சாப்பாட்டு பில்லை செலுத்த கதாநாயகனிடம் கையேந்துவார்கள்.
12. காதலர்கள் ஓடிப்போகும் போது ஊரே திரண்டு துரத்திவரும். ஆனால் அவர்கள் காதலிக்கும் போது ஊருக்குள் தான் சந்தித்துக்கொள்வார்கள். யாருக்குமே தெரியாது.
 
இப்படி எழுதிக்கொண்டே போகலாம்.
 
இவற்றில் சில உலக சினிமாவுக்கும் பொருந்தும். ஆயினும் தமிழர்களாகிய நாம் இன்னும் இதில் கூட முன்னேறாமல் பழைய மாவையே மீண்டும் அரைத்துக் கொண்டிருக்கிறோம். உலகத்தரம் என்று சொல்லிக்கொண்டு, உலக சினிமாக்களின் DVD யை வாங்கி அப்படியே தமிழ் திரைப்படமாக எடுத்து, தமிழ் சினிமாவை 'உலக தரத்திற்கு' உயர்த்தும் நடிகர்கள், இயக்குனர்கள் இருக்கும் வரை நாம் இந்த இந்த கொடுமையை சகித்துக்கொண்டுதான் ஆகவேண்டும். இந்த லட்சணத்தில் தயாரிப்பு செலவை பார்க்கும் போது திரையரங்கு நுழைவு கட்டணம் 'குறைவுதான்' என்று அறிக்கை விடும் சிலரை என்னவென்று சொல்வது?

Thursday, September 27, 2012

சிந்திக்க ஒரு நொடி:

        வழக்கமான எனது பயணத்தின் அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இரண்டொரு நாட்களுக்கு முன்பு மழை பெய்யும் நேரத்தில் மின்சார ரயிலில் பயணம் செய்ய வேண்டி வந்தது. மழையென்றால் வெறும் தூறல் அல்ல. பேரிடி மின்னலுடன் கூடிய பெருமழை. நான் பயணம் செய்த பெட்டியில் சில மாணவர்களும், மாணவ பருவ காதலர்கள் சிலரும், பொதுமக்கள் பலரும் இருந்தனர். அந்த மழையில் ஏற்படும் குளிரில் உடலில் சில மாற்றங்கள் வரும் என்பது இயற்கை தான். வயதானவர்களுக்கு நடுக்கமும், இளம் வயதினருக்கு ஒரு வித கிறக்கமும், குழந்தைகளுக்கு குதூகலமும் நிச்சயம் ஏற்பட வேண்டும். அதுதான் மழையின் சக்தி. சிறியவர் முதல் பெரியவர் வரை மழையில் நனைய உள்ளுக்குள் ஆசை இருந்தாலும் அது நிறைவேறுவது சிலருக்குதான். ஜலதோஷம், ஜுரம் என்று பயந்துகொண்டு நானும் சற்று தள்ளியிருந்தேன்.
          நான் தள்ளித்தள்ளி சென்றாலும் மழை என்னை விடுவதாயில்லை. நான் நகர்ந்து அமர்வதும் அது என்னை நனைப்பதும் என்று ஒரு விளையாட்டு போலவே வெகு நேரம் சென்றது. சட்டென்று ஏதோ தோன்ற, வாயிலை நோக்கி பார்வையை திருப்பினேன். அப்பொழுதுதான் தெரிந்தது. அங்கே மாணவர்கள் சிலர் நின்று கொண்டு கதவை திறப்பதும், நனைவதும் பின்பு அடைப்பது போல் அடைத்து விளையாடுவதும் தான் நான் நனைய காரணம் என்று. அவர்களின் சேட்டை அருகிலிருக்கும் அனைவரையும் எரிச்சலூட்டும் வகையிலேயே இருந்தது. ஆனாலும் அவர்களை அதட்ட அங்கு யாருமில்லாதது கண்டு (என்னையும் சேர்த்துதான்) நிச்சயம் ஒரு கணம் திகைத்துதான் போனேன். காரணம் ஆக்கசக்தியாக உருவாக வேண்டிய மாணவ சக்தி இப்பொழுதெல்லாம் அழிவுசக்தியாகிப்போவது தான் காரணம் என்று என்னுடன் பயணம் செய்த சக பயணி ஒருவரின் புலம்பல் என்னுள் ஏதோ செய்தது.
 
          இங்கிருந்து வெளிநாடு சென்று படிக்கும் மாணவன் தனது கைசெலவிற்கு பகுதிநேர பணிசெய்கிறான். அங்கிருக்கும் சட்டங்களை மதிக்கிறான். ஒழுக்கத்தை கடைபிடிக்கிறான். ஆனால், உள்நாட்டில் படிக்கும் மாணவனுக்கு இவை பொருந்தாமல் போவது வியப்பளிக்கிறது. பெற்றோர் பணத்தில் ஆட்டம் போடும் இவர்களைப்போன்ற இரண்டாம்தர மாணவர்களால், மாணவ சமூகதிற்கே இழுக்கு. மாணவ சமுதாயம் இப்படிதான் இருக்கவேண்டும் என்ற ஒரு வரைமுறை இந்தியாவிலேயே இல்லையா? தனக்கு பிரச்சினை என்றால் பேருந்தின் கண்ணாடி உடைக்கும் மாணவன், சக மாணவனுக்கு பிரச்சினை என்றால் ஒன்று கூடி போராடும் மாணவர்கள் ஒரு சுயநல கூட்டமாகதான் எனக்கு தெரிகிறது. இன, மத வேறுபாடு இன்றி ஒற்றுமையாக இருக்கும் ஒரு சமூகம் 'மாணவர்கள்' தான். அவர்கள் படிக்கும் வயதில் யாரைப்பற்றியும் கவலைப்படாமல் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பதெல்லாம் சரிதான். அதற்கு மற்றவர்களின் உணர்வுகளை பலி கொள்வது எந்தவித்தில் நியாயம் என்றுதான் புரியவில்லை.
 
          சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு என்று நாடே கொள்ளை போய்க்கொண்டிருக்கிறது. இதில் 'பேருந்து நாள்' கொண்டாட்டம் தான் ரொம்ப முக்கியம். ஊழலும், வன்முறைகளும் மலிந்து கிடக்கும் மண்ணில் உங்களின் கேலிக்கூத்து நிச்சயம் ஒருநாள் அனைவரையும் பார்த்து கேலியாய் சிரிக்கத்தான் போகிறது. மாணவர்களே! அரட்டையும் வேண்டும், கேலி கிண்டலும் வேண்டும். இல்லையென்று மறுப்பதற்கில்லை. அதோடு கொஞ்சம் பொறுப்பும் வேண்டும். நாடு உங்களுக்காக காத்திருக்கிறது. நீங்களோ 08:40 க்கு வரும் 'ஃபிகர்' க்காக காத்துக்கிடக்கிறீர்கள். காதல் வேண்டும். தப்பில்லை. அது பொது இடத்தில் வேண்டாம். சிந்தியுங்கள்.
 
        (பொது இடத்தில் அட்டூழியம் செய்யும் மாக்களை, மக்கள் நிச்சயம் தட்டிக்கேட்க வேண்டும்)

பள்ளிக்குழந்தைகளும் பாதுகாப்பும்:

        " நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி, சின்னஞ்சிறு கைகளை நம்பி ஒரு சரித்திரம் இருக்குது தம்பி " என்று ஒரு திரைப்பாடல் உண்டு. இன்றைய நாளிதழ்களில் கண்ணில் அடிபடும் முக்கியமான செய்தி 'குழந்தைகளுக்கு' ஏற்படும் விபத்துதான். நாளை சரித்திரம் படைக்கும் என்று எண்ணிய குழந்தை விபத்தில் மாள்வது பெருந்துயரம். எப்பொழுதும் நிகழ்ந்துக்கொண்டிருக்கும் நிகழ்வு இப்பொழுதான் வெளிச்சத்திற்கு வருகிறதா? அல்லது இப்பொழுது விபத்துகள் அதிகமாகிவிட்டதா? என்ற விவாதத்தை விடுத்து கொஞ்சம் சிந்திப்போம்.
 
         குழந்தைகளுக்கு இப்பொழுது பாதுகாப்பே இல்லையோ என்கிற ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது இந்த விபத்துகள். பள்ளியின் உள்ளே பாதுகாப்பது பள்ளியின் கடமை. அதுபோல், பள்ளியை விட்டு வெளியே வரும் குழந்தை வீடு சேரும்வரை பாதுகாக்கவேண்டியதும் பள்ளிதான். பள்ளியின் வளாகத்தை தாண்டிவிட்டால் எங்களின் பொறுப்பல்ல என்று கூறும் நிர்வாகம் நிச்சயம் தம் கருத்தை மாற்றிக்கொள்ளவேண்டும். எங்கோ ஏதோ ஒரு தொலைக்காட்சியில் நடந்த போட்டியில் வெற்றிப்பேற்ற மாணவன் 'எங்கள் பள்ளியில்' தான் படிக்கிறான் என்று போஸ்டர் அடித்து விளம்பரம் தேடும் பள்ளி நிர்வாகம் நிச்சயம் மாணவர்களின் பாதுகாப்புக்கும் உத்திரவாதம் அளிக்கவேண்டும். எங்கள் பள்ளி பாதுகாப்பானதுதான் என்பதை நிரூபிக்க வேண்டும்.
 
            பள்ளி வாகனம் வந்தது. குழந்தையை அனுப்பிவிட்டேன். என் கடமை முடிந்தது என்று நினைக்கும் பெற்றோரே! கொஞ்சம் சிந்தியுங்கள். வண்டியின் தரம், ஓட்டுனரின் நிலைமை, வண்டியில் அவசர உதவிக்கு ஆள், அவசர அழைப்பு எண்கள் இவை அனைத்தையும் சரிபார்க்க வேண்டியது உங்கள் கடமை அல்லவா. 100 ரூபாய் புடவையை 1000 முறை பிரித்து பார்க்கும் பெண்கள் ஏனோ இந்த விஷயத்தில் தலையிடுவதில்லை. ஒரு ரூபாய் செலவு செய்வதற்கு ஓராயிரம் முறை யோசிக்கும் பெற்றோர்கள் கூட தான் கட்டும் கட்டணத்திற்கு இந்த பள்ளி உகந்தது தானா? பாதுகாப்பு எப்படி? என்றெல்லாம் சிந்திப்பதில்லை. அதேபோல் வெறுமனே சமூகத்தில் ஒரு 'STATUS' க்காக ஒரு பள்ளியில் சேர்ப்பதும் கூடாது.
 
