இந்த வலைப்பூவில் தேட....

திருக்குறள்

Saturday, January 21, 2012

காதலியே! மீட்டெடு என்னை! (கவிதை)

மனவலி ஏற்படுத்தும்

மன வலி காதலுக்குண்டு,

 

அடிபட்டால் வெறும்

தேகவலி அது கணநேரம்

உன் கண்ணடி பட்ட

மனவலியோ ஆண்டுக்கும் !

 

அன்பே, பிரிவென்பது

உடலுக்கு மட்டும்தான்

உயிருக்கல்ல,

நம் உள்ளத்துக்குமல்ல !

 

ஆருயிரே, உன் நினைவால்

நான் தீட்டிய கவிதை ஓவியம்

என்னமாய் மின்னுகிறது பார் !

 

தூரிகை கொண்டு எழுதவில்லை!

இனிக்கும் வார்த்தைகள்

கொண்டும் எழுதவில்லை !

 

கரிக்கும் என் கண்ணீர்

கொண்டே எழுதினேன் !

மின்னுவது உலர்ந்துபோன

உப்புதான் !

 

பிரிவொன்று வேண்டாம் நம்

வாழ்நாளில் இனிஒருதரம் !

 

உன் மடியில்

சிறு தூக்கம் போட நேரமில்லை !

 

உனை கொஞ்ச

நேரமேதும் ஒதுக்கவில்லை !

 

நல்ல சீலையில்லை

பொழுதுப்போக்கு ஷோக்கு இல்லை

திரையரங்கம் செல்வதில்லை !

 

உனக்கான என் நேரம்

தூக்கத்தினால்

துக்கமாகிறது !

 

இது அறியா பிழையே அன்றி

நானாக விதைத்தது இல்லை,

நீயேனும் புரிந்துகொள்வாய் !

உன் சந்தேகம் கொல்வாய் !

 

வேறு யாருக்கும் புரியாது

நான் படும் வேதனைகள்,

 

என் இதயத்தில் குடியிருப்பதால்

உனக்காவது புரியும்

உனக்காக நான் துடிப்பது!

புரியாமல் ஏன்

ஒரு மௌனம் ?

 

வெறும் சீலையும்

பொழுபோக்கு ஷோக்கும்

நகையும் நட்டும் காதலல்ல !

 

உன் கழுத்துவழியே

பின் கூந்தல் வருடி

சிலிர்ப்பதும் காதல்தான் !

 

பிறை நெற்றி தடவி

இதழ் முத்தம் பதிப்பதும் காதல்தான் !

 

கடற்கரை சந்திப்பும்

திரையரங்க சில்மிஷங்களும்

காதலென்று சொன்னது யார்?

 

பரிசலிப்பதும்

பின்பு பல்லிளிப்பதும்

எனக்கு வராத பொய் வேஷங்கள் !

 

சுத்த தங்கம் போன்ற

தூய அன்பு என்னுடையது,

அதனாலேயே அணிகலன்

ஆகாமல் துருப்பிடித்த

உன் ஜன்னல் கம்பியாய் !

 

காற்றில் உள்ள ஆக்ஸிஜன்

நமக்கு உயிர் கொடுக்கும்

அதுவே

இரும்பின் உயிர் எடுக்கும் !

 

உன் மௌனம் பலமுறை

எனக்கு உயிர் கொடுத்தது

அதுவே இப்போது

என் உயிர் குடிக்கிறது.

 

தொடரும் உன் மௌனம்

என்னை சிறுக சிறுக

காணாமல் போக செய்கிறது

 

முழுவதுமாய் கரைவதற்குள்

உன் இதழ் திறந்து

எனை மீட்டெடு!

Friday, January 13, 2012

பொங்கல் திருநாள் !

        பொங்கல் பொதுவான ஒரு பண்டிகையாக இருந்தாலும் மற்ற பண்டிகையை போல் தமிழகம் முழுவதும் ஒரே மாதிரி கொண்டாடப்படுவதில்லை. இந்தத் திருநாள் ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் தனிச்சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. கிராமங்களில் ஒருமாதிரியும், நகரங்களில் ஒருமாதிரியும் கொண்டாடப்பட்டாலும் 'பொங்கல்' என்னவோ ஒன்றுதான். கிராமங்களில் பொங்கலானது 5 நாட்கள் முதல் 10 நாட்கள் வரையில் கொண்டாடப்படுகிறது. நகரங்களில் ஒன்று அல்லது இரண்டுநாட்கள் மட்டுமே.
 
