இந்த வலைப்பூவில் தேட....

திருக்குறள்

Monday, October 24, 2011

பருவ மழை

சோவென்று பெய்யும்
புது மழையில் துள்ளித்
தாளம் போட மனமில்லை
குளிரில் நடுங்கிய
புன்னை மரத்து
குருவி குஞ்சை
பார்த்தபின்பு!
 
 

கலப்பு திருமணம்

கறவை மாடு அதிகம் கரக்க,
வயலில் மகசூல் பெருக
கனிவகை விரைவில் காய்க்க என்று
விவசாயத்தில் வேண்டும் 'கலப்பு'
 
காவலுக்கு வீரம் சேர்க்க
உடலில் கம்பீரம் மிளிர
பெண்ணுக்கு பரிசாய் கொடுக்க என்று
நாயிலும் வேண்டும் 'கலப்பு'
 
சூடு அதிகம் தாங்க
சக்தி அதிகம் பெருக
தாங்குதிறன் மிகுதியாய் என்று
உலோகத்தில் வேண்டும் 'கலப்பு'
 
பணத்திற்காக
கலப்பினை ஏற்பவன்
மணமென்று வந்தால்
கசப்பினை உமிழ்வதேன்?
 
கலப்பின் பலனை
மனதனிலும் புகுத்திட்டால்
சக்தி பெருகுமென்றும்
பலன் ஆயிரமென்றும்
புரிந்துகொள் 'சாதி வெறியனே'!

Thursday, October 20, 2011

மாணவ சக்தி

பகல் வரும் சூரியனின் ஒளி
உயிர் கொடுக்கும் ஆக்க சக்தி
புவி உயிர்க்கு!
அதையே
குவித்தால் கொன்று குவிக்கும்
அழிவு சக்தி
அது அழிக்கும் சக்தி!
 
மாணவர் என்றோர் ஆக்க சக்தி
குவிகிறது அழிப்பதற்கு மட்டும்.
ஆக்கத்தை போதிக்க ஆளில்லை!
போதிக்கத் துணிந்தோர்
அச்சக்தி முன் நிலைப்பாரில்லை.
 
கல்விபயில கூடம் செல்வோர் கூட்டு
இப்போ போதைக்கு மட்டும்.
படிப்பயண உற்சாகம்
பெண்களிடம் கலாட்டா என்று
இன்றைய மாணவ பருவம் தயாரானது
நாளைய மாணவருக்கு அறிவுரை கூற!
 
ஆக்கசக்தியை ஒன்றாக்கி நாட்டுக்கு
உயிர் கொடுக்க ஆளில்லை!
மாணவர் தனது சக்தி உணர
நமது கல்வி தரமில்லை!
 

Monday, October 17, 2011

மனதில் தோன்றியது

ஒருநாள் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தேன். திடீரென என் மூளைக்குள் ஏதோ திரும்ப திரும்ப ஒலித்துக்கொண்டிருப்பது போன்றோரு பிரமை. சிறிது ஓரமாய் நின்று அமைதியாக யோசிக்க, வார்த்தைகள் தெளிவாக புரிய ஆரம்பித்தன.
 
"நீ என்னை எவ்விதம் பார்க்கிறாயோ, நான் அவ்விதமே உனக்கு காட்சியளிப்பேன்!"
"நீ என்னை எவ்விதம் பார்க்கிறாயோ, நான் அவ்விதமே உனக்கு காட்சியளிப்பேன்!"
"நீ என்னை எவ்விதம் பார்க்கிறாயோ, நான் அவ்விதமே உனக்கு காட்சியளிப்பேன்!"
 
எனக்கொன்றும் விளங்கவில்லை. பழையபடி நடக்க ஆரம்பித்தேன். இன்றும் எனக்குள் ஒரு ஐயம், அன்று நடந்தது என்ன? வினாவுக்கு விடைதான் கிடைக்கவில்லை. தேடல் தொடர்கிறது. அன்றிரவு நல்ல இடியுடன் கூடிய மழை. மின்னல் வெளிச்சம் என்னுள் பாய்ந்த உணர்வு. இறந்து விட்டேனா? இல்லை. உணர்விருக்கிறது. பின்பு நடந்தது என்ன? உங்களுக்கு புரிகிறதா?
 