           சாலையில் நடக்கும் விபத்துகளுக்கு வாகன ஓட்டிகள் தான் காரணமென்றாலும், நமது கையாலாகாதத்தனமும் ஒரு காரணம். சாலையில் பாதுகாப்பாக வர வேண்டும் என்று நாம் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுப்பதே இல்லை. சொன்னால் மட்டும் கேட்டு விடப்போகிறானா? என்கிற அலட்சியம். 'எறும்பூற கல்லும் தேயும்' இது பழமொழி. சாலை பாதுகாப்பு விதிகளை குழந்தைக்கு சொல்லிக்கொடுக்க வேண்டியது பள்ளி மற்றும் பெற்றோரின் கடமை. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மட்டுமே இத்தகைய சாலை விபத்துகளை தடுக்க ஒரே வழி. அதே போல் பெற்றோர்களின் பாதுகாப்பு விழிப்புணர்வே குழந்தைகளை பாதுகாக்கும்.
 
          வெறும் முதல் மதிப்பெண் மட்டும் போதும். மற்றதெல்லாம் எனக்கும் தேவையில்லை என்றிருக்கும் பெற்றோர்களுக்கும், பள்ளிக்கும் ச்சயம் நான் சொல்வது ஏதோ புரியாத புதிர் போலதான் தெரியும்.

Thursday, September 6, 2012

வளர்ப்பு பிராணிகள்:

             உங்களில் பலரின் வீட்டில் வளர்ப்பு பிராணிகள் இருக்கும். அப்படி இல்லாயென்றால் உடனே ஒன்றினை உடனே வளர்க்க ஆரம்பியுங்கள். இதை நான் சொல்லவில்லை. மேற்கத்திய நாடுகளில் 'மனோதத்துவ' நிபுணர்களின் பரிந்துரை. எந்திர மயமாகிப்போன யுகத்தில் யாரிடம் எப்பொழுது கேட்டாலும் 'மன உளைச்சல்'. பணிச்சுமை காரணமாக நம்மில் பலருக்கும் 'மன அழுத்தம்' அதிகமாகி, மற்றவர்கள் மேல் எரிச்சலை கொட்டுகிறோம். இதனால் மனித உறவுகளில் விரிசல். நிம்மதி இல்லாத வாழ்க்கை. ஆனால் இதற்கெல்லாம் மருந்து 'வளர்ப்பு பிராணிகள்'.
 
               கிளி, புறா,பூனை, மீன், லவ் பேர்ட்ஸ், தவளை, ஆமை, பச்சோந்தி என்று எவ்வளவோ 'pets' இருந்தாலும் இவற்றில் முதலிடம் 'நாய்' க்கு தான். எஜமானர் எந்த நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்தாலும் அதனை மோப்பம் பிடித்து வாலாட்டிக்கொண்டே குழைந்துவரும் நாயை அவ்வளவு சீக்கிரம் யாரும் வெறுத்துவிட முடியாது. அப்படியே நீங்கள் உங்களின் கோபம் முழுவதையும் கொட்டினாலும் தன் முகத்தில் ஒரு விதமான ஏக்கத்தை புதைத்துக்கொண்டு தான் முன்னங்காலினால் உங்களுக்கு  'கைக்கொடுக்க' முயற்சிக்கும். இன்னமும் நீங்கள் உங்கள் மனநிலையிலிருந்து விடுபடவில்லை என்றால் உங்களுக்கு பிடித்த ஏதோ ஒரு பொருளை உங்கள் முன் கொண்டுவந்து போட்டு உங்களை சாந்த படுத்த முயற்சிக்கும். நமது குடும்ப அங்கத்தினர்களையும் தாண்டி நம் மீது அக்கறை கொள்ளும் ஒரு ஜீவன் எப்படி வெறும் 'விலங்கினமாக' இருக்க முடியும்.
 
                கலப்பின, உயர்ந்த ரக நாய்கள் தான் நகர சூழலுக்கு ஏற்றது என்று நம்மில் பலர் தவறாக கணக்கு போடுகிறோம். நமது தெருவில் விளையாடும் நாய்கள் எந்த விதத்திலும் குறைந்தது அல்ல. கொஞ்சம் அக்கறை கொண்டால் அழுக்கான தெருநாயும் சுத்தமாகும். கொஞ்சம் பாசம் வைத்தால் தெரு நாய்க்கும் ஒரு உறவு கிடைக்கும். பிரபல நடிகையை பார்த்து சொல்லவில்லை. நானும் ஒரு நாய் வளர்த்தேன். அது சாதாரண ரக நாய்தான். ஆயினும் அது அன்பில், அக்கறையில், விசுவாசத்தில் உயர்ந்த ரகம். நள்ளிரவில் வீடு திரும்பினாலும் எனக்காக காத்திருந்து, நான் வந்த பின்பு என்னுடன் 5-10 நிமிடங்கள் செலவழித்த பின்பு தான் உறங்க செல்லும். பலமுறை நான் வரும் வரை சாப்பிடாமல் கூட காத்திருந்த நாட்கள் உண்டு. வயோதிகம் அதனால் மரணம். இருப்பினும் எங்கள் உள்ளங்களில் நீங்கா இடம் பிடித்து இன்றும் வாழ்கிறது.
 
               ஒரு விஷயம் தான் புரியவில்லை. எனது செல்ல பிராணி இறந்த பின்பு எனக்கு வேறு ஒரு 'pet' வைத்துக்கொள்ள தோன்றவில்லை. குடும்பத்தினர் வற்புறுத்தலால் ஒரு நாயை வளர்க்க நினைத்தாலும் மனம் பழைய நாயையே இந்த புதிய உறவிலும் தேடுகிறது. அது கிடைக்காத பட்சத்தில் மனம் மற்றொரு செல்ல பிராணியை ஏற்றுக்கொள்வதில்லை. அதே போல் வளர்ப்பு பிராணிகளும் 'ஒரே ஒரு' எஜமானரை தான் ஏற்றுக்கொள்ளும். மற்றவர்கள் மேல் பாசம் காட்டினாலும் 'எஜமானர்' ஒருவரே. இந்த ஒரு வினோதமான பாசப்பிணைப்பு நிச்சயம் உன்னதமானது தான். ஆதலினால் செல்ல பிராணிகளை  வளருங்கள். அது எந்த உயிரினமாகவும் இருக்கலாம். சமீபத்தில் ஒருவர் 'மலை பாம்பை' செல்ல பிராணியாக வளர்ப்பதாக எங்கேயோ படித்த ஞாபகம்.

Thursday, August 30, 2012

முன்னிரவு பயணம் :

மெல்லியதாய் தூறல் போடும் வானம்
கையில் படபடக்கும் கவிதை புத்தகம்
காதில் பண்பலை வழியே இளையராஜா!
 
அருகில் அரட்டை நண்பர்கள் இல்லை!
வீண் கதை பேசும் மனிதர் கூட்டம் இல்லை !
 
யாருமில்லா ரயில்பெட்டியில்
தன்னந்தனியே நான் மட்டும்
இருளின் துணையோடு !
 
சிலசமயம் எனது முன்னிரவு
பயணங்கள் இப்படித்தான்
அமைந்து விடுகிறது
நான் படிக்கும் கவிதை போலே
தித்திப்பாய்!

Tuesday, August 21, 2012

பெண்களும் ஆடை பிரச்சனையும்:

              சமீபத்தில் வடகிழக்கு மாநிலமொன்றில் நடந்த அத்துமீறல், பெண்களுக்கு எதிரான கொடுமைகளை உலகமறிய செய்தது. ஆண்கள் பெண்களைப்பார்த்து 'செக்ஸி' என்று சொல்வது பெண்களை ஊக்கப்படுத்தும் வார்த்தை, தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றார் ஒரு இந்திய பெண்மணி. அவரின் பேச்சு 'மட்டும்' விமர்சனதிற்குள்ளானது. மற்றபடி எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த வடகிழக்கு மாநில நிகழ்வுக்கு பிறகு 'பெண்களின்' ஆடைகள் தான் இவ்வாறு தவறு செய்ய 'ஆண்களை' தூண்டுகிறது என்றார் இன்னொருவர். அவரும் பெரியமனிதர் தான். அதனால் தான் என்னவோ அவரின் வார்த்தைகளுக்கு எதிர்ப்பாக வெறும் விமர்சனம் மட்டுமே எழுந்தது. இதனை பிரபல வாரப்பத்திரிக்கை ஒன்றில் விமர்சித்து எழுதிய ஒரு எழுத்தாளர் " கண்ணியமாக ஆடை அணிந்து வீட்டிற்குள்ளே இருக்கும் பெண்களுக்கு கொடுமைகளே நடக்கவில்லையா?" என்று வினா எழுப்பியுள்ளார். இவையெல்லாம் ஒருபுறமிருக்க, "பெண்களின் முன்னேற்றத்தை இந்த சமுதாயம் முடக்க நினைக்கிறது" என்று தன் உள்ளக் குமுறலை வெளியிடுகிறார் பெண் விடுதலை பற்றி மட்டும் 'பேசும்' ஒரு சமூக சேவகி. எல்லாம் சரிதான். ஆனால் தீர்வு என்ன?
 
               சுயமாக சம்பாதிக்கும் பெண் தான் சம்பாதித்த பணத்தில் கொஞ்சம் தனக்கென செலவு செய்கிறாள். நல்ல உடை, நான்கு பொது இடங்களுக்கு செல்வது, நண்பர்களுடன் அரட்டை அடிப்பது, இரவில் பணிக்கு செல்வது என்று எல்லாமே செய்ய முடிகிறது. இது அவர்கள் சுதந்திரம். அவர்களின் சுதந்திரத்தை பறிக்க நினைக்கும் கூட்டம் 'சமூக விரோத' செயல்களில் ஈடுபட்டு அனைத்தையும் சீர்குலைக்க நினைக்கிறது. இது நான் சொலவது அல்ல. பெண்ணுரிமை பேசும் பலரின் வாதம். அவர்களிடம் நான் சில விஷயங்களை கேட்க நினைக்கிறேன்,
 
1. பெண்கள் அதிகம் படித்து வேலைக்கு சென்று சம்பாதிப்பது வெறும் 'ஆடம்பரத்திற்கு' தானா?
2. பெண்களுக்கு 'ஆடை' விஷயத்தில் கவனம் தேவை என்று சொல்வது 'அடக்குமுறையா' ?
3. நாகரீகமான பெண் சந்திக்கும் 'ஆண்கள்' அனைவரும் நாகரீகமானவர்கள்' என்று உத்திரவாதம் உள்ளதா?
4. உடலை ஒட்டிக்கொள்ளும் ஆடை நமது நாட்டின் தட்ப வெப்ப நிலைக்கு உகந்ததா?
5. 'லெக்கிங்க்ஸ்' இந்த உடை (என்னது இது உடையா) பெண்களின் அழகை காட்டுகிறதா? இல்லை, உடல் வளர்ச்சியை காட்டுகிறதா?
 