         கிராமங்களின் பெருமையை இந்த பொங்கல் திருநாளில் நாம் தெளிவாக காணலாம். போகியன்று 'பழையன கழிதலும், புதியன புகுதலும்' என்று வீடு மற்றும் மனதில் உள்ள பழைய, உபயோகமில்லாதவற்றை சுத்தம் செய்து, வெள்ளையடித்து மகிழ்வது வழக்கம். மறுநாள் பெரிய பானையில் வெண்பொங்கலும், கொஞ்சம் சிறிய பானையில் சர்க்கரை பொங்கலும் செய்து சூரியனுக்கு படைத்து, தாமும் உண்டு மற்றவருக்கும் பகிர்ந்தளித்து மகிழ்வர். மூன்றாம் நாள் உழவுக்கு துணைபுரியும் ஆடு, மாடு போன்றவற்றை அலங்கரித்து, பூஜித்து பொங்கல் வைத்து 'மாட்டுப்பொங்கலாக' கொண்டாடி களிப்பர். அடுத்தநாள் பொங்கல் உண்ட களைப்பு போக வீரவிளையாட்டுகளும், அதற்கடுத்த நாள் திருவிழாவும் கொண்டாடுவார். இன்னும் சில ஊர்களில் போகிக்கு மூன்று நாட்களுக்கு முன்பிருந்தே பொங்கல் ஆரம்பித்துவிடும்.
 
       நகரங்களில் பொங்கல் கொண்டாட நிச்சயம் பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்கவேண்டும்.போகியன்று லாரி டயர், பிளாஸ்டிக் குப்பைகளை எரித்தல், மறுநாள் ஸ்டவ் இல் பொங்கல், நாள் முழுவதும் தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகள், மாட்டுப்பொங்கல் கிடையாது. காணும் பொங்கல் என்று ஒன்றை வைத்துக்கொண்டு கடற்கரையை குப்பையாக்குவது அல்லது திரையரங்கை குப்பையாக்குவது. பின்பு மறுநாட்களில் எப்போதும் போல் 'எந்திர' வாழ்க்கை. இவர்கள் போடும் குப்பைகளாலும், எரிக்கும் டயரினாலும் சுற்றுசூழல் பாதிப்படைவதோடு மக்களின் சுகாதாரத்தையும் கெடுக்கிறது. நகரங்களில் 'பொங்கல்' கொண்டாடுவதை தடை செய்தால் தேவலை.
 
         ஆயினும், பொங்கல் தமிழர் திருநாள் என்பதால் 'பொங்கலோ பொங்கல்' , 'பொங்கலோ பொங்கல்', 'பொங்கலோ பொங்கல்'.

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !

இனிய  தமிழ் நண்பர்களே! அனைவருக்கும் எனது இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

Tuesday, January 10, 2012

தமிழ்த்தாய் வணக்கம்!

தமிழ்த் தாயே போற்றி!
திருக்குறள் அணிந்த அழகே போற்றி!
அகத்தியர் அருளிய இலக்கணமே போற்றி!
தொல்காப்பியம் புனைந்தாய் போற்றி!
இலக்கியம் பல படைத்தாய் போற்றி!
வாழும் வழி காட்டிய சக்தியே போற்றி!
எங்களை வாழவைக்கும் மூச்சே போற்றி!
உலகமெலாம் உள்ளோய் போற்றி!
எமை காக்கும் அன்னையே போற்றி!
உனை என்றும் மறவா வரம் வேண்டும்!
அன்னையே! போற்றி!போற்றி!

Thursday, January 5, 2012

வியப்பு (கவிதை) :

காலை பனிக்குள் சூரியன்!
சிறிய விதைக்குள் ஆலமரம்!
சின்னஞ்சிறு கருவில் திமிங்கலம்!
அணுவின் உட்கருக்குள் சக்தி!
என்று படைத்தாய்!
 
இத்தனை பெரிய
மனித மூளைக்குள்
சாதி, மதம், மொழி
வைத்த நீ
அறிவை வைக்க
மறந்தாய்!
 