அன்று தான் நான் என்னை உணர்ந்தேன். 'நான்' என்பதை துறந்தேன். பேரின்பம் என்னை ஆட்கொண்டது.
 
----
ஒரு கற்பனை சொற்பொழிவிலிருந்து....
 

Saturday, October 15, 2011

சமுதாயம் ஒரு கேள்விக்குறி

           என்னுடைய முந்தைய பதிவு வேடிக்கை கதைதான் என்றாலும் அதில் புதைந்துள்ள உண்மைகளை பார்த்தால் நமக்கு தலை சுற்றல் வரும் போல் உள்ளது. மதத்தின் பெயரால் அனைவரும் தங்களது சுயநல தேவையை மட்டுமே பூர்த்திசெய்து கொள்கின்றனர் என்பது தெளிவாக புலனாகும். மனித நேயம் என்பதையே மறந்து தங்களது சுய லாபத்திற்காக 'மதத்தை' பயன்படுத்தும் இழிநிலை வருந்த தக்கது.
 
          ஆதியில் மனிதன் மிருகத்தோடு மிருகமாய் வாழ்ந்த காலத்தில், அவைகளிடமிருந்து தனித்து தெரிய சற்று புத்தி முற்றிய மனிதரால் தோற்றுவிக்கப்பட்டது தான் 'சமூக கட்டுபாடு'. அதுதான் நாளடைவில் மாறி மதமாய், பின்பு ஜாதியாய் உருவெடுத்தது. நாகரீகம் தோன்றிய காலத்தில், குழுக்களாய் வாழ்ந்த மனிதன் வேறொரு குழுவை எதிரிகளாக பாவித்து பகை பாராட்டி வந்தான். ஒரு நாகரீகத்தை சேர்ந்தவன் மற்றவனை பகையாக நினைத்தான்.
 
          நாகரீகம் வளர்ந்த இன்றைய காலகட்டத்தில் மதத்தின் பெயரால் பகை பாராட்டி வருகிறோம். மிருக வாழ்க்கை வாழ்ந்த 'கற்கால' மனிதர்களாய் இன்றும் நம்முள் சில புல்லுருவிகள். வெறும் பாண்ட், சட்டை, டை மட்டுமே நாகரீகமில்லை. மனித நேயம் தான் நாகரீகம். வெறும் மதப்பற்று மட்டுமே பக்தியில்லை, பிற உயிர்களின் மேல் அன்பு தான் பக்தி.

சிங்கும் மதபோதகரும் (நெட்டில் படித்தவை)

                ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வேலை முடிந்த பின்பு, வீட்டிற்கு வெளிப்புறத் தோட்டத்தில் நமது திருவாளர் சிங் அவர்கள் தந்தூரி சிக்கனையும், மட்டன் வருவலையும் செய்வது வழக்கம். ஆனால் பக்கத்து வீடுகளில் குடியிருப்பவர்கள் அனைவரும் தீவிர கத்தோலிக்கர்கள். அவர்கள் வெள்ளிக்கிழமைகளில் அசைவம் சாப்பிடுவதில்லை. அசைவம் சமைக்கும் போது அதிலிருந்து வரும் வாசம் கத்தோலிக்கர்களின் விரதத்தை சீண்டி பார்த்தது. அதனால் அவர்கள் தங்களின் மதபோதகரிடம் முறையிட்டனர்.
 
                ஒருநாள் அவரும் திருவாளர் சிங்கை சந்தித்து மதம் மாறிவிடும்படி வற்புறுத்தினார். நீண்ட நாள் போதனைகளுக்கு பிறகு அந்த நன்னாளும் வந்தது. போதகர் சிங்கின் மீது புனித நீரை தெளித்து " ஒரு சீக்கியனாக பிறந்தாய், சீக்கியனாக வளர்ந்தாய். ஆனால் இப்போது நீ ஒரு கத்தோலிக்கன்" என்றார்.
 