             இன்னும் நிறைய கேள்விகள் உண்டு எனக்குள். ஒருவர் வெறுமனே சம்பாதிப்பதால் மட்டுமே அவருக்கு சுதந்திரம் வந்துவிடாது. பெண் சுதந்திரம் என்பது வேறு. கட்டுபாடு இல்லாமல் ஊர் சுற்றுவது என்பது வேறு. வேலைக்கு சென்று சம்பாதிப்பதால் வருவது பொருளாதார சுதந்திரம். அதனால் நான் கண்டபடி அலைவேன், இஷ்டப்படி ஆடை அணிவேன், நேரம் காலம் இல்லாமல் எங்கு வேண்டுமானாலும் போவேன் என்று சொல்வீர்களேயானால் மன்னிக்கவும், நீங்கள் நிச்சயம் தவறான பாதையில் 'அதிவேகத்தில்' பயணிக்கிறீர்கள் என்று அர்த்தம். நாம் என்ன 100% படித்தவர்கள் மத்தியிலா வாழ்கிறோம். ஆண்கள் என்கிற போர்வையில் 'காம' மிருகங்கள் அலையும் நாட்டில் தம்மை தற்காத்து கொள்வது பெண்களின் கடமையல்லவா?

Wednesday, August 8, 2012

நீ நீயாய் இரு

மற்றவர்களை (உங்களையும் சேர்த்து) பாதிக்காதவரை நீங்கள் நீங்களாகவே இருங்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு துளியையும் உங்களின் சிறப்புத்தன்மையோடு அணுகுங்கள். உங்களை கடந்து செல்லும் ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக அனுபவியுங்கள். இது எனக்கு வந்த ஒரு இமெயிலின் சாராம்சம். அதற்குள் ஒரு குட்டி கதையும் உண்டு. அதனை என் வழியில் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
 
** தமிழகத்தின் தெற்கு மூலையில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து ஒரு வயதான பெரியவர், சென்னையில் குடியிருக்கும் தனது மகனை பார்க்க வருகிறார். அவரது மகன் ஒரு வெற்றிகரமான தொழிலதிபர், தனது மனைவி மற்றும் மகனுடன் வாழ்ந்து வருகிறார். பெரியவருக்கு (தந்தை) கிராமத்து தமிழைத்தவிர வேறு மொழிகள் தெரியாது. அதற்காக அவர் ஒருபோதும் கவலை கொண்டதில்லை. சென்னைக்கு வந்தால் தன் மகன் மற்றும் குடும்பத்தாருடன் சிறிது நாட்கள் தங்கி விடுவார். எங்கேயும் வெளியில் செல்லவோ அல்லது ஊர் சுற்றி பார்க்கவோ ஆர்வம் காட்டியதில்லை. ஆனால் இந்த முறை அவரை 'சந்தோஷ' படுத்த எண்ணி ஐந்து நட்சத்திர உணவு விடுதிக்கு அழைத்து சென்றார் அவரின் மகன். பெரியவர் தனது கிராமத்து ஸ்டைலில் வேட்டி, துண்டு அணிந்து புறப்பட்டு சென்றார்.
 
உணவு விடுதியில் உணவருந்திய பிறகு, அங்கே மேசையில் வைக்கப்பெற்ற வறுத்த நிலக்கடலையில் சிறிதினை எடுத்து துண்டில் முடிந்து கொண்டார். அவருக்கு வறுத்த வேர்க்கடலை என்றால் ரொம்ப பிடிக்கும். உணவகதிலிருந்து கிளம்பி தனது காருக்கு வரும் வழியில் விரிக்கப்பட்டிருந்த கம்பளத்தில் கால் இடறி தவறிவிழுந்த பெரியவர் வேர்க்கடலையை அந்த வராண்டாவில் சிதற விட்டார். அங்கிருந்த சிப்பந்திகள் அனைவரும் அவரை பார்த்து கேலியாக சிரித்தனர். " இந்த கிழவனை இனிமேல் இது போன்ற பெரிய இடத்திற்கு அழைத்து வரக்கூடாது" என்று மகன் நினைத்திருப்பான் என்பதுதான் நமது யூகமாக இருக்கும். ஆனால் நடந்தது வேறு.
 
பதறிப்போன மகன், தனது தந்தையை சட்டென்று தூக்கிவிட்டார். பின்பு கீழே சிதறிப்போன வேர்க்கடலையை பொறுக்கியெடுத்து மீண்டும் அந்த துண்டிலேயே கட்டி தனது தந்தையிடம் கொடுத்தார். தந்தைக்கு அந்த உணவு விடுதியை மிகவும் பிடித்திருந்தது, வேர்க்கடலைக்காக. பின்பு காருக்கு சென்ற இருவரும் அடுத்தவாரம் மீண்டும் குடும்பத்தோடு வரவேண்டும் என்று முடிவெடுத்தனர். சில நாட்கள் சென்ற பின்பு, ஒருநாள் வீட்டிற்கு வந்த நண்பரின் குடும்பத்துடன் அரட்டையின் பொது இருவரும் (தந்தையும், மகனும்)  இதை பற்றி சிரித்தபடியே விவரித்தனர்.  சிரித்து முடித்தபின் நண்பர் கேட்டார், "ஏம்பா! உனக்கு அப்போது அவமானமாக இல்லயா? . அதற்கு இவர் "நண்பரே, இவர் எனது தந்தை. அவரின் விருப்பப்படி இருக்கிறார். அவருக்கு தெரிந்த கிராமத்து பாஷை பேசுகிறார். அவருக்கு விருப்பமான உடை அணிகிறார். அவருக்கு பிடித்தமான வேர்க்கடலையை பணம் கொடுத்து வாங்கிதான் சாப்பிட்டார். இது அவரது பழக்க வழக்கம், இயற்கையான சுபாவம். இதில் நான் அவமானப்பட என்ன இருக்கிறது. எனது தந்தை அவரது விருப்பப்படி இருப்பதை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை." நண்பர் மீண்டும் "சரி, அங்கு வேலை செய்தவர்கள் என்ன நினைத்திருப்பார்கள்?" என்க, " அவர்களுக்கு தேவை பணம். அதாவது சாப்பிடும் சாப்பாட்டிற்கு பணம், பரிமாறுபவர்களுக்கு 'டிப்ஸ்' என்கிற பணம். அவ்வளவுதான். எனக்கு எனது தந்தையும் அவரது சந்தோஷமும் தான் முக்கியம். அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதல்ல" என்று நெத்தியடியாக பதிலளித்தார் இவர் (மகன்).
 
அதனை அனைவரும் ஒப்புக்கொண்டார்கள். தனது மாமனாரை நினைத்து பெருமை பட்டுக்கொள்ள இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கிறது என்று அவரின் மனைவி  ஆரம்பிக்க அரட்டை சூடு பிடித்து அந்த இடமே கலகலப்பானது **.
 
இது வெறும் தந்தை மகன் உறவின் பெருமையை சொல்லும் கதை அல்ல. இதனை வெறும் கதையாக பார்க்காமல் அதில் வரும் கதாபாத்திரங்களின் உணர்வுகளை பாருங்கள். இத்தனை வயதாகியும் தன்னுடைய பேச்சு, உணவுமுறை, உடை பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்ளாத தந்தை பாத்திரம். "தனது தந்தை அவரின் விருப்படி இருக்கிறார். அவரை கட்டாயப்படுத்தி மாற சொல்வதால் எனக்கோ அல்லது அவருக்கோ எந்த பலனும் இல்லை மற்றும் அவர் அப்படி இருப்பதால் யாருக்கும் எந்த தீங்கும் இல்லை, அது மட்டுமில்லாமல் அவர் எனது தந்தை. நான் அவரின் உணர்வுகளை மதிக்கிறேன் " என்று கூறும் மகன் பாத்திரம். என்ன தோழர்களே! நாம் இப்படி நினைப்போமா? நிச்சயமாக இல்லை.
 
'என் மனைவிக்கு இங்கிலீஷ் பேச வராது, அவளுக்கு உலக அறிவு கம்மி, அதனால் அவளை எங்கும் உடன் அழைத்துசெல்வதில்லை ', 'என் கணவர் வெறும் குமாஸ்தா. பெரிய (பணக்கார) மனிதர்களிடம் நடந்து கொள்ளும் முறை அவருக்கு தெரியாது, எனவே அவருடன் நான் வெளியில் செல்வதில்லை', ' என் பெற்றோருக்கு பொது இடங்களில் நாகரீகமாக நடக்க தெரியாது, அதனால் அவர்களை என் நண்பர்களுக்கு அறிமுகம் செய்வதில்லை',  என்கிற மனப்போக்கு (மன நோய்) உங்களுக்கும் உண்டா. தயவுசெய்து அதனை சீக்கிரம் அழியுங்கள். இல்லையென்றால் அது உங்கள் சமூகத்தையே அழித்துவிடும்.
 
தனக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்று உங்கள் மனைவியோ, கணவனோ, பெற்றோரோ, தாத்தா பாட்டியோ கவலை பட்டதுண்டா? தான் வெறும் குமாஸ்தா தான் என்று உங்கள் கணவர் தன்னை குறைத்து மதிப்பிட்டதுண்டா? நீங்கள் மட்டும் ஏன் மற்றவர்களின் 'விமர்சனத்திற்காக' கவலைப்படுகிறீர்கள். யாரோ ஒருவருக்காக உங்க உறவுகளின் உணர்வுகளை நசுக்காதீர்கள். அவர்கள் அவர்களாகவே இருக்கட்டும். அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுதான் உங்களுடய வேட்டியணிந்த ஒரு கிராமத்து உறவுக்காரன் ஐந்து நட்சத்திர உணவு விடுதிக்கு போகமுடியும்.
 
