இந்த வலைப்பூவில் தேட....

திருக்குறள்

Tuesday, August 23, 2011

அதிகார துஷ்ப்ரயோகம்:

"நான் நெனச்சா உன்ன இல்லாம பண்ணிடுவேன்"
"நான் நெனச்சா உன்ன பொய் வழக்குல உள்ள தள்ளிடுவேன்"
"நான் நெனச்சா உன்ன பணி இடமாற்றம் செஞ்சிடுவேன்"
"நான் நெனச்சா உன் சொத்தை எல்லாம் அழிச்சிடுவேன்"
 
"நான் மனசு வெச்சாதான் உனக்கு ப்ரமோஷன்"
"நான் மனசு வெச்சாதான் இந்த ஃபைல் அடுத்த மேசைக்கு போகும்"
"நான் மனசு வெச்சாதான் இந்த ப்ராஜக்ட் பிரச்சனை இல்லாமல் நடக்கும்"
"நான் மனசு வெச்சாதான் உன் மேல் உள்ள பழியை தொடைக்கமுடியும்"
 
இவை திரைப்படத்தில் வரும் 'பன்ச்' டயலாக் இல்லை. தினசரி நாம் கேட்கும் சிலரின் 'மிரட்டல்' மொழிகள். அதிகார துஷ்ப்ரயோகம். ஆம். அதிகாரம் இருப்பவன் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற இழிநிலை இன்றைய இந்தியாவை ஆட்டிப்படைக்கிறது. ஏன்? நான் நினைத்தால் 100 பேருக்கு நல்ல வேலைவாய்ப்பை வழங்குவேன், 4 குடும்பங்களை வாழ வைப்பேன், சட்டம் ஒழுங்கை பாதுகாப்பேன் என்று யாரும் சூளுரைப்பதில்லையே? ஒருவனை அழிக்க பயன்படுத்தும் அதிகாரத்தை, ஒருவர் வாழ உபயோக படுத்தலாமே? நாம் ஏன் செய்வதில்லை? நமது பலத்தை ஏன் எப்பொழுதும் பலவீனமானவர்களிடமே காட்டுகிறோம்?
 
பி.கு:என்றைக்கு தான் அவரவர் தனக்கு இடப்பட்ட வேலையை (மட்டும்) சரியாக பார்க்கப்போகிறோம்?

Tuesday, August 16, 2011

பிச்சை:

இந்திய திருநாட்டில் 'வேற்றுமையில் ஒற்றுமை' என்று மார்தட்டிக்கொள்ளும் இக்காலத்தில் நாமெல்லாம் பெருமை பட்டுக்கொள்ளவேண்டிய இன்னொரு விஷயம் 'பிச்சை'. ஆம். இந்தியாவில் 'பிச்சைக்காரர்கள்' இல்லாத இடமே இல்லை. இன்ன ஜாதி, இன்ன மதம், இன்ன இனம் என்று இல்லாமல் ஒரே 'இனமாய்' உள்ளனர். பெருமை பட இது போதாதா?  இங்கு பிச்சைக்காரர்களில் எதற்கும் வழியில்லாதவன், கொஞ்சம் இருப்பவன், எல்லாம் இருப்பவன் என்று பலவகை உண்டு. பிச்சையை ஒழிக்க முடியுமா என்று தெரியவில்லை. முடிந்தவரையில் குறைக்க முயற்சி செய்யலாம். (நாளை 'வல்லரசு' என்று மார்தட்ட வேண்டுமே).
 
முதல் வகை: சாலையோரம் அனாதையாய், உடம்பெல்லாம் அழுக்கெறி, உண்ண உணவின்றி, இருக்க இடமின்றி, உயிர் வாழ்வதற்கே கையேந்த வேண்டிய நிலையில் இருப்பவர்கள் இவர்கள். வயதானவர்கள், பிள்ளையால் கைவிடப்பட்டோர், வழி தவறி வந்தவர்கள், மனநிலை சரியில்லாதவர்கள் இவ்வகையை சார்ந்தவர்கள். இவர்கள் ஆதரவு தேடி அலையும் 'கொடி' போன்றவர்கள். இவர்களிடம் வெறுமனே பரிதாபம் மட்டும் காட்டாமல், ஏதேனும் ஒரு மறுவாழ்வு மையத்திற்கு தகவல் தந்து உதவலாம்.
 
இரண்டாம் வகை: மின்சார ரயிலில் இவர்களை பார்க்கலாம். நன்றாக குளித்து, சிகை அலங்காரம் செய்து, ஏதேனும் ஒரு வாத்தியத்துடன் களமிறங்கும் 'பார்வை' இல்லாதோர் இந்த வகையில் அடக்கம். அவர்களின் தேவையை பூர்த்தி செய்து கொள்ளுமளவிற்கு பொருள் பெற்றவர்கள் இவர்கள். இவர்களுக்கு அதே ரயிலில் ஏதேனும் விற்று சம்பாதிக்கும் 'பார்வை' இல்லாதோர் எவ்வளவோ மேல். அவர்களிடம் பொருள் வாங்குவதன் மூலம் நாளைய பிச்சைக்காரர் ஒருவரை குறைக்கலாம். அதே போல் கை, கால், பார்வை அனைத்தும் இருந்தும் வெறுமனே பிச்சை எடுப்பவர்களும் உண்டு. ('ஏதோ ஒரு பாட்டு' - தெலுங்கில் பாடி கொல்பவர்கள்).
 