               பிறகென்ன, அண்டைவீட்டார் அனைவருக்கும் சந்தோஷம் தாங்கமுடியவில்லை. ஆனந்த கூத்தாடினர். ஆனால் அவர்களின் ஆனந்தம் நீடிக்கவில்லை. அடுத்த வெள்ளிக்கிழமையே அசைவத்தின் வாசம் அவர்களின் மூக்கை துளைத்தது. கோபமுற்ற அவர்கள் மதபோதகரிடம் முறையிட்டனர். உடனே புறப்பட்ட அவர் சிங்கின் தோட்டத்திற்கு விரைந்தார். இன்று அவனை கடுமையாக கண்டிக்கவேண்டும் என்று சென்றவர் அங்கு நடந்ததை பார்த்து அதிர்ச்சியுற்று மயங்கி விழுந்தார்.
 
                 நடந்தது இதுதான். நம்ம திருவாளர் மிகவும் பக்தியுடன் புனித நீர் இருத்த ஒரு புட்டியை திறந்து வறுத்த கோழி மற்றும் ஆட்டு கறி துண்டுகள் மேல் தெளித்து இவ்வாறு சொன்னார் "நீங்கள் கோழியாகவும், ஆடாகவும் பிறந்தீர்! கோழியாகவும், ஆடாகவும் வளர்ந்தீர்! ஆனால் இன்று நீங்கள் உருளை கிழங்கும் தக்காளியும்".

Monday, October 10, 2011

தேர்தல் அறியாமை:

தேர்தல் நாள்?
வினா எழுப்பினேன்
 
ரூவா ஐநூறு
கிடைக்கும் நாள்,
இலவசமாய் வாசலில்
அஞ்சி கிலோ
அரிசி கெடைக்கும் நாள்,
 
பிரியாணி கூடவே
முட்டையும் போடும்
ஃபங்சன் என்று
பலவாறு பதில்கள்!
 
எப்படி புரிய வைக்க?
 
அஞ்சுக்கும் பத்துக்கும்
சுயமரியாதையை
அடகு வைக்கும்
மூடர்களுக்கு
'உங்கள் தலைவிதி'யை
நீங்களே எழுதும்
நாளென்று!
 

காதலி !

அவள்
என் காதலி!
 
அவள்
என்
இதயம் கிழித்து
இரத்தம் பூசிக்கும்
அழகிய ராட்சசி,
 
அவளின்
கடைக்கண்
பார்வையால்
கசையடி கொடுக்கும்
கன்னி அரசி,
 
அவள்
கண்ணசைவால்
கட்டளையிடும்
காவிய நாயகி,
 
அவள்
சிரிப்பால் என்
உயிர் குடிக்கும்
சிரிப்பழகி,
 
அவள்
என் காதலி!

மாணவபருவ குறும்புகள்:

         சமீபத்தில் நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த பொது சிறுவயதில் படித்த பள்ளிகளை பற்றி பேச்சு வந்தது. அப்போது அவர் சொன்ன ஒரு 'குறும்பை' உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.நண்பர்  எட்டாம் வகுப்பு படிக்கும் பொது அரையாண்டு தேர்வின் பொது வேறு சில காரணங்களால் சரியாக படிக்கவில்லை. வேறு என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு நல்ல சினிமா பாடலை பத்து மதிப்பெண்கள் பகுதிக்கு எழுதி இருக்கிறார். தேர்வு முடிந்து விடுமுறை ஆரம்பமாக அனைவரும் மகிழ்ச்சியாக வெளியூர் சுற்ற கிளம்பிவிட்டனர்.
 