மற்றவர்களை (உங்களையும் சேர்த்து) பாதிக்காதவரை நீங்கள் நீங்களாகவே இருங்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு துளியையும் உங்களின் சிறப்புத்தன்மையோடு அணுகுங்கள். உங்களை கடந்து செல்லும் ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக அனுபவியுங்கள்

Thursday, July 19, 2012

படிக்கும் பழக்கமும் புத்தகங்களும்:

         நண்பர் ஒருவர் ஒருநாள் ஒரு பழைய புத்தகத்தை படித்துக்கொண்டிருந்தார். "என்ன நண்பரே! திடீர் பழக்கம்? என்று நான் வினவியதற்கு விளக்கமாக ஒரு கதா காலட்சேபமே நடத்திவிட்டார். அவர் சொன்னதிலிருந்து சில வரிகள் மட்டும் இதோ உங்களுக்காக.
 
*** போகின்ற போக்கை பார்த்தால் தினசரி செய்திதாள்களையோ, வார மற்றும் மாத இதழ்களையோ படிக்கும் முறை மாறிவிடும் போல் தெரிகிறது. உதாரணமாக இப்பொழுது தினசரிகளில் தலைப்பு செய்திகள், வர்த்தகம், மாநில மற்றும் மாவட்ட செய்திகள், சினிமா, விளையாட்டு, உலகம், இன்னும் பல என்று பற்பல தலைப்புகளில் செய்திகள் வெளியிடுகின்றனர். வார மற்றும் மாத இதழ்களில் கலை, கவிதை, கட்டுரை, அரசியல், கேள்வி பதில், சமையல், இளைஞர் சிறப்பிதழ், பெண்கள் சிறப்பிதழ், வேலைவாய்ப்பு என்று பலவகையுண்டு.
 
படிக்க படிக்க சுவாரசியம் குறையாத க்ரைம் நாவல்களும், சிறிய மற்றும் பெரிய குடும்ப நாவல்களும் நம்மை படிக்க தூண்டுபவை. அறிவியல் சம்பந்தமாக அறிந்து கொள்ள தனி புத்தகம், தொழில்நுட்பம் அறிந்து கொள்ள தனி புத்தகம் என்று புத்தகங்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்கா. சரி, விஷயத்திற்கு வருகிறேன். எதிர்காலத்தில் இ-புத்தகங்களின் வரவைப்பற்றி நான் பேசப்போவதில்லை. இன்றைய நிலவரப்படி நாளைய இதழ்களில் தலைப்புகள் எப்படி வரும் என்று எனது சிற்றறிவுக்கு எட்டியவரை சொல்கிறேன்.கேள்.
 
கொலை, கொள்ளை, நில அபகரிப்பு, கள்ளக் காதல் தொடர்பான செய்திகளே அதிகம் வருவதனால் அவற்றுக்கு தனித்தனியே பக்கங்கள் ஒதுக்கப்படும். மாநிலம் வாரியாக, மாவட்டம் வாரியாக நடக்கும் கெட்ட விஷயங்களுக்கு தனிப் பக்கம். இலவச இணைப்பாக கொலை, கொள்ளை மற்றும் இதர குற்றங்கள் நடந்த விதத்தை விவரிக்கும் சிறப்பிதழ்கள் வழங்கப்படும். கொலை வல்லுனர்கள், கொள்ளைக்காரர்கள் தங்களின் திறமைகள் பற்றிய பேட்டி நிச்சயம் உண்டு. வேண்டுமானால் பயிற்சியளிக்க இவ்வளவு ஆகும் என்று விளம்பரமும் கொடுக்கலாம்***
 
இப்படியே பேசிக்கொண்டிருந்தவரை இடை மறித்து, இன்னும் நீங்கள் சரியான விளக்கம் கூறவில்லையே என்றதற்கு, " இப்போ வர புத்தகங்களை படிக்க முடிவதில்லை. அதனால் தான் 'பழைய' புத்தகங்களுக்கு தாவிவிட்டேன்" என்றவர், "பழைய புத்தகங்கள் விலையும் குறைவுதான்" என்று முடித்தார்.
 
எனக்கென்னவோ அவர் சொன்னதில் 'உண்மை' இருப்பது போல் தோன்றுகிறது.
 
 

Thursday, June 28, 2012

நமக்கான 5 நிமிடங்கள் :

                 நாம் நமது தினசரி வாழ்க்கையில் 99% நேரத்தினை அடுத்தவர்களுக்காக செலவிடுகிறோம் ( அனைவருக்கும் பொருந்தாது ) அல்லது செலவிடுது போல் அலுத்துக்கொள்கிறோம். ஆனால் நமக்கான நேரத்தை பயன்படுத்தாமலேயே வீணடிக்கிறோம். கொஞ்சம் தலையை சுற்றி மூக்கை தொடுவதை போல் தோன்றுகிறதா? இதோ எளிமையாக எனது நண்பருக்கு ஏற்பட்ட அனுபவத்தினை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
 
                 எனது நண்பர் ஒரு தனியார் நிறுவனத்தில் நல்ல பணியில் உள்ளார். அந்த நிறுவனம் 'காலம் தவறாமை'யை மிகவும் கடுமையாக பின்பற்றிவரும் ஒரு நிறுவனம். காலை பணிநேரத்திற்கு தாமதமாக வர 5 நிமிடம் மட்டுமே அனுமதி. அதற்கு ஒரு நிமிடம் கூடினாலும் 1 மணி நேரத்திற்கான சம்பளம் பிடித்துக்கொள்ளப்படும். அதுவே 15 நிமிடங்கள் என்றால் 2 மணி நேரங்கள், 30 நிமிடங்கள் என்றால் அரைநாள் என்று வரையறுக்கப் பட்டுள்ளது. அனுமதி இல்லாமல் ஒருவர் விடுப்பு எடுத்தால் அன்றைய சம்பளம் அவ்வளவுதான். இவ்வளவும் மிகவும் கடினமாக கடைபிடிக்கப்படுகிறது.
 
                இவர் தினமும் தனது பைக்-ல் பணிக்கு செல்வது வழக்கம். வண்டியை சரிவர பழுது பார்க்காமல் விட்டதால் அதன் நிலைமை மிகவும் மோசமான நிலையில். ஆனாலும் நண்பர் அதை பற்றி கவலை கொள்ளவில்லை. காலையில் எழுவார், தயாராகி வெளியில் வந்து வண்டியை எடுத்து கிளம்பிவிடுவார். மாலை திரும்பியதும் அதற்கான இடத்தில் நிறுத்திவிட்டு அப்படியே மறந்துவிடுவார். பெட்ரோல் போடுவதோடு சரி. ஒரு நாள் காலை வழக்கம் போல் வண்டியை எடுத்து 'ஸ்டார்ட்' செய்ய அது முரண்டு பிடித்தது. வண்டியை விட்டு பேருந்தில் ஏறி காலதாமதமாக பணிக்கு சென்றார். ஒரு நாள் இருநாள் அல்ல. இப்படி பலநாட்கள். தொடர்ந்து காலதாமதமாக வந்ததால் அவருக்கு வர வேண்டிய 'பதவி உயர்வு' மற்றும் சம்பள உயர்வும் மறுக்கப்பட்டது.
 
               தினமும் ஒரு '5' நிமிடங்கள் அந்த வண்டிக்காக இல்லையில்லை 'நமக்காக' செலவழித்திருந்தால்... இவ்வளவு அவஸ்த்தை இல்லை. காலையில் வண்டியை எடுத்து சரிபார்த்து வைத்தால் கடைசி நேர அவசரம் குறையும். வண்டி பழுது என்று முன்பே தெரிந்தால் கொஞ்சம் சீக்கிரமாகவே கிளம்பி பேருந்திலோ அல்லது வேறு ஏதோ ஒரு வழியில் அலுவலகம் செல்லலாம். அந்த '5' நிமிடம் இன்று இவரின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டது.
 
              இப்பொழுதெல்லாம் எனது நண்பர் கண் விழிப்பது தனது 'வண்டியின்' முகத்தில் தான். நன்றாக துடைத்து, எண்ணெய் எரிபொருள் சரிபார்த்து, ஒரு முறை 'ஸ்டார்ட்' செய்து பரிசோத்தித்த பின்னரே காலை கடன். வாரம் ஒருமுறை சக்கரத்தில் காற்றின் அழுத்தம் சரிபார்த்தல், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வண்டியை பழுது பார்த்தல் என்று பொறுப்புடன் செய்கிறார். இப்பொழுது 'கால தாமதம்' என்ற பேச்சுக்கே இடமில்லை.
 
            அதனால் தோழர்களே! நமக்கான அந்த '5' நிமிடங்களை நிச்சயம் வீணடிக்காமல் பயன்படுத்தி பயன் பெறுவோம். வெறும் பதவி உயர்வுக்காக மட்டுமென்று சொல்லவில்லை. நம் நண்பர்கள், சொந்தங்களை இழக்காமல் இருக்கவும் தான். நண்பர் ஒருவரின் வீட்டு நிகழ்ச்சி ஒன்றுக்கு காலதாமதமாக சென்று 'வழியில் பைக் படுத்திவிட்டது' என்று கூறிப்பாருங்கள், நான் சொல்வது புரியும்.

Wednesday, June 20, 2012

நிஜ வாழ்க்கை அற்புதங்கள் :

           நேற்று எனது சக ஊழியருடன் உரையாடி கொண்டிருந்தபோது எனக்கும் அவருக்கும் 'கடவுள்' இருக்கிறாரா? இல்லையா? என்ற விவாதம் ஏற்பட்டது. அப்பொழுது அவர் கூறிய (அவருடைய) சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அவர் கூறியதிலிருந்து சில...
 
            *** 1987 ஆம் வருடம் டிசெம்பர் மாதம் 31ந்தேதி நானும் எனது மனைவியும் புத்தாண்டு அன்று கோவிலுக்கு செல்ல திட்டமிட்டு, திருப்பதிக்கு செல்ல ஆயத்தமானோம். அன்று முற்பகல் அரசு பேருந்தில் ஏறி பயணித்தோம். ஆனால் துரதிஷ்டவசமாக நாங்கள் சென்ற பேருந்து வழியிலேயே பழுதானது. இதனை 'அபசகுனம்' என்றெண்ணி திரும்பிவிட நினைத்தோம். ஆனால், மனதினை தேற்றிக்கொண்டு, அப்பொழுது ஏற்பாடு செய்யப்பெற்ற மாற்று பேருந்தில் எங்கள் பயணத்தை தொடர்ந்தோம்.
 
