இந்த வலைப்பூவில் தேட....

திருக்குறள்

Thursday, February 2, 2012

மழலைத் தமிழ் இனிமை (கவிதை) :

அடம் பிடிக்கும் குழந்தைக்கு
நிலவில் வடைசுடும் பாட்டியை காட்டி
சோறூட்டினாள் தாய்
 
நிலவுக்கு அழைத்து செல்வதாய் கூறி
பொம்மைக்கு சோறூட்டியது
குழந்தை.
---
 
என் மழலையின் கையால்
ஒரு துண்டு தோசையில்
என் வயிறு நிறைந்து போனது
 
என் விரல் பிடித்து நடக்கும்
குட்டி தேவதை கொடுத்த
பிஞ்சு இதழ் முத்தத்தில்
என் மனம் நிறைந்துபோனது
 
என் பிஞ்சின் மடியில்
பிள்ளையானேன்
அவள் மழலை தாலாட்டிலே!
---
 
மாலை வீடு திரும்பியதும்
ஓடிவந்து கட்டியணைக்கும்
குழந்தை
என் வாடிய முகம் பார்க்கும்
சின்னஇதழ் புன்னகையோடு!
 
சோர்வெல்லாம் தொலைந்துபோய்
உற்சாகம் பற்றிக்கொள்ள
குழந்தையோடு குழந்தையாய் மாறி
நான் விளையாடுவதைப் பார்த்து
பொறாமை படுகின்றன
பொம்மைகள் !
---
 
காலை பனியின் தூய்மை
மெல்லிய மலரின் குளுமை
வீசும் தென்றலின் மென்மை
இவை அனைத்தும்
மண்டியிட்டன
என் செல்ல மகள் முன்பு
தங்களின் தோல்வியை
ஒப்புக்கொண்டு !
---
 
தப்பும் தவறுமான
தமிழ் இனித்தது
என் குழந்தையின்
மழலையில் !
---
 
என் குழந்தை
பேசும் மழலை
கேட்டு வியக்கிறேன்
 
தமிழ்
இவ்வளவு
இனிமையா
என்று !
---