நித்தம் புது புது பிரச்சினையை
கிளப்பிவிட்டே வீண் -
வம்புவளர்க்கும் அறிவு மட்டும்
எப்படி வந்தது
உன் படைப்பையும் மீறி!
 

உலக அழகிகளும் அறிவும்:

            உலக அழகிப்போட்டி என்றில்லை. எந்த ஒரு அழகி போட்டியானாலும் நிச்சயம் வெறும் அழகுக்கு மட்டும் பரிசு கிடைத்துவிடுவதில்லை. அழகுடன் அறிவும் இருந்தால் மட்டுமே பரிசும் புகழும். ஆனால் எனக்கு தெரிந்து ஐஸ்வர்யா ராய் தொடங்கி நம்மூர் லோக்கல் அழகிகள் வரை போட்டியில் வென்றபின்பு தங்கள் 'புற அழகையும்' 'புகழையும்' மட்டுமே முதலீடு செய்கின்றனர். இதுவே வெளிநாட்டில் 'பொதுசேவை' என்பதை கூட சேர்த்துக்கொள்வார்கள். அவ்வளவே.
 
          இதுவரை எனக்கு தெரிந்த வரையில் எந்தவொரு அழகியும் 'மாவட்ட ஆட்சியர்' ஆகவோ, அல்லது அறிவு சார்ந்த துறையில் வல்லுனராகவோ ஆனதாக சரித்திரம் இல்லை. பரிசு கொடுக்கும் போது அழகும் அறிவும் வேண்டும் என்று அறிவுத்தும் போட்டியை நடத்தும் நடுவர்கள் பரிசு கொடுத்தபின்பு உண்மையிலேயே அவர்களின் அறிவின் உபயோகத்தை காண்பதில்லை.
 
         வெறும் புற அழகை வைத்து மட்டும் பணம்பார்க்கும் இவர்களுக்கு 'அழகிபோட்டி' தேவையா? அப்படியே நடத்தபெரினும் அதில் 'அறிவு அல்லது சமயோஜித அறிவு ' சார்ந்த கேள்வியோ தேவையா? அப்படி கேட்கப்படும் கேள்விக்கு பதிலளிக்கும் 'அழகிகள்' பின்னாளில் அதனை முற்றிலுமாக மறந்துவிடுகிறார்களே, இதற்கு விதிமுறைகள் இல்லையா?
 
          வெறும் சோப்பு, வாசனை திரவியம், ஆடைகள், ஆபரணங்கள், அலைபேசி விளம்பரங்களுக்கு மட்டுமே உபயோகப்படும் இந்த அழகிகள் உலக அளவில் தேர்ந்தெடுக்கப்படவேண்டுமா?
 
 

Thursday, December 29, 2011

ஓட்டு போட்டால் மட்டும் போதுமா?

சமீப 'தானே' புயல் ஒரு கலக்கு கலக்கிவிட்டு போயிருக்கிறது. எங்கு நோக்கினும் தண்ணீர். சாலை, வீதி, வீடு என்று அனைத்து இடங்களிலும் மழை நீர் நிரம்பி வழிகிறது. சாக்கடை நீர் மேலெழும்பி மழை நீருடன் கலந்து 'நோய்' பரப்பிக்கொண்டிருக்கிறது. சற்றே தொலைக்காட்சியை உயிரூட்டி செய்தி அலைவரிசையை நாடினேன். அவர்கள் சாதாரணமாகவே அனைத்தையும் மிகைப்படுத்துவார்கள். இப்பொழுது கேட்கவே வேண்டாம். பிரச்சனைகளை உடனுக்குடன் வெளி சொல்வதற்கு மட்டும் இன்றைய ஊடகங்கள்.
 
செய்திகளுக்கிடையே நேரடி அறிக்கை அளித்த அனைத்து நிருபர்களும் ஏனோ மக்களின் பிரச்சனைகளை காட்ட மறுத்தனர். 'நைட்டி' அணிந்த பெண்கள் தங்களின் வாக்குமூலத்தில் 'இது வரை யாரும் வந்து எட்டிப்பார்க்கவில்லை' என்ற ஒரே முறையீட்டை வைத்தனர். யாரோ சொல்லி கொடுத்து பேசியதை போன்றதொரு உணர்வு. அது ஒருபுறமிருக்க, காமிரா கையால்பவர் வெறுமனே அலைகளையும், கடலையுமே காண்பித்து பீதியை கிளப்பிக்கொண்டிருந்தார். நம் மேல் அவருக்கு என்ன 'கொலவெறியோ'.
 