             திருப்பதி வந்தடைந்த உடன், அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கினோம். கோவிலுக்கு போகும் வழியில் மொட்டை போட்டு பின்பு அருகில் இருந்த குளத்தில் குளித்துவிட்டு தரிசனம் பெற கோவில் நோக்கி நடை போட்டோம். அங்கு சென்றதும் நாங்கள் கண்ட காட்சி எங்களை வருத்தத்தில் ஆழ்த்தியது. அதாவது இன்னும் மூன்று நாட்களுக்கு 'முன்பதிவு' முடிந்துவிட்டது. இனி 03.01.1988 அன்று காலை தான் அனுமதி என்று ஒரு அறிவிப்பு பலகை அங்கே வைக்கப்பட்டிருந்தது. அதனை பார்த்ததும் என் மனைவி, " அதுதான் அப்பவே அபசகுனம் ஆச்சே" என்று வருத்தப்பட, அவர்களுக்கு ஆறுதல் கூறிக்கொண்டிருந்தேன்.
 
             அப்பொழுது தரிசனம் வேண்டி வந்த பக்தர்கள் கூட்டம் எங்களோடு சேர்ந்துகொள்ள, ஒரே கூச்சலும் குழப்பமுமாக இருந்தது. அவ்வழியே வந்த காவலர் ஒருவர், "என்ன இங்கே கூட்டம், உங்களுக்கெல்லாம் என்ன வேண்டும்" என்று சற்று கோபம் தோய்ந்த குரலில் வினவ, உடனே நான் " நானும் என் மனைவியும் கடவுள் தரிசனதிற்காக சென்னையிலிருந்து வருகிறோம்" என்று கூறி அறிவிப்பு பலகை விஷயத்தையும் கூறினேன். அதற்கு அவர் " தரிசனம் பார்க்க வேண்டுமென்றால் உள்ளே போக வேண்டியதுதானே, வெளியே ஏன் நிற்கிறீர்கள்" என்று சொன்னார். நானோ குழப்பத்தோடு என் பின்னால் நின்ற கூட்டத்தை பார்த்தபடியே, "இதோ இவர்களும் உள்ளனர்" என்க, அவர் உடனே "அவர்களுக்கும் தான்" என்றார். நான் உடனே பின்னால் திரும்பி இந்த செய்தியினை சொல்லிவிட்டு திரும்பிப் பார்க்கிறேன், அந்த காவலரை காணவில்லை.ஆச்சர்யம்! அங்கே வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகையும் இல்லை, கதவிலிருந்த பூட்டும் இல்லை. அங்கே அனுமதி சீட்டு வழங்குபரை தவிர வேறு யாருமில்லை. அவரிடம் சீட்டு பெற்று  நாங்கள் அனைவரும் உள் சென்று 'புத்தாண்டு' அன்று கடவுள் தரிசனம் கண்டு மகிழ்ந்தோம். ***
 
            பொறுமையாக எல்லாவற்றையும் சொல்லி முடித்தவர் என்னை நோக்கி " இப்பொழுது சொல்லுங்கள், கடவுள் இருக்கிறாரா? இல்லையா?. என்னிடம் எந்த பதிலும் இல்லை. உங்களுக்காவது பதில் தெரியுமா?
 

Saturday, June 2, 2012

கிராம திருவிழாக்கள்:

சமீபத்தில் கோடை விடுமுறைக்கு எங்களின் கிராமத்திற்கு சென்றிருந்தோம். விடுமுறையில் கிராம அழகை ரசித்தது மட்டுமின்றி கிராம மக்களிடம் இன்றும் காணப்படும் ஒற்றுமையை கண்டு ரசித்து திரும்பினோம். அதனை உங்களிடம் பகிர்ந்துகொள்ள இந்த பதிவு.
 
ஒரு வளர்பிறை தினத்தன்று ஊரிலுள்ள பெரியவர்கள் ஒன்று கூடி அம்மனுக்கு 'கூழ்' ஊற்றும் திருவிழா நடத்த திட்டமிட்டனர். அது ஊர்மக்களுக்கு தெரிவிக்கபெற்று மறுநாள் பெரியவர்கள் மற்றும் இளைஞர்கள் அனைவரும் ஒன்று கூடினர். அப்பொழுது ஊர் பெரியவர் திருவிழாவுக்கு செய்யவேண்டிய வேலைகள் மற்றும் அவற்றுக்குண்டான செலவுகளை பட்டியலிட்டார் (Planning). பின்பு செலவுத்தொகையை பங்கிட்டு, வீட்டிற்கு இவ்வளவு என்று வசூல் செய்ய முடிவடுத்தனர் (Budgeting) (அனைவரும் சமமான தொகையை மட்டுமே செலுத்தவேண்டும், நன்கொடைக்கு தடை).
 
பண விஷயம் முடிந்து வேலையை பிரித்துக்கொடுக்க முனைந்து ஒரு பெரியவர் ஒவ்வொரு இளைஞருக்கும் ஒவ்வொரு வேலையாக பிரித்துக்கொடுத்தார் (Delegation  of Authority & Responsibility). அப்பொழுது இடைமறித்த பெரியவர் ஒருவர் சென்ற வருடம் நடந்த தவறுகளை சுட்டிக்காட்டி, ஓரிரு இளைஞர்களின் பொறுப்புகளை மாற்றினார் (Appraisal, Feedback and Corrective Action). பின்பு விழாத் தேதி குறிக்கப்பெற்று அனைவரும் கலைந்துசென்றனர் (Goal Setting).
 
முதல் வேலையாக 'காப்பு' கட்டப்பட்டது (Health & Safety Environment) (மக்கள் பெரும்திரளாக கூடும் திருவிழா, அதனால் வெளியூரிலிந்து வருபவர்கள் மூலம்  நோய் பரவாமல் இருக்க இந்த காப்பு). திருவிழாவிற்கு முதல்நாள் கரகம் ஜோடித்து ஆரம்பகால பூஜைகள் நடந்தேறின. மறுநாள் (கூழ் ஊற்றும் அன்று) காலையிலேயே மக்கள் அனைவரும் வீடு வாசல் சுத்தம் செய்து வாசலில் தண்ணீர் தெளித்து ஊர்வலத்திற்கு தயாரானார்கள். நல்ல நேரம் பார்க்கபட்டு ஊர்வலம் துவங்கியது. வீட்டிற்கு வீடு பூஜை செய்யப்பெற்று, வீட்டிலிருந்து ஒருவர் கூழ் குடத்துடன் ஊர்வலத்தில் சேர்ந்து கோயில் நோக்கி செல்ல துவங்கினர்.
 
கோவிலை அடைந்ததும் கூழ் கூடங்கள் பூஜைக்காக 'அம்மனுக்கு' முன்பாக வைக்கப்பெற்று, பூஜை முடிந்ததும் ஒரு பெரிய பாத்திரத்தில் ஊற்றப்பட்டன. ஏழைகளும், பக்தர்களும் வரிசையில் நின்று அம்மானை தரிசித்து 'கூழ்' பெற்று சென்ற காட்சி, அந்த அம்மானே நேரில் வந்து கூழ் குடித்ததை போல் இருந்தது. ஊரில் உள்ள அனைவரும் பசியாறி, குளிர்ச்சியுற்று வாழ்த்தி சென்றது மனதை நெகிழ்ச்சியுற செய்தது.
 
மாலை அம்மனுக்கு பூஜை முடிந்ததும், ஊர்த்தேர் உற்சவ மூர்த்தியுடன் ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலம் ஒருபுறம், வான வேடிக்கை ஒருபுறம், சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் பரிசளிப்புகள் ஒருபுறம், அலங்காரப்பொருள் கடைகள், வீட்டிற்கு தேவையான பொருட்களின் கடைகள், துணிக்கடைகள் என்று ஊரே ஒரு 'நகர கடைவீதி' போல் காட்சியளித்தது. எங்கு நோக்கினும் மகிழ்ச்சி அலைகள். யாரை பார்த்தாலும் புன்னகை. அப்பப்பா! சொர்க்கத்திற்கு வந்துவிட்ட உணர்வு. ஒருபக்கம் அம்மனுக்கு 'அசைவ' படையல், இன்னொரு பக்கம் அன்னதானம், தெருக்கூத்து என்று எங்கு நோக்கினும் கூட்டம். சொந்த பந்தங்கள், உற்றார் உறவினர்கள், நண்பர்கள், வெளியூருக்கு புலம் பெயர்ந்தவர்கள் என்று அனைவரும் ஒன்று கூடி கொண்டாடியது நிச்சயம் மறக்க முடியாத ஒரு அனுபவம்.
 
இந்தியாவின் உயிர் நிச்சயம் 'கிராமங்களில்' தான் உள்ளது என்பதை உணர்ந்து கொண்ட நாள் என் வாழ்நாளில் பொன்னாள். இதில் ஒரு விஷயம் பார்த்தீர்களா. நாம் 'மேலாண்மை உத்திகள் ' (Management technique) என்று குறிப்பிடும் அனைத்தும் அங்கு அதிகம் படிக்காத மக்களால் கடைபிடிக்கப்படுகிறது. படித்துவிட்டு ஆட்டம் போதும் பலர் நிச்சயம் கற்றுக்கொள்ள 'கிராமத்தில்' ஏதோவொன்று இருந்து கொண்டே இருக்கிறது. முடிந்தால் தோழர்களே உங்கள் சொந்த கிராமத்திற்கு இல்லையென்றால் நண்பர்கள் கிராமத்திற்கு செல்லுங்கள். இன்றும் உயிரோடிருக்கும் 'கிராம' கலாச்சாரத்தை அனுபவித்து மகிழுங்கள்.

Wednesday, May 30, 2012

தேவை ஒரு தமிழ் அகராதி:

             இன்று தினசரி வாசிக்கும்போது கண்ணில் பட்ட வாசகம் ' துளை அடைக்கும் பணி தொடங்கியது'. எனக்கு உடனே ஒரு ஐயம். பணி துவங்கியது என்றோ அல்லது பணி ஆரம்பமானது என்றோ எழுதலாம் அல்லவா. விடை சொல்ல பக்கத்தில் ஆளில்லை. அப்பொழுது தான் உணர்ந்தேன் தமிழுக்கு 'அகராதி' இல்லை என்று. அனைத்து மொழிகளுக்கும் தமிழில் அகராதி இருக்கும் போது தமிழுக்கு தனியே அகராதி இல்லையே என்று வருத்தப்பட்டேன்.
 
             அதே போல் இன்னொரு பக்கத்தில் ' எதிர்ப்பு தெரிவித்தனர் ', 'கோஷம் போட்டனர் ' என்றெல்லாம் போட்டிருந்தது. 'எதிர்த்தனர்', 'கோஷமிட்டனர்' என்று எழுதலாமே. சரியான வழிகாட்டுதல் இல்லாமல் தமிழ் தனது தன்மையை இழந்து விடுமோ என்ற பயம் வயிற்றில் புளியை கரைத்தது.