        அரையாண்டு விடுமுறை கழிந்து பள்ளிக்கு சென்ற அவருக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. ஆம். அவரின் பாடலுக்கு ஆசிரியர் 10 மதிப்பெண்கள் இட்டிருந்தார். லேசாக அதிர்ச்சியுற்றவர் ஆசிரியரை வினவ, அவர் புண் சிரிப்புடன் " பாட்டு புத்தகம் வாங்கி சரிபார்த்தேன். ஒரு பிழையும் இல்லை. அதனால் தான் முழுமதிப்பெண்கள்" என்று கூற, வகுப்பில் ஒரே சிரிப்பலை. ஆனால் மற்றுமொருமுறை இவ்வாறு நிகழ்ந்தால் 10 மதிப்பெண்கள் கழிக்கப்படும் என்று பின்குறிப்பாக கூற மாணவர்கள் இன்னும் பெருங்குரலெடுத்து சிரிக்க அன்றைய தினம் மறக்க முடியாத ஒரு 'கல்வெட்டாக' அனைவரின் மனதிலும் நீங்கா இடம்பெற்றதாக அதே களிப்புடன் பகிர்ந்துகொண்டார்.

Friday, September 30, 2011

மங்காத்தா - திரை விமர்சனம்:

            வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் அடுத்த கிரிக்கெட் திரைப்படம். 'தல' அஜீத், 'ஆக்ஷன் கிங்' அர்ஜுன் இணைந்து மிரட்டி இருக்கிறார்கள். கதைக்களம் கிரிக்கெட் சூதாட்டம் மற்றும் அதனை சார்ந்தவர்கள். கொள்ளைக்காரனிடம் கொள்ளை அடிக்கும் கதாநாயகன் கதை. கதைதான் நாயகன் என்றாலும் கதாநாயகிகள் என்று எடுத்துக்கொண்டால் செண்டிமெண்டுக்காக த்ரிஷா, ஆன்ட்ரியா மற்றும் அஞ்சலி, கவர்ச்சிக்காக லஷ்மி ராய் மற்றும் பிரபலமான வாரிசு நடிகர்கள். சலிப்பில்லாத திரைக்கதையாலும் யுவனின் இசையினாலும் படம் 'போர்' இல்லாமல் நகர்கிறது.
 
           பிரேம்ஜி அறிமுகமாகும் காட்சியில் இருந்து குண்டடி படும் கட்சி வரை நூடுல்ஸ் தலையனாக வந்து காமெடி செய்கிறார். அஜித்தும், அர்ஜுனும் ஒன்றாக போலீஸ் ட்ரைனிங் எடுத்தவர்கள் என்று கிளைமாக்ஸில் 'போட்டோ' வுடன் காட்டிவிட்டு, ஆண்ட்ரியாவுக்கு அஜித்தை தெரியாதது போல் காட்டியது, 40 வயது இளைஜனை கண்டதும் காதலிக்கும் த்ரிஷா, மனவளர்ச்சி குன்றியவராக போக்குவரத்து துறை கட்டுப்பட்டு அறையில் பிரேம்ஜி செய்யும் தில்லு முள்ளு, அந்த நால்வரும் செய்யும் அனைத்து திட்டங்களையும் அவர்களுக்கு தெரியாமலே 'ஃபாலோ' செய்வதாய் அவர்கள் பின்னாலேயே அலையும் அஜீத் என்று திரைக்கதையில் ஆங்காங்கே சிறு மற்றும் பெரிய லாஜிக் ஓட்டைகள். மற்றபடி 'மங்காத்தா' ஒரு சிறந்த பொழுதுப்போக்கு திரைப்படம்.
 
           பைக் சாகசம், கார் சேசிங் என்று அஜீத் அசத்தி இருக்கிறார். கிளிமாக்ஸ் சண்டை ஆக்ஷன் பிரியர்களுக்கு தீனி போடுகிறது. லக்ஷ்மி ராய் வரும் பாடல் காட்சிகள் ரசிக்கும்படி இருந்தாலும் வில்லத்தனமாக பணத்தை அடிக்க திட்டம் தீட்டுவதை எளிதாக எடுத்துக்கொள்ளமுடியவில்லை. கதைக்கு ஆன்ட்ரியா மற்றும் அஞ்சலி போன்ற நடிகைகளின் தேவை என்ன என்று சத்தியமாக விளங்கவில்லை. வெங்கட் பிரபு தான் விளக்கவேண்டும். அந்த பாத்திரங்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் திரைக்கதையில் இல்லை. புதுமுகங்களை கூட போட்டிருக்கலாம்.
 