ஊடகங்கள் தங்களின் கடமையை மறக்கின்றன. ஓட்டு போடுவதோடு நமது கடமை முடிந்துவிடுகிறது. யார் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்ற மனப்போக்கு ஏன்? 'இது வரை யாரும் வந்து எட்டிப்பார்க்கவில்லை' - என்று வெறுமனே அடுத்தவர் மேல் பழி போட்டு நம் 'கடமையை' சரிவர செய்த திருப்தியை அடைகிறோம். அந்த 'யாரும்' என்பது யார் என்று குறை கூறுபவர்களுக்கும் தெரியாது, அதனை படம் பிடிப்பவர்களுக்கும் தெரியாது. ஏதோ செய்தி, ஒளிபரப்பினால் லாபம் வரும் என்று வெறும் வியாபார நோக்கே இங்கு தலை தூக்கி நிற்கிறது.
 
ஊடகங்கள் அந்த 'யாரும்' என்பதை வெளிக்கொணர வேண்டாமா? மக்களின் குறையை காண்பிக்கும் இவர்கள், நடவடிக்கை எடுக்க வேண்டியவர்களை சந்தித்து 'என்ன செய்யப்போகிறீர்கள்?' என்ற கேள்வியெழுப்பி, காத்திருக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்வழி காட்டவேண்டாமா? அதை விடுத்து 'வீடுகளில் கடல் நீர் புகுந்தது', 'மக்கள் நடுத்தெருவில் நிற்கிறார்கள்' என்று பிளாஷ் செய்தி போட்டு தங்களின் வியாபார லாபத்தை மட்டுமே பார்க்கிறார்கள்.
 
'யாரும்' வந்து பார்த்துவிட்டால் மட்டும் நம் குறை தீர்ந்து விடுமா? ஏன் நமக்குள் ஒரு ஒற்றுமை இல்லை. நமக்கு நாமே ஏன் தோள் கொடுத்துக்கொள்வதில்லை. யாரோ ஒருவரின் 'பார்வை' மட்டும் நமது பிரச்சனைக்கு தீர்வல்ல. ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து, இருப்பதை பகிர்ந்து ஏன் வாழக்கூடாது. ஒற்றுமையாக சென்று தேவைகளை அரசிடம் (ஆகிம்ஸா வழியில்) ஏன் முறையிடக்கூடாது. கடந்த மூன்று நாட்களாக ஒரே செய்தி, ஒரே பிரச்சனை, ஒரே குமுறல். விடியல் தான் வந்தபாடில்லை.
 
ஊடகங்களே மக்களின் பிரச்சனையை வெளியுலகுக்கு காட்டுவது மட்டும் உங்கள் கடமை அல்ல. அதற்கான தீர்வை எடுத்துக்காட்ட வேண்டியதும் உங்கள் கடமை தான்.

Wednesday, December 28, 2011

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்:

இனிய நண்பர்களே!
 
உங்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 2012 - ஏ வருக! வளம் தருக!

லோக்பால் :

அம்புலி காட்டி
அடம்பிடிக்கும் குழந்தைக்கு
அமுதூட்டும் தாய்!
அங்கே அது பாசம்!
 
லோக்பால் என்று சொல்லி
ஏதோ ஒரு பாலை
நமக்கூட்டும் அரசு!
இங்கே அது வேஷம்!
 
லஞ்சத்திற்கு இங்கே
அன்பளிப்பு என்று பெயர்,
வஞ்சதிற்கு இங்கே
அன்பு-அழிப்பு என்று பெயர்
 
விழித்துக்கொள் தோழனே
இது பருவமழை அல்ல
இவருடம் பொய்த்தால்
அடுத்த வருடம் மகசூல் பெற!
 
ஊழலுக்கு எதிர்க்குரல்
கொடுத்து உறங்கும்
சத்தியத்தை விழித்தெழ செய்வோம்!
நம் நாட்டிலிருந்து
லஞ்சத்தை விழுந்தோட செய்வோம்!