Tuesday, May 29, 2012

நகரமா? நரகமா?

              கோடை வெயில் கொளுத்தும் இவ்வேளையில் இந்த பதிவு அவசியம் என்றே நினைக்கிறேன். சென்னையில் வசிப்பவர்களுக்கும், இங்கு வந்து போவோர்களுக்கும் நான் சொல்லும் விஷயங்கள் பரிச்சயமானவை. அக்னி நட்சத்திரம் 'அக்னி சூரியனாய்' கொளுத்துகிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வெயில் அதிகமென்றாலும் சென்னை ரொம்பவே அதிகம்.
 
                அந்நியன் படம் பார்த்திருப்பீர்கள். அதில் வரும் 'கருட புராண' தண்டனைகள் நினைவிருக்கலாம். அதில் வருவதைபோல் சென்னையில் தினமும் 'கும்பிபாகம்' தான். வருத்தும் வெயிலில் தினமும் வறுபடும் மக்கள் அடையும் வேதனைக்கு அளவே இல்லை. இது பரவாயில்லை. இந்த வெயிலில் 'போக்குவரத்து நெரிசல்' இல் சிக்கிக்கொண்டால் 'அந்தகூபம்' தான். இன்ச் இஞ்ச்சாக நகரும் வாகனங்களுக்கு நடுவே சிக்கி தவிக்கும் 'பைக்' பயணியை பார்க்கவேண்டுமே.
 
                  போக்குவரத்து நெரிசலை தாண்டி அடுத்த சிக்னலில் மாட்டாமல் செல்ல கொஞ்சம் வேகமெடுத்தால் அடுத்தது 'கிருமிபோஜனம்' தான். நமது நண்பரான போக்குவரத்து 'அதிகாரி' அப்படியே அட்டை மாதிரி உறிஞ்சிவிடுவார். இன்னும் அசிபத்தரவம், வஜ்ரகண்டம், பாணரோதம் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
 
                   அதனால் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், செய்த பாவங்களை தொலைக்க காசி, ராமேஸ்வரம் செல்லும் மக்களே, சென்னைக்கு வாருங்கள். செய்த பாவங்களுக்கும், செய்யாத பாவங்களுக்கும் 'நரக' வேதனை அனுபவித்துவிட்டு, இறப்பிற்கு பின்  'முக்தி' பெறுங்கள்.

Thursday, April 19, 2012

ஒழுக்கம் :

         இன்றைய தினசரியை படித்துக்கொண்டிருந்தேன். படித்து முடிப்பதற்குள் வியர்த்து கொட்டியது. 'மின்வெட்டு' என்று நீங்கள் நினைத்துக்கொண்டால் 'தவறு' என்னுடையது அல்ல. அதில் வந்த செய்திகளை படித்ததன் விளைவு. குறைந்தபட்சம் 5 கொலைகள் வெறும் கள்ளக்காதலினால் மட்டுமே. 'காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற இளம்பெண் கைது'. 'கள்ள காதலியுடன் சேர்ந்து மனைவியை கொன்றவன் கைது', 'கள்ள காதலை தடுத்ததால் கணவன் கொலை - மனைவிக்கு வலைவீச்சு'. 'கள்ள காதல் கொலை வழக்கில் திடுக் திருப்பம்'. இப்படி எத்தனையோ தலைப்புகளில் ஆங்காங்கே சிதறி கிடந்தது நமது ' கலாச்சாரம்'. தமிழகத்தில் தான் இருக்கிறேனா என்ற சந்தேகத்தினால் தான் வியர்த்து கொட்டியது.
 
            இவற்றுக்கு மூல காரணம் என்ன? ஏன் இவ்வாறு நடக்கிறது?
 
            முதல் காரணம் பெற்றோர்கள். தங்களின் பெண்ணோ/ பையானோ காதலிக்கிறார்கள் என்று தெரிந்தும், அவர்களை கட்டாயப்படுத்தி வேறு ஒருவருக்கு மணம் முடிப்பது கண்டிக்கப்படவேண்டிய விஷயம். திருமணத்திற்கு பிறகு காதலை மறக்க முடியாமல் தவிக்கும் பலர் 'தற்கொலை' செய்துகொண்டது அந்தக்காலம். இப்பொழுது அப்படி அல்ல. திருமணத்திற்கு பிறகும் தங்களின் 'புனிதமான' காதலை தொடர்கின்றனர். கணவனோ / மனைவியோ எதிர்க்கும் பட்சத்தில் அவர்களை தீர்த்துக்கட்டவும் தயங்குவதில்லை. இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைப்பதெப்படி?
 
             இரண்டாவது காரணம் அனைவரும் அறிந்ததே! பணம். தினமும் பணம், பணம் என்று அலையும் இன்றைய மக்கள் தங்கள் வாழ்க்கையை தொலைத்துவிடுகின்றனர். அதனால் ஏற்படும் மன அழுத்தத்தை பயன்படுத்திக்கொண்டு உள்ளே நுழையும் 'குள்ளநரிகள்' தங்களை நல்லவர்கள் போல் காட்டிக்கொண்டு சுலபமாக அவர்களுடன் பழக ஆரம்பித்து, பின்பு முடிவு .....?. மறுநாள் செய்தி. கணவனும் மனைவியும் பரஸ்பரம் அன்பு செலுத்தாததினால் வரும் குழப்பம் இது. அவைகள் மனது வைத்தால் இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.
 
              மூன்றாவது நமது மூடப்பழக்கவழக்கங்கள். விவாகரத்து என்பது தெய்வக்குற்றம் போல் பாவிக்கும் நிலை. கணவனுக்கோ / மனைவிக்கோ எவ்வளவு எடுத்துசொல்லி புரிய வைத்தும் ஒத்துவராத நிலையில் 'விவாகரத்து' தான் சரியான தீர்வு. ஆனால் அவ்வாறு நடப்பதில்லை. அதுவும் இதுபோன்ற ஒழுக்கக்கேடான நடத்தைக்கு காரணம். இதனால், நான் 'விவாகரத்தை' ஆதரிக்கிறேன் என்று அர்த்தமில்லை. தேவைப்பட்டால் கொடுக்கலாம் என்றுதான் சொல்லவருகிறேன்.
                 
            இப்படி காரணங்கள் ஆயிரம் இருந்தாலும் இன்று சீரழிந்து கிடப்பது நமது 'கலாச்சாரம்' தான். மிருகங்களுக்கும் நமக்கும் உள்ள வேறுபாட்டில் மிக முக்கியமானது இந்த 'ஒருவனுக்கு ஒருத்தி' விஷயம். ஆனால் நாம் அதனை மறந்து இன்று மிருகங்களாகி திரிகிறோம். தனி மனித ஒழுக்கமென்பது சொல்லிக்கொடுத்து வருவதன்று. உணர்ந்து தெரிந்து கொள்ள வேண்டியது.
 
           பெற்றோர்களே! பிள்ளைகளின் காதலுக்கு மதிப்பு கொடுங்கள். உங்களின் சுயநலதிற்காக மற்றவரின் வாழ்க்கையோடு விளையாடாதீர்கள். கணவான்மார்களே, மனைவிமார்களே! பணத்தை நேசிப்பதை விட்டு வாழ்க்கையை நேசியுங்கள்! உங்களின் வாழ்க்கை துணையை நேசியுங்கள்! நிச்சயம் தனிமனித ஒழுக்கம் தழைக்கும்.

Friday, April 6, 2012

ஐ.பி.எல். விளையாட்டு:

             ஆதிகாலத்தில் விளையாட்டு போட்டிகள் மனிதனின் வீரத்தை வெளிப்படுத்துவதற்காக விளையாடப்பட்டன. உதாரணமாக சிலம்பாட்டம், ஜல்லிக்கட்டு போன்றவற்றை சொல்லலாம். பின்பு திருமணத்திற்கு தயாராகும் மாப்பிள்ளையின் வீரத்தை சோதித்துப்பார்க்கவும் விளையாடப்பட்டன. ஊர்களுக்கிடையே நடத்தப்பட்ட போட்டிகள் பின்பு மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவில் நடத்தப்பெற்றன. பரிசுகளையும் பதக்கங்களையும் அள்ளிச்சென்று வீட்டில் வைத்து அழகு பார்த்தனர். நாளடைவில் ஆரோக்கியம் என்ற நிலை மாறி பணம் மட்டுமே பிரதானமாகி இன்று அனைத்து விளையாட்டுகளுமே சூதாட்ட களங்களாகிவிட்டன.
 
            விளையாட்டு வீரரை தகுதி அடிப்படையில் தேர்ந்தெடுக்கும் நிலை மாறி ஏலத்தில் எடுத்து 'தனக்காக' ஆடச்சொல்லி பணம் பார்க்கும் பணக்காரர்களின் பொழுதுபோக்காக இன்று விளையாட்டுகள் மாறிவிட்டன. ஊர், மாவட்டம், மாநிலம், நாடு என்ற நிலை மாறி தனியொரு மனிதனுக்காக 'நகரங்களின்' பெயர்களில் நடைபெறும் இன்றைய விளையாட்டு போட்டிகள் நிச்சயம் ஆரோக்கியமான விஷயம் இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது.
 
             விளையாட்டு - ஆரோக்கியம், பொழுதுப்போக்கு, வீரம் என்ற நிலை மாறி வெறும் ' சூது ' மட்டுமே மேலோங்கி நிற்கிறது.

கள்ளத்தனம் (கவிதை):

உறவில் கள்ளஉறவு
காதலில் கள்ளக்காதல்
வியாபாரத்தில் கள்ளவியாபாரம்
இப்படி அனைத்திலும்
கள்ளத்தனம் !!!
நாடு கேட்டுவிட்டது!
புலம்பிக்கொண்டே
கோவிலுக்கு சென்றேன்
அங்கேயும்
கடவுளுக்கு பதில்
சிலை!

Wednesday, March 14, 2012

புனித நூல் :

கீதை இருந்தும்
குரான், பைபிள் இருந்தும்
நம்மை வழிநடத்துவது
இ.பி.கோ !
 
காலை எழுவது முதல்
இரவு படுக்கும் முன்பு வரை
இ.பி.கோ நமது பின்னால்!
 
மனிதா !
புனித நூல் வெறுமனே
பூஜைக்கு மட்டுமோ?
 
சந்தனம் தடவி
பன்னீர் தெளித்து
முப்பொழுது பூஜை
செய்தால் மட்டும் போதும் !
 