           மங்காத்தா – வெங்கட்பிரபுவின் சிக்சர்.
 
 

Monday, September 26, 2011

கவித்தூறல்:

சூரியன்:
 
நாள் முழுதும்
சுட்டெரித்தாலும்
ரசிக்க மறப்பதில்லை
மேகத்திற்கு பின்புறம்
கண்ணாமூச்சி விளையாடும்
மாலை நேர
சூரியனை!
 
வானம்:
 
மழையில் குளித்து
வானவில் உடையணிந்து
வெட்க சிரிப்புடன்
வானம்!

Thursday, September 22, 2011

கடவுளும் நானும் – IV (பக்தி வியாபாரம்):

         இப்பொருள் விற்பனைக்கு அல்ல என்று சில நுகர்பொருட்களில் பார்த்திருக்கலாம். அவை அரசால் ஏழைகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டவை. அவ்வாறு இறைவன் மக்களுக்கு இலவசமாய் வாரி இறைப்பது 'அருள்' தான். அதற்கு மனிதன் செய்யும் கைமாறு தூய பக்தி. ஏதோ சங்ககால கடவுள்கள்தான் 'இலவச' அருள் வழங்கினார்கள், இப்போதெல்லாம் அப்படி இல்லை என்று கூறுமளவிற்கு 'பக்தி' வெறும் வியாபாரமாகி போய்விட்டது.
 
         ஸ்வாமி தரிசனம் ரூ.500, சிறப்பு பூஜை ரூ.350, தட்சணை ரூ.51, பூ மற்றும் பழம் கொடுத்தால் கடவுளின் பூரண நல்லாசி உங்களுக்குத்தான். கோவிலுக்கு வெளியே நம்ம யானையார் ரூ.1 வாங்கி கொண்டு ஆசீர்வதிப்பார். விலங்கு என்பதால் 'ரேட்' குறைவு. மற்றபடி எல்லாம் ஒன்றுதான்.
 
        பரிகாரம் செய்தால் செய்த பாவம் போய்விடும். இது லேட்டெஸ்ட். கொலை செய்துவிட்டு அரசுக்கு ஏதேனும் 'பரிகாரம்' செய்துவிடலாமே. எதற்காக காவல் துறை, நீதிமன்றம், சட்டம், தண்டனை. ஒருவரின் வாழ்க்கையை கெடுத்துவிட்டு இறைவனுக்கு பரிகாரம் செய்வதால் வாழ்வை இழந்தவனுக்கு மீண்டும் கிடைக்குமா? 'கொன்றால் பாவம் தின்றால் போச்சு' பழமொழியை உருவாக்கியவர்களே நாம் தானே. எங்கே திருந்தபோகிறோம்.
 
         ஆடு, மாடு, கோழி என்று கடவுளுக்கு பலி கொடுத்து, ஒரு உயிரை வதைத்து இறைவனை குஷிப்படுத்தும் கடமை உணர்ச்சியை என்னவென்று சொல்ல!

Tuesday, September 20, 2011

கடவுளும் நானும் – III (பெயர்கள் பலவிதம்):

              இஸ்லாமியர் வணங்கும் கடவுளுக்கு ஒரே பெயர் 'அல்லா'. கிறித்துவர்கள் வணங்கும் கடவுளுக்கும் ஒரே பெயர் 'ஏசு'. இந்துக்கள் வணங்கும் கடவுளுக்கு மட்டும் ஏன் ஆயிரமாயிரம் திருநாமங்கள். தெருவுக்கு தெரு கோயில். ஒவ்வொரு கோயிலிலும் கடவுளுக்கு வேறு வேறு பெயர். கடவுளுக்கு பெயர் சூட்டு விழா நடத்த நாம் யார். நடத்துபவன் அவனே என்று சப்பை கட்டுபவர்கள் விளக்கம் கூறட்டும். இந்தியாவில் மொழி, இனம், ஜாதி, மதம் என்று அனைத்திலும் வேறுபட்டு, ஊழலில் ஒற்றுமையாய் வாழ்ந்துகாட்டி 'வேற்றுமையில் ஒற்றுமை' கண்டோம். கடவுளுக்கும் அதே நிலையை கொடுத்துள்ளோம். வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் அனைத்தும் வேறு வேறு கதைகள் கூறினாலும் 'உண்மை' என்பது ஒன்றாகத்தான் இருக்கவேண்டும். அந்த 'உண்மை' என்ன?
 
