மனவலி ஏற்படுத்தும்
மன வலி காதலுக்குண்டு,
அடிபட்டால் வெறும்
தேகவலி அது கணநேரம்
உன் கண்ணடி பட்ட
மனவலியோ ஆண்டுக்கும் !
அன்பே, பிரிவென்பது
உடலுக்கு மட்டும்தான்
உயிருக்கல்ல,
நம் உள்ளத்துக்குமல்ல !
ஆருயிரே, உன் நினைவால்
நான் தீட்டிய கவிதை ஓவியம்
என்னமாய் மின்னுகிறது பார் !
தூரிகை கொண்டு எழுதவில்லை!
இனிக்கும் வார்த்தைகள்
கொண்டும் எழுதவில்லை !
கரிக்கும் என் கண்ணீர்
கொண்டே எழுதினேன் !
மின்னுவது உலர்ந்துபோன
உப்புதான் !
பிரிவொன்று வேண்டாம் நம்
வாழ்நாளில் இனிஒருதரம் !
உன் மடியில்
சிறு தூக்கம் போட நேரமில்லை !
உனை கொஞ்ச
நேரமேதும் ஒதுக்கவில்லை !
நல்ல சீலையில்லை
பொழுதுப்போக்கு ஷோக்கு இல்லை
திரையரங்கம் செல்வதில்லை !
உனக்கான என் நேரம்
தூக்கத்தினால்
துக்கமாகிறது !
இது அறியா பிழையே அன்றி
நானாக விதைத்தது இல்லை,
நீயேனும் புரிந்துகொள்வாய் !
உன் சந்தேகம் கொல்வாய் !
வேறு யாருக்கும் புரியாது
நான் படும் வேதனைகள்,
என் இதயத்தில் குடியிருப்பதால்
உனக்காவது புரியும்
உனக்காக நான் துடிப்பது!
புரியாமல் ஏன்
ஒரு மௌனம் ?
வெறும் சீலையும்
பொழுபோக்கு ஷோக்கும்
நகையும் நட்டும் காதலல்ல !
உன் கழுத்துவழியே
பின் கூந்தல் வருடி
சிலிர்ப்பதும் காதல்தான் !
பிறை நெற்றி தடவி
இதழ் முத்தம் பதிப்பதும் காதல்தான் !
கடற்கரை சந்திப்பும்
திரையரங்க சில்மிஷங்களும்
காதலென்று சொன்னது யார்?
பரிசலிப்பதும்
பின்பு பல்லிளிப்பதும்
எனக்கு வராத பொய் வேஷங்கள் !
சுத்த தங்கம் போன்ற
தூய அன்பு என்னுடையது,
அதனாலேயே அணிகலன்
ஆகாமல் துருப்பிடித்த
உன் ஜன்னல் கம்பியாய் !
காற்றில் உள்ள ஆக்ஸிஜன்
நமக்கு உயிர் கொடுக்கும்
அதுவே
இரும்பின் உயிர் எடுக்கும் !
உன் மௌனம் பலமுறை
எனக்கு உயிர் கொடுத்தது
அதுவே இப்போது
என் உயிர் குடிக்கிறது.
தொடரும் உன் மௌனம்
என்னை சிறுக சிறுக
காணாமல் போக செய்கிறது
முழுவதுமாய் கரைவதற்குள்
உன் இதழ் திறந்து
எனை மீட்டெடு!