வாழ வழி வகுத்து
நல்ல நெறிகள் பலச்சொல்லி
நலவாழ்வுக்கு இட்டு செல்லும்
புனிதநூல்கள்
வெறும் பூஜை பொருளாய்!
 
கடவுளை கல்லாக்கி
கருவறையில் பூட்டுபவர்கள் நாம்!
இந்த புத்தகங்கள் எம்மாத்திரம் !

Tuesday, February 28, 2012

இப்படியும் சிலர் - வாழ்க வளமுடன் :

                இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை சென்ட்ரலில் இருந்து எனது வீட்டிற்கு மின்சார ரயிலில் பயணம் செய்ய நேரிட்டது. பொதுவாகவே எனக்கு பயணங்களின்போது சிறிது இடைவெளி கிடைத்தாலும் புத்தகம் படிக்கும் பழக்கமுண்டு. அன்றும் அவ்வாறே படித்துக்கொண்டிருந்தேன். ஏதோ ஒரு ஸ்டேஷன்-ஐ வண்டி நெருங்கிக்கொண்டிருந்தது. சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் (இறங்குவதற்கு முன்) என்னிடம் 'நீங்கள் இந்த நிறுத்தத்தில் இறங்கவேண்டுமா?' என்று அந்த ஸ்டேஷன் பெயரை சொல்லிகேட்டார். நானும் 'இல்லை, என்னுடையது அடுத்தது' என்று சொல்லிவிட்டு புத்தகத்தில் மூழ்கினேன்.
 
                சிறிது யோசித்த பிறகு, எனக்கு ஏதோ வித்தியாசமாய் பட, அவரிடமே கேட்டேன். அதற்கு அவர் 'பலரும் பேருந்து அல்லது ரயில் பயணங்களின் போது புத்தகம் படிக்கும் பழக்கம் கொண்டவர்கள். சில சமயம் புத்தக ஸ்வாரசியத்தில் தாங்கள் இறங்க வேண்டிய இடத்தை தவறவிட்டு அவதிக்குள்ளாகின்றனர். அதனால் நான் இறங்கும் முன் யாரேனும் புத்தகத்துடன் தென்பட்டால் அவர்களை இவ்வாறு கேட்டு செல்வது வழக்கம்' என்றார். நான் அப்படியே மலைத்து போனேன். தங்கள் நிறுத்தம் வரும்போது ஓடும் வண்டியிலிருந்து இறங்கியோடும் 'வேகமான' உலகத்தில், அடுத்தவர் இறங்கும் இடத்தை நினைவுபடுத்தி செல்லும் இவர் நிச்சயம் பாராட்டப்படவேண்டியவர்.
 
                நாமும் இவ்வாறு நடக்க முயற்சிசெய்வோம் (?)

Thursday, February 2, 2012

கவிதைகள் :

அவளின்
கவிதை பேசும் கண்கள்
எங்கு கற்றன
என்னை பார்க்கும் பொது மட்டும்
வசை பாடுவதற்கு !
----
அவள் விழிகள் பேசுமாம்
அப்புறமேன்
வாய்பேச முடியாத
அவளுக்கு ஊமையென்ற பட்டப்பெயர் ?

பேருந்துக்குள் விலங்கினம் :

என் பேருந்து பயணத்தில்
நான் அதிகம் சந்திப்பது
மிருகங்களை தான்
 
இடித்துக்கொண்டு போகும் எருமை
பாக்கை குதப்பும் பன்றி
நாக்கை தொங்கவிட்டு
வெறிக்கும் நாய்
 
ஏ! நிர்வாகமே
ஒருபுறம் 'பெண்கள்' என்று எழுதிவைத்து
மறுபுறம் 'ஆண்கள்' என்று எழுத மறந்தாய்
 
பார்!
விலங்கினங்கள்
பெருந்துக்குள்!

உறவுக்கு உறவுகள் இல்லை :

இது
என் தாத்தா தந்த காசு
என் பாட்டி சொன்ன கதை
என் பெரியப்பா கொடுத்த பொம்மை
என் அண்ணன் தந்த மிட்டாய்
 
இவையெல்லாம் இன்று
பட்டணத்து
அங்கிளுக்குள்ளும்
ஆண்டிக்குள்ளும்
அடங்கிப்போய்
வெறுமையாய்!
 
உலகம் சுருங்கிப்போனது
உள்ளங்கள் சுருங்கிப்போனது
இன்று
உறவுகளும் சுருங்கிப்போய்
குற்றுயிரும் குலையுயிறுமாய்
 
ஐ‌சி‌யுவில் வைத்து காக்க
பாவம் உறவுக்கு இன்று உறவுகள் இல்லை!

ஆசை :

அதிகாலை சூரியன்
இளங்காலை தென்றல்
மலரும் மொட்டுக்கள்
சிலிர்க்கும் பறவை கூட்டம்
புல்லின் பனி கிரீடம்
இவை அனைத்தையும்
தரிசிக்க நினைத்தேன்
 
நாடு இரவு தாண்டி தொடரும்
கணினி சாட்டிங்
என்னை தற்காலிக குருடனாக்கி
வேடிக்கை பார்க்கிறது.

வெற்றி தோல்வி :

வெற்றி தோல்வி என்பது
நாணயத்தின் இரு பக்கங்கள்
என்று யார் சொன்னது,
 
உழைப்புக்கும் சோம்பலுக்கும்
உள்ள வித்தியாசம் அது
 
சோம்பலை கொன்று புதைத்து
உழைப்பென்ற விதையை விதைத்து
வியர்வை நீரை பாய்ச்சு
வெற்றி தானே வளரும்.

மழலைத் தமிழ் இனிமை (கவிதை) :

அடம் பிடிக்கும் குழந்தைக்கு
நிலவில் வடைசுடும் பாட்டியை காட்டி
சோறூட்டினாள் தாய்
 
நிலவுக்கு அழைத்து செல்வதாய் கூறி
பொம்மைக்கு சோறூட்டியது
குழந்தை.
---
 
என் மழலையின் கையால்
ஒரு துண்டு தோசையில்
என் வயிறு நிறைந்து போனது
 
என் விரல் பிடித்து நடக்கும்
குட்டி தேவதை கொடுத்த
பிஞ்சு இதழ் முத்தத்தில்
என் மனம் நிறைந்துபோனது
 
என் பிஞ்சின் மடியில்
பிள்ளையானேன்
அவள் மழலை தாலாட்டிலே!
---
 
மாலை வீடு திரும்பியதும்
ஓடிவந்து கட்டியணைக்கும்
குழந்தை
என் வாடிய முகம் பார்க்கும்
சின்னஇதழ் புன்னகையோடு!
 
சோர்வெல்லாம் தொலைந்துபோய்
உற்சாகம் பற்றிக்கொள்ள
குழந்தையோடு குழந்தையாய் மாறி
நான் விளையாடுவதைப் பார்த்து
பொறாமை படுகின்றன
பொம்மைகள் !
---
 
காலை பனியின் தூய்மை
மெல்லிய மலரின் குளுமை
வீசும் தென்றலின் மென்மை
இவை அனைத்தும்
மண்டியிட்டன
என் செல்ல மகள் முன்பு
தங்களின் தோல்வியை
ஒப்புக்கொண்டு !
---
 
தப்பும் தவறுமான
தமிழ் இனித்தது
என் குழந்தையின்
மழலையில் !
---
 
என் குழந்தை
பேசும் மழலை
கேட்டு வியக்கிறேன்
 
தமிழ்
இவ்வளவு
இனிமையா
என்று !
---
 
 

Saturday, January 21, 2012

சொர்க்கமும் நரகமும்:

         நமது புராண கதைகளிலும் வேதங்களிலும் சொல்லப்பட்ட விஷயங்கள் சொர்க்கமும் நரகமும். இன்றும் நமது மூளையில் இருக்கும் ஒரு நெருடல், இவை இருக்கின்றனவா? இல்லையா? அப்படி இருக்கிறதென்றால் எங்கே இருக்கிறது? சரிதானே. முதலில் அவற்றின் விளக்கங்களை பார்ப்போம். சொர்க்கம் என்றால் சுகபோகம், சந்தோஷம், பசிதெரியாமை, மகிழ்ச்சி. நரகமென்றால் கஷ்டம், தூக்கம், வேதனை, பசி, பட்டினி, வலி. இதனை நான் கூறவில்லை. நமது வேதங்களும், இதிகாசங்களும் பறைசாற்றுவது இவையே. சொர்க்கமும் நரகமும் புண்ணியமும் பாவமும். அவ்வளவே.
 
        சுகபோகமாய் சந்தோஷமாய் பசி தெரியாமல் வாழும் மக்கள் இருக்கும் இடங்கள் சொர்க்கம். பசி பட்டினியோடு வாழும் மக்கள் இருக்குமிடம் நரகம். ஒரே ஊரில் ஒருவர் சொர்க்கம் பகுதியிலும், மற்றொருவர் நரகப்பகுதிகளிலும் வசிக்கலாம். நகரங்கள் சில நேரங்களில் சொர்க்கமாகவும் பல நேரங்களில் நரகமாகவும் ஆகின்றன. கிராமங்கள் எப்போதும் சொர்க்கமாகவே இருக்கின்றன.
 
          இப்போது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். சொர்க்கமும், நரகமும் வெளி கிரகங்களோ / உலகமோ இல்லை. நம் மனமும், நம் மனம் சார்ந்த செயல்களும், அதனால் விளையும் விளைவுகளும் / மாற்றங்களும் / ஏமாற்றங்களும் தான் நம் மகிழ்ச்சியை நிர்ணயிக்கின்றன. நல்லதையே நினைப்போம், நல்லதையே செய்வோம், இல்லாதோருக்கு உதவுவோம், ஏழைக்கு எழுத்தறிவிப்போம் அதன் மூலம் 'நமக்கு சொர்க்கம் நிச்சயம்' - அதாவது இப்புவியில் சந்தோஷமாக வாழலாம். இல்லையேல் இருக்கும் பணத்தையும், இல்லாத அன்பையும் கட்டிக்கொண்டு அழுது புலம்ப வேண்டியதுதான் நரக வேதனையுடன்.

காதலியே! மீட்டெடு என்னை! (கவிதை)

மனவலி ஏற்படுத்தும்

மன வலி காதலுக்குண்டு,

 

அடிபட்டால் வெறும்

தேகவலி அது கணநேரம்

உன் கண்ணடி பட்ட

மனவலியோ ஆண்டுக்கும் !