Monday, December 26, 2011

தமிழல்லா தமிழ் வார்த்தைகள்:

நமது அன்றாட வாழ்க்கையில் தமிழ் போர்வையில் உலா வரும் பிறமொழி வார்த்தைகள் தமிழின் தன்மையை மாற்றி விடுகின்றன. அவை பெரும்பாலும் செய்தித்தாள் மற்றும் தொலைகாட்சி செய்திகள் வழியே பரவுவது நிச்சயம் ஆரோக்கியமானதல்ல. பிற மொழி சொற்கள் பரவாயில்லை, சில சமயங்களில் ஆண்பால் பெண்பால் பிரச்சனைகள் வரும்போது கொஞ்சம் வருத்தமாக இருக்கும். உதாரணமாக குங்குமம் இதழில் வெளிவரும் கைத்தொழில் சார்ந்த கட்டுரையில் 'இதில் இவர் நிபுணி' எழுதுவார்கள். நிபுணர் என்பது ஆண்பால் என்பது எனக்கு இதுவரை தெரியாது. நண்பருக்கு பெண்பால் நண்பி மற்றும் வில்லனுக்கு பெண்பால் வில்லி என்றும் பிறகே என் சிறுமூளையால் புரிந்துகொள்ள முடிந்தது.
 
தலைப்பில் எதுகை, மோனை வேண்டுமென்று பிறமொழி கலப்பில் ஈடுபடும் எழுத்தாளர்கள் பலர். 'இன்று ஸ்டிரைக் வாபஸ்' இது முதலிடமென்று மார்தட்டிக்கொள்ளும் தினசரி செய்திதாள் தலைப்பு. அழகிய தமிழை வளர்க்கிறோம் என்று மிக அருமையாக 'கெடுக்கும்' செயல் கண்டிக்கப்படவேண்டியது. பத்திரிக்கை சுதந்திரம் என்று ஒரு மொழியை சிறுக சிறுக கொல்வது எந்த விதத்தில் நியாயம். சமானியனை அணுக அவன் மொழியில் செய்தியை தருவதே சிறந்தது என்று வாதிடும் மனிதர்களும் உண்டு. அவர்களை போலவே நீங்களும் தவறாகவே சொன்னால் அவர்களுக்கு தன்னுடைய தவறு எப்பொழுது புரிவது?
 
மொக்கை, களாசல், ஃபிகர், இவை இன்றைய இளைய தலைமுறையின் புதுத்தமிழ். 'அந்த ஃபிகர் மொக்கை மச்சான்', 'ஃபிலிம் மொக்கைடா', 'உடம்பு ரொம்ப பேஜார் பண்ணுது' இவை படித்த அனைவரும் பேசும் செந்தமிழ். சென்னையில் மட்டுமில்லை, தமிழகம் முழுவதும் தமிழ் செத்துக்கொண்டுதான் இருக்கிறது. ஆங்கிலேயன் அவன் மொழிக்கு இடையில் தமிழ் கலப்பதில்லை. ஏன்? தமிழனாய் பிறந்து 'ஆங்கிலம்' சரளமாக பேசுபவர்கள் மறந்தும் இடைச்செருகலாக தமிழை பயன்படுத்துவதில்லை. ஆனால் தமிழ் பேசும் பொழுது மட்டும் பல மொழிகளின் கலப்பு ஏன்?
 
தமிழுடன் கலந்துவிட்ட சமஸ்கிருத வார்த்தைகளை பற்றி பேசவில்லை தோழர்களே. அது முடிவில்லா பிரச்சனை. என்னுடைய இந்த பதிவில் எத்தனையோ சமஸ்கிருத வார்த்தைகள் எனக்கு தெரியாமலேயே நுழைந்துள்ளன. நமது அடிப்படை கல்வி அப்படி. எடுத்துக்காட்டு: ஆரோக்கியம், தினம், பத்திரிக்கை, வார்த்தை - இப்படி பல.
 
அர்த்தமில்லா வார்த்தைகள் பற்றிய எனது குமுறல் எரிமலை போல் ஒவ்வொரு நாளும் என்னுள் கொதித்துக்கொண்டே இருக்கிறது.
 