            இறைவனின் ஆதி என்ன?
 
            Linux என்ற ஒரு கணினி OS உண்டு. அதனை யார் வேண்டுமானாலும் தனது இஷ்டத்திற்கு மாற்றியமைத்துக் கொள்ளலாம். அதனை பிறருக்கும் கொடுக்கலாம். எந்தவித கட்டுப்பாடும் இல்லை. அது போல் யார் வேண்டுமானாலும் கடவுளின் உருவத்தை மாற்றியமைத்து இது என் கடவுள் என்று சொல்லிக்கொள்ளலாம். கட்டுப்பாடு இல்லை. நமது விநாயகர் படும் பாடு இருக்கிறதே... வாயில்லாபிள்ளை. கம்ப்யூட்டர் விநாயகர், கிரிக்கெட் விநாயகர், அந்த விநாயகர், இந்த விநாயகர் என்று கடவுளை விளையாட்டு பொம்மை போல் பாவிக்கும் கொடுமை கலியுகத்தில் நடக்கிறது. இதையெல்லாம் பொறுத்துக்கொள்ளும் கடவுளுக்கு இவை 'தெய்வக்குற்றம்' ஆகாது.
 
           ஏன் மற்ற மதங்களில் உள்ளது போன்று இந்துக்கடவுளை ஒரே 'பெயரில்' வணங்கக்கூடாது? கூட்டு பிரார்த்தனை ஒரே திசை நோக்கி, ஒரே நிலையில், ஒரே ஒரு கடவுளிடம் செய்தால் தான் பலன். இல்லையேல் ஆழ உழாமல் அகல உழுத கதைதான்.

Friday, September 16, 2011

கடவுளும் நானும் – II (கருவறை):

             கோவில்களில் கடவுளை இருளில் வைத்திருப்பதேன்? கோவில் முழுவதும் இருளில், காற்றோட்டமில்லாமல் இருப்பதேன்? சுற்றுப்புறம் சுகாதாரமில்லாமல் அசுத்தமாக இருப்பதேன்? கோயிலென்றால் இப்படித்தான் இருக்க வேண்டுமா? அந்த காலத்தில் மின்சாரம் கிடையாது. அதனால் இருள் எங்கும் பரவி இருந்தது. இப்போது? கருவறை இருளில் கடவுளை வைத்து 'ஒளிகொடுப்பவன்' இவனே என்ற பொய்யுரை கடவுளை கோபமூட்டுவதில்லை. அண்டவெளி இருள். அதனால் தான் கடவுள் கருவறையும் இருள் என்று விளக்கம் கூறுபவர்கள் உண்டு. ஆனால் கடவுளுக்கு கோபமே வருவதில்லை.
 
              இறைவனை பூஜிக்க ஒரு மொழி. அந்த மொழி தெரிந்த, ஒரு குறிப்பிட்ட வகுப்பினை சேர்ந்தவர்கள் மட்டுமே அந்த 'மொழி'யில் இறைவனை பூஜிக்கலாம். மற்றவர்கள் சுற்றி நின்று வேடிக்கை மட்டுமே பார்க்கவேண்டும் (புரிந்தாலும் புரியாவிட்டாலும்). பின்பு அவர் கொடுக்கும் 'எதையும்' பிரசாதமாக ஏற்றுக்கொள்ளவேண்டும். அவரது தட்டில் தட்சணை என்ற பெயரில் பணம் போட்டாகவேண்டும். பிறகு உண்டியல் எதற்கு? கோவில் வாசலிலும் பிச்சைக்காரர்கள், உள்ளேயும். இவ்விதிகள் எதற்காக ஏற்படுத்தபட்டன? யாரால் விதிக்கப்பட்டன?
 