 

அன்பே, பிரிவென்பது

உடலுக்கு மட்டும்தான்

உயிருக்கல்ல,

நம் உள்ளத்துக்குமல்ல !

 

ஆருயிரே, உன் நினைவால்

நான் தீட்டிய கவிதை ஓவியம்

என்னமாய் மின்னுகிறது பார் !

 

தூரிகை கொண்டு எழுதவில்லை!

இனிக்கும் வார்த்தைகள்

கொண்டும் எழுதவில்லை !

 

கரிக்கும் என் கண்ணீர்

கொண்டே எழுதினேன் !

மின்னுவது உலர்ந்துபோன

உப்புதான் !

 

பிரிவொன்று வேண்டாம் நம்

வாழ்நாளில் இனிஒருதரம் !

 

உன் மடியில்

சிறு தூக்கம் போட நேரமில்லை !

 

உனை கொஞ்ச

நேரமேதும் ஒதுக்கவில்லை !

 

நல்ல சீலையில்லை

பொழுதுப்போக்கு ஷோக்கு இல்லை

திரையரங்கம் செல்வதில்லை !

 

உனக்கான என் நேரம்

தூக்கத்தினால்

துக்கமாகிறது !

 

இது அறியா பிழையே அன்றி

நானாக விதைத்தது இல்லை,

நீயேனும் புரிந்துகொள்வாய் !

உன் சந்தேகம் கொல்வாய் !

 

வேறு யாருக்கும் புரியாது

நான் படும் வேதனைகள்,

 

என் இதயத்தில் குடியிருப்பதால்

உனக்காவது புரியும்

உனக்காக நான் துடிப்பது!

புரியாமல் ஏன்

ஒரு மௌனம் ?

 

வெறும் சீலையும்

பொழுபோக்கு ஷோக்கும்

நகையும் நட்டும் காதலல்ல !

 

உன் கழுத்துவழியே

பின் கூந்தல் வருடி

சிலிர்ப்பதும் காதல்தான் !

 

பிறை நெற்றி தடவி

இதழ் முத்தம் பதிப்பதும் காதல்தான் !

 

கடற்கரை சந்திப்பும்

திரையரங்க சில்மிஷங்களும்

காதலென்று சொன்னது யார்?

 

பரிசலிப்பதும்

பின்பு பல்லிளிப்பதும்

எனக்கு வராத பொய் வேஷங்கள் !

 

சுத்த தங்கம் போன்ற

தூய அன்பு என்னுடையது,

அதனாலேயே அணிகலன்

ஆகாமல் துருப்பிடித்த

உன் ஜன்னல் கம்பியாய் !

 

காற்றில் உள்ள ஆக்ஸிஜன்

நமக்கு உயிர் கொடுக்கும்

அதுவே

இரும்பின் உயிர் எடுக்கும் !

 

உன் மௌனம் பலமுறை

எனக்கு உயிர் கொடுத்தது

அதுவே இப்போது

என் உயிர் குடிக்கிறது.

 

தொடரும் உன் மௌனம்

என்னை சிறுக சிறுக

காணாமல் போக செய்கிறது

 

முழுவதுமாய் கரைவதற்குள்

உன் இதழ் திறந்து

எனை மீட்டெடு!

Friday, January 13, 2012

பொங்கல் திருநாள் !

        பொங்கல் பொதுவான ஒரு பண்டிகையாக இருந்தாலும் மற்ற பண்டிகையை போல் தமிழகம் முழுவதும் ஒரே மாதிரி கொண்டாடப்படுவதில்லை. இந்தத் திருநாள் ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் தனிச்சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. கிராமங்களில் ஒருமாதிரியும், நகரங்களில் ஒருமாதிரியும் கொண்டாடப்பட்டாலும் 'பொங்கல்' என்னவோ ஒன்றுதான். கிராமங்களில் பொங்கலானது 5 நாட்கள் முதல் 10 நாட்கள் வரையில் கொண்டாடப்படுகிறது. நகரங்களில் ஒன்று அல்லது இரண்டுநாட்கள் மட்டுமே.
 
         கிராமங்களின் பெருமையை இந்த பொங்கல் திருநாளில் நாம் தெளிவாக காணலாம். போகியன்று 'பழையன கழிதலும், புதியன புகுதலும்' என்று வீடு மற்றும் மனதில் உள்ள பழைய, உபயோகமில்லாதவற்றை சுத்தம் செய்து, வெள்ளையடித்து மகிழ்வது வழக்கம். மறுநாள் பெரிய பானையில் வெண்பொங்கலும், கொஞ்சம் சிறிய பானையில் சர்க்கரை பொங்கலும் செய்து சூரியனுக்கு படைத்து, தாமும் உண்டு மற்றவருக்கும் பகிர்ந்தளித்து மகிழ்வர். மூன்றாம் நாள் உழவுக்கு துணைபுரியும் ஆடு, மாடு போன்றவற்றை அலங்கரித்து, பூஜித்து பொங்கல் வைத்து 'மாட்டுப்பொங்கலாக' கொண்டாடி களிப்பர். அடுத்தநாள் பொங்கல் உண்ட களைப்பு போக வீரவிளையாட்டுகளும், அதற்கடுத்த நாள் திருவிழாவும் கொண்டாடுவார். இன்னும் சில ஊர்களில் போகிக்கு மூன்று நாட்களுக்கு முன்பிருந்தே பொங்கல் ஆரம்பித்துவிடும்.
 
       நகரங்களில் பொங்கல் கொண்டாட நிச்சயம் பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்கவேண்டும்.போகியன்று லாரி டயர், பிளாஸ்டிக் குப்பைகளை எரித்தல், மறுநாள் ஸ்டவ் இல் பொங்கல், நாள் முழுவதும் தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகள், மாட்டுப்பொங்கல் கிடையாது. காணும் பொங்கல் என்று ஒன்றை வைத்துக்கொண்டு கடற்கரையை குப்பையாக்குவது அல்லது திரையரங்கை குப்பையாக்குவது. பின்பு மறுநாட்களில் எப்போதும் போல் 'எந்திர' வாழ்க்கை. இவர்கள் போடும் குப்பைகளாலும், எரிக்கும் டயரினாலும் சுற்றுசூழல் பாதிப்படைவதோடு மக்களின் சுகாதாரத்தையும் கெடுக்கிறது. நகரங்களில் 'பொங்கல்' கொண்டாடுவதை தடை செய்தால் தேவலை.
 
         ஆயினும், பொங்கல் தமிழர் திருநாள் என்பதால் 'பொங்கலோ பொங்கல்' , 'பொங்கலோ பொங்கல்', 'பொங்கலோ பொங்கல்'.

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !

இனிய  தமிழ் நண்பர்களே! அனைவருக்கும் எனது இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

Tuesday, January 10, 2012

தமிழ்த்தாய் வணக்கம்!

தமிழ்த் தாயே போற்றி!
திருக்குறள் அணிந்த அழகே போற்றி!
அகத்தியர் அருளிய இலக்கணமே போற்றி!
தொல்காப்பியம் புனைந்தாய் போற்றி!
இலக்கியம் பல படைத்தாய் போற்றி!
வாழும் வழி காட்டிய சக்தியே போற்றி!
எங்களை வாழவைக்கும் மூச்சே போற்றி!
உலகமெலாம் உள்ளோய் போற்றி!
எமை காக்கும் அன்னையே போற்றி!
உனை என்றும் மறவா வரம் வேண்டும்!
அன்னையே! போற்றி!போற்றி!

Thursday, January 5, 2012

வியப்பு (கவிதை) :

காலை பனிக்குள் சூரியன்!
சிறிய விதைக்குள் ஆலமரம்!
சின்னஞ்சிறு கருவில் திமிங்கலம்!
அணுவின் உட்கருக்குள் சக்தி!
என்று படைத்தாய்!
 
இத்தனை பெரிய
மனித மூளைக்குள்
சாதி, மதம், மொழி
வைத்த நீ
அறிவை வைக்க
மறந்தாய்!
 
நித்தம் புது புது பிரச்சினையை
கிளப்பிவிட்டே வீண் -
வம்புவளர்க்கும் அறிவு மட்டும்
எப்படி வந்தது
உன் படைப்பையும் மீறி!
 

உலக அழகிகளும் அறிவும்:

            உலக அழகிப்போட்டி என்றில்லை. எந்த ஒரு அழகி போட்டியானாலும் நிச்சயம் வெறும் அழகுக்கு மட்டும் பரிசு கிடைத்துவிடுவதில்லை. அழகுடன் அறிவும் இருந்தால் மட்டுமே பரிசும் புகழும். ஆனால் எனக்கு தெரிந்து ஐஸ்வர்யா ராய் தொடங்கி நம்மூர் லோக்கல் அழகிகள் வரை போட்டியில் வென்றபின்பு தங்கள் 'புற அழகையும்' 'புகழையும்' மட்டுமே முதலீடு செய்கின்றனர். இதுவே வெளிநாட்டில் 'பொதுசேவை' என்பதை கூட சேர்த்துக்கொள்வார்கள். அவ்வளவே.
 
          இதுவரை எனக்கு தெரிந்த வரையில் எந்தவொரு அழகியும் 'மாவட்ட ஆட்சியர்' ஆகவோ, அல்லது அறிவு சார்ந்த துறையில் வல்லுனராகவோ ஆனதாக சரித்திரம் இல்லை. பரிசு கொடுக்கும் போது அழகும் அறிவும் வேண்டும் என்று அறிவுத்தும் போட்டியை நடத்தும் நடுவர்கள் பரிசு கொடுத்தபின்பு உண்மையிலேயே அவர்களின் அறிவின் உபயோகத்தை காண்பதில்லை.
 
         வெறும் புற அழகை வைத்து மட்டும் பணம்பார்க்கும் இவர்களுக்கு 'அழகிபோட்டி' தேவையா? அப்படியே நடத்தபெரினும் அதில் 'அறிவு அல்லது சமயோஜித அறிவு ' சார்ந்த கேள்வியோ தேவையா? அப்படி கேட்கப்படும் கேள்விக்கு பதிலளிக்கும் 'அழகிகள்' பின்னாளில் அதனை முற்றிலுமாக மறந்துவிடுகிறார்களே, இதற்கு விதிமுறைகள் இல்லையா?
 
          வெறும் சோப்பு, வாசனை திரவியம், ஆடைகள், ஆபரணங்கள், அலைபேசி விளம்பரங்களுக்கு மட்டுமே உபயோகப்படும் இந்த அழகிகள் உலக அளவில் தேர்ந்தெடுக்கப்படவேண்டுமா?