(பி.கு. ஆரோக்கியம் - நலம், தினம் - நாள், பத்திரிக்கை - செய்தித்தாள், வார்த்தை - சொல். இதன் மூலம் 4 தமிழல்லா வார்த்தைகளை அடையாளம் காட்டிய திருப்தி)

Thursday, December 22, 2011

நாணயம்:

 செயல் - 1 : பெட்ரோல் பங்கிற்கு சென்றிருந்தேன். என் பைக்கில் 100 ரூபாய்க்கு பெட்ரோல் போடச்சொன்னேன். அவரும் பம்பை இயக்கி நிரப்ப துவங்கினார். ரூ.99.52 வந்தவுடன் நிறுத்திவிட்டு, அடுத்த வண்டியை அழைத்தார். நான் அவரிடம் மெதுவாக 'நான் 100 ரூபாய்க்கு போடச்சொன்னேன்' என்றேன். அவரும் 100 க்கு தான் போட்டிருக்கிறேன் என்று கூறிவிட்டு, இன்னும் கொஞ்சம் விட்டால் 100.22 ஆகிவிடும், முதலாளி திட்டுவார் என்று கூறிவிட்டு தன் வேலையை தொடர்ந்தார். நுகர்வோருக்கு 50 பைசா நஷ்டம் ஆனாலும் பரவாயில்லை. தன்னுடைய 20 பைசா தான் முக்கியம் என்று நினைக்கும் இவர்களை என்னவென்று சொல்வது.
 
செயல் - 2 : மொபைல் டாபப் செய்ய சென்றிருந்தேன். ரூ.99 க்கு ரேட் கட்டர் போடச்சொல்லி ரூ.100 கொடுத்தேன். அவரும் பெற்றுக்கொண்டு டாபப் செய்தார். மீதி ரூ.1 ஐ தரவேயில்லை. இதோ தருகிறேன் பொறுங்கள் என்று சொல்லி 15 நிமிடம் காக்கவைத்து என்னை அலைக்கழித்ததுதான் மிச்சம். கடைசிவரை தரவேயில்லை.
 
பெரும்பாலும் நமக்கெல்லாம் பேருந்து பயணத்தின் போது நடத்துனரிடம் சண்டை போட்ட அனுபவம் இருக்கும். ஆனால் இவை தவிர்க்கபடவேண்டியவை. இத்தகு செயல்கள் நிச்சயம் ஆரோக்கியம் அல்ல. இவற்றுக்கு தீர்வே இல்லயா? ஏன் இல்லை. E-Money. ATM, DEBIT கார்ட் வகைகளில் சில்லறை என்ற பேச்சுக்கு இடமே இல்லை. அதுபோல் பணத்திற்கு பதில் SMART card வழங்கி இது போன்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

Tuesday, December 13, 2011

உழைப்பை திருடாதே!

கனவுக்கன்னியென்று கோயில் கட்டி
ரசிக்கும் என் இனிய ரசிகனே!
திரையில் என் அழகு கண்டு
மனமேங்கும் அருமை ரசிகனே!
 
என் இதழ் புன்னகையில் மயங்கி
மனைவி இவள்போல்
வேண்டுமென்று கிறங்கும் ரசிகனே!
நான் படும் வேதனைகள் விருதுக்காக
அல்ல உன் ரசனைக்காக!
 
நாற்று நடும் பெண்களுக்கு
சுட்டெரிக்க ஒரு சூரியன்!
திரையில் நான் அழகாய் மின்ன
படபிடிப்பில் எனை சுற்றி
பல சூரியன்கள்!
 
ஓவனுக்குள் சிக்கனை போல்
தினம் தினம் வேகிறேன் - நான்,
கோழிக்கு ஒருநாள் வேதனை
எனக்கோ தினம் தினம்!!
 
ஆனால் நீயோ,
என் உழைப்பிற்கு விலை தராமல்
என் நடிப்பை
ஆன்லைனில் இலவசமாய்
டவுண்லோட் செய்து பார்க்கிறாய்!
 
என் இனிய ரசிகனே என் வேதனையை
ஒருமுறை நினைத்து பார்
டவுண்லோட் பட்டனை
கிளிக் செய்யும் முன்பு!

Tuesday, December 6, 2011

வொய் திஸ் கொலவெறி டி!