               கருவறை கடவுளை தரிசிக்க 0.5 நொடிகள் மட்டுமே. அதற்கு 8 மணிநேரம் நீண்ட வரிசை. அப்படியே வரிசையில் சென்றாலும் கருவறை அருகில் நின்று கொண்டு 'சீக்கிரம் வா, வேடிக்கை பார்க்காதே' என்று கடவுளை வேடிக்கை பொருளாக்கி கூச்சலிடுகின்றனர். கடவுளுக்கு கோபமே வருவதில்லை.
 
              திரையரங்கத்தில் நமது விருப்ப கதாநாயகனின் நடிப்பை பார்ப்பதற்கு முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, முற்றம் என்று பணத்தை வாரி இறைக்கிறோம். அதே போல் இன்று கோவில்களில் தரிசனத்திற்கு ரூ.1000, ரூ.500, ரூ.250, ரூ.100 மற்றும் இலவச தரிசனம் என்று கடவுளை நாடக கோமாளியாக்கி இருக்கிறார்கள். கடவுளுக்கு கோபமே வருவதில்லை.
 
               உலகில் சக்தி வாய்ந்தது பணபலமே! என்று பட்டிமன்றம் நடத்தி தீர்ப்பு சொல்லாத குறைதான், கடவுள் மட்டும் மௌனமாய்.

கடவுளும் நானும் – I (மனித சாயம்):

            கடவுள் என்பவர் யார்? எங்கே இருக்கிறார்? என்ற கேள்விகள் எல்லாம் பழைய திரைவசனங்களாக மாறிப்போய் இன்று கடவுள் 'எந்த வடிவில்' இருக்கிறார் என்ற ஐயம் தலைதூக்கி நிற்கிறது. மனித வடிவில் வடிக்கப்பட்ட கடவுளின் உருவம் 'மனிதனின்' இயல்புகளுடன் இருப்பது போன்ற பிரம்மையை ஏற்படுத்தி சென்றுள்ளனர் நம் முன்னோர். பலவகையான குழப்பங்களையும், குளறுபடிகளையும் விதைத்து சென்றுள்ளனர். எந்த ஒரு செயலுக்கும் சரியான விளக்கமில்லை. விளக்கிச்சொல்ல ஆளும் இல்லை. மீறி வினா எழுப்பினால் 'தெய்வக்குற்றம்'. தினம் நாம் வணங்கும் கடவுளை அறிய ஏன் இத்தனை கட்டுப்பாடுகள்.
 
           நான் எந்த கோட்பாடுகளுக்கும் எதிர் கேள்வி கேட்கவில்லை. விளக்கம் தான் கேட்கிறேன், ஏன் கோபிக்கிறார்கள் என்று பக்தன் ஒருவன் புலம்பிச்செல்வதை பார்த்தேன். ஏன் இந்த நிலை. அனைத்து மதங்களிலும் எல்லாம் விரிவாக, எளிதாக, சாதாரண மக்களுக்கும் புரியும்படியாக கோட்பாடுகள், விதிமுறைகள், கட்டுப்பாடுகள் இருக்கும் போது, பழமை வாய்ந்த இந்து மதத்தில் ஏன் இந்த 'இருள்'. குடும்பத்துடன் அருள்பாலிக்கும் இறைவனை அடைய 'துறவு' தான் வழி என்ற பாரபட்சம் ஏன்? சகோதரன், மாமன் , மச்சான் உறவு கொண்ட கடவுள்களை வணங்குபவர்கள் வேறு வேறு ஜாதியாய், உயர்வு தாழ்வு பாராட்டி வாழ்வதேன்?
 
மனிதர்களின் சாயம் கடவுளுக்கு பூசப்பட்டது ஏன்?