       சமீப நாட்களாக இந்தியாவையே குலுக்கி கொண்டிருந்த விஷயம் தனுஷின் ' ஏன் இந்த கொலவெறிடி ' என்ற பாடல் (பாடல் என்றே வைத்துக்கொள்வோம்). சிறியவர்கள், இளைஞர்கள் என்று அனைவரின் வாயிலும் 'கொலவெறி' தான். அப்படி என்னதான் இருக்கிறது என்று யூட்யூப் - இல் தட்டினால் பாடல் வீடியோவுடன் பார்க்கமுடிந்தது. தங்லீஷ் என்று சொல்ல முடியாத அளவிற்கு ஏதோ ஒரு இங்கிலீஷ் உபயோக பட்டிருக்கிறது. பக்கத்திலேயே ஒரு குழந்தை பாடிய ' கொலவெறி' யையும் வெளியிட்டிருந்தனர். ஏதோ 'rhyms' போல குழந்தை என்ன அழகாக பாடுகிறது. பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
 
      மெட்டுக்காக அமைக்கபெற்ற போலி பாடல் வரிகள் தான் என்றாலும், இளைஞர்களை மையப்படுத்தி வருவதால் கொஞ்சம் ரசிக்கும் படி உள்ளது. ராகம், தாளம், அது இதுவென்று அலைபவர்களுக்கு நிச்சயம் இந்த பாட்டு பிடிக்க வாய்ப்பில்லை. குளியலறையில் பாடும் பாடலாக எடுத்துக்கொண்டால் நிச்சயம் ரசிக்கலாம். சில சமூகவலைதளங்கள் மூலமாக தான் இத்தனை 'அக்கபோரும்' என்று புலம்புபவர்களும் உண்டு.
 
       இவ்வளவு நடந்தாலும் தனக்கு எதுவுமே தெரியாதது போல் இருக்கும் 'தனுஷை' பாராட்டலாம். தொடரட்டும் தமிழ் மேல், தமிழ் இசை மேல்  அவருக்கு இருக்கும் 'கொலவெறி'.

Wednesday, November 30, 2011

பாரதியார் கவிதைகளும் புதுமை பெண்களும்:

            நிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட பார்வை கொண்டு பெண்ணாடிமை செய்வோரை தன் பார்வயாலே சுட்டெரிக்க வேண்டும், அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு வேண்டாம் என்று சொன்ன மூடர்கள் அழிய பெண்கள் உயர்படிப்பு பெறவேண்டும், உயர்படிப்பு அதன்மூலம் நல்லாட்சி நடத்தி ஆணுக்கு பெண் இளைப்பில்லை என்று நிரூபிக்க வேண்டும் என்றெல்லாம் கனவு கண்டவன் பாரதி. அப்போது அவன் கனவு மெய்யானதோ தெரியாது. ஆனால் இன்று பல புதுமை பெண்கள் இந்தியாவில் இருப்பதை கண்டு நிச்சயம் அவன் ஆத்மா சந்தோஷங்கொள்ளும்.
 
           நிற்க. இன்றைய செய்தித்தாள் (அல்லது இ-பேப்பர்) படித்தீர்களா? அதில் நீங்கள் கண்ட புதுமை பெண்களை மட்டும் (நற்செயல், சமூக சேவை, கள்ள காதல், திருட்டு, லஞ்சம், ஊழல் - என்று அனைத்தும் தான்) பட்டியலிட்டு ஒரு அட்டவணை தயார் செய்யுங்கள். அட்டவனையில் அவரவர் செயல்களுக்கேற்ப மதிப்பெண் கொடுங்கள். நற்செயலுக்கு + ve மதிப்பெண்களும், தீயதிற்கு - ve மதிப்பெண்களும் கொடுத்து (100 க்கு) பின்னால் அவற்றின் சராசரியை பாருங்கள். நிச்சயம் 30% குறைவான மதிப்பெண்களே வரும்.
 
           பெண்விடுதலை என்பது கலாச்சார மீறல் அல்ல. பெண்விடுதலை என்பது அடுத்தவரை மதியாமை அல்ல. பெண்விடுதலை என்பது மிருகத்தனம் அல்ல. ஆண்களிடம் அடிமையாய் வாழ்ந்த பெண்களை படிக்கச்சொல்லி அவர்களையும் சமுதாயத்தில் ஒரு அங்கமாக பாவித்து சமநிலையை ஏற்படுத்த நினைத்தான் பாரதி. ஆனால் வளந்து நிற்பதோ 'முள்' காடு. புதுமை என்று சொல்லி கலாச்சார மீறல்களில் ஈடுபடும் பெண்கள்தான் ஏராளம். பெரியோரை மதிக்காமல், மிருகத்தனமான வாழ்க்கைக்கு இன்று வித்திட்டு கொண்டுள்ளனர். எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்வோம் என்பதை மறந்துவிட்டார்கள்.
 
            ஆண்களுக்கு இணை என்ற பாரதி கனவு பல துறைகளில் இன்று பெண்களை முன்னேற வைத்துள்ளது. அதோடு ஆண்களின் கெட்ட செயல்களிலும் (குடி, சிகரெட், கள்ள காதல், திருட்டு, லஞ்சம், ஊழல் - என்று அனைத்தும் தான்) இணையாக செய்ய முடியும் என்றும் நிரூபித்துள்ளனர். செய்தித்தாள் பாருங்கள். பாரதி கனவு இன்று நனவாகி (partial) இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. பெண்கள் போகப்பொருளாக கருதப்பட்ட காலம் மலையேறிவிட்டது என்ற கூற்று மட்டும் மாறவேயில்லை.  விளையாட்டில் ஒரு சானியா, அறிவியலில் ஒரு கல்பனா என்று ஒருபுறம் பார்த்து ரசிக்கிறோம். விமான பணிபெண்ணாக, ஹோட்டல் வரவேற்பாளராக, விளையாட்டுத்துறையில் CHEER GIRLS ஆக, பெண்கள் இன்றும் போகப்பொருளாவதை நாமே பார்த்து ரசிக்கிறோம்.
 
          பெண்விடுதலை பாரதியின் கனவுதான். இன்றைய பெண்களின் கனவல்ல.

Monday, November 28, 2011

சமூக வலைதளங்கள் - ஒரு எச்சரிக்கை:

            தோழர்களே! நம்மில் 100 க்கு 99 பேர் பேஸ்புக் அல்லது இதர சமூக வலைதளத்தின் பயனர் என்பது மறுக்கமுடியாத உண்மை. சமூக வலைதளங்களால் நன்மைகளும் உண்டு. அதே சமயம் தீமைகளும் உண்டு. நன்மைகளை விடுத்து தீமைகளை மட்டுமே எடுத்தாளும் கயவர்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது. குறிப்பாக இளம் பெண்கள் பலர் பாதிக்கப்பட்டும் வெளியில் சொல்லாமல் உள்ளுக்குள்ளே அழுத்திவிடுகின்றனர். சமுதாய நலன் மட்டுமின்றி நமது கலாச்சாரம், பெண்களின் பாதுகாப்பு போன்றவையும் தான் கேள்விக்குறியாகின்றன.
 
        எதில் தான் இல்லை குறை நிறைகள்? உங்கள் கேள்வி நியாயமானது தான். அதே சமயம் உங்களை சார்ந்தவர்களை அல்லது தெரிந்தவர்களை காப்பாற்றவேண்டியது உங்களது / நமது கடமையல்லவா? பாதையில் புதைகுழி இருப்பது தெரிந்தும் அவ்வழியே போவோரை தடுக்காமல் வேடிக்கைபார்ப்பது எந்த விதத்தில் தர்மம். குறைந்தபட்சம் புதைகுழி பற்றி எச்சரித்து அனுப்பலாமே. மீறி செல்பவர்கள் பலனை அனுபவிக்க வேண்டியதுதான். அடுத்தவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பாதிக்கப்பட்டோர் தங்களை வெளிப்படுத்தி, அதன் மூலம் சமூக விரோதிகளை அடையாளம் காண்பிக்கலாம். இதனால் சமூகமும், பெண்களும் பாதுகாப்பாக இருப்பர்.
 
          தயவுசெய்து சமூக வலைதளங்களால் பதிக்கப்பட்டோர் யாராகினும் தயவுசெய்து தங்களை வெளிப்படுத்தி அனைவருக்கும் விழிப்புணர்வூட்டுங்கள். நீங்கள் ஏற்றும் இந்த தீபம் நல்லவர்களுக்கு வழிகாட்டும் ஒளியாகவும், தீயவர்களுக்கு தீயாகவும் இருக்கட்டும்.