மூன்றாம் வகை: பள்ளி, கல்லூரி, கோயில், அரசு அலுவலகம் என்று இவர்களை எங்கும் பார்க்கலாம். பள்ளி சிறப்புக்கட்டணம் என்று பெற்றோரை சுரண்டுபவர்கள், கல்லூரி வளர்ச்சிநிதி என்று மாணவர்களை சுரண்டுபவர்கள், தட்சணை என்ற பெயரில் பக்தர்களை நோகடிப்பவர்கள், லஞ்சம் என்ற பெயரில் பொது மக்களை அலைகழிப்பவர்கள் அனைவரும் இவ்வகையை சேர்ந்தவர்கள். முதல் இரண்டு வகையினரால் எந்த ஆபத்தும் இல்லை. பொருள் கொடுக்கவிட்டால் அடுத்தவர்களை நாடி சென்று விடுவர் அல்லது வசை படி செல்வர். ஆனால் இந்த மூன்றாம் வகையினர் மிகவும் ஆபத்தானவர்கள். நாட்டின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாய் இருப்பவர்கள். இவர்களை நம்மால் ஒன்றும் செய்யமுடியாது. சட்டம்தான் பதில் சொல்லவேண்டும்.
 
இந்த மூன்று வகை மட்டுமில்லாமல் இன்னும் பலவகை 'பிச்சைக்காரர்கள்' உண்டு. பேருந்து மற்றும் ரயிலில் பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பவர்கள், முக்கிய இடங்களில் வரிசையில் நில்லாமல் 'பண' பலத்தால் முன்னே செல்பவர்கள், கலப்படம் செய்பவர்கள், அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்களை கடத்துபவர்கள், வண்டியில் அனைத்தும் இருந்தும் 'ஓவர் ஸ்பீடு' என்று பணம் பறிப்பவர்கள், நடைபாதையில் கடை போட அனுமதித்து 'கமிஷன்' அடிப்பவர்கள், பொருட்களை அதிக விலைக்கு விற்பவர்கள், லஞ்சம் கொடுத்து 'லாபம்' அனுபவிப்பவர்கள் என்று பட்டியல் நீள்கிறது. இவர்கள் அனைவரும் மூன்றாம் வகையினை சேர்ந்தவர்கள். நாட்டின் வளர்ச்சியை அரிக்கும் 'விஷ' உண்ணிகள். இவர்களை அழிக்காமல் இந்தியா என்றுமே ' வல்லரசு' ஆக முடியாது. வறுமை கோட்டுக்கு புதிய விளக்கம் கொடுத்து 'ஏழ்மையை' வெறும் ஏட்டில் மட்டும் அழித்த இன்றைய ஆள்பவர்கள், ஊழலுக்கு புதிய விளக்கம் கொடுத்து அதற்கு 'நியாய' சாயம் பூசி, இந்தியாவை காகிதத்தில் மட்டும் 'வல்லரசு' ஆக்குவார்கள் போலிருக்கிறது.
 
பிச்சைக்காரர்கள் இல்லா நாடு இந்தியா என்ற புகழை பெற நம்மால் இயன்றதை செய்வோம். வாழ்க இந்தியா. வளர்க ஊழல் மன்னிக்கவும் வளர்க _______ , என்ன சொல்வதென்று தெரியவில்லை (கோடிட்ட இடத்தை நிரப்பிக்கொள்க).

Saturday, August 13, 2011

சுதந்திரதின வாழ்த்துக்கள்:

இந்தியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த சுதந்திரதின வாழ்த்துக்கள். பெரியோர்கள் அரும்பாடுப்பட்டு பெற்றுத்தந்த 'சுதந்திரத்தை' கட்டிக்காப்போம். ஊழல், லஞ்சப்பேய்களை விரட்டியடிப்போம்.

கவிதை தொகுப்பு:

சாண்ட்விச்:

இரு ஆண்களுக்கு
இடையில்
ஒரு பெண்ணின்
பைக்
பயணம்!

குமுறல்:
எங்களின்
பள்ளி கல்விக்கு,
சிறிது நாட்கள்
புத்தகங்கள் தான்
இல்லை.

ஆனால்
எங்கள் பள்ளியில்
வெகுநாட்களாய்
ஆசிரியர்களே இல்லை!
 
நீதித்துறை
தலையீட்டால்
புத்தகங்கள் கிடைத்தன.
எந்தத்துறை
தலையிட்டால்
ஆசிரியர்கள்
கிடைப்பார்கள்?
 
வானம் பார்த்த
பூமி போல
வாசலை நோக்கி
கண்ணீர் விழிகளுடன்
நாளைய
இந்திய தூண்கள் (?)
 

Thursday, August 11, 2011

நாங்களும் உங்கள் 'நண்பர்கள்' தான்:

காவல்துறையில் பணிபுரியும் அனைத்து தோழர்களுக்கும் ஒரு சிறு விண்ணப்பம். ஐயா, சில நாட்கள் முன்பு லேசான தூறல். அதுசமயம் குடையுடன் மக்கள் நடப்பது என்பது சாதாரண விஷயம். அதுபோல் தான் அன்றும் ஒரு பெரியவர் குடையுடன் கூட்டத்தில் நடந்து வந்தார். ஆளில்லா ரயில்வே கிராசிங் – ல் வரும் பொது ஒரு இளம் பெண்ணின் குரல், 'கொடைய மடக்கி புடிச்சினு போயா" என்று. அந்த பெண்ணுக்கு சுமார் 20 அல்லது 21 வயதிருக்கும். சீருடை அணிந்திருந்தார். சமீபத்தில் தான் பணியில் சேர்ந்திருப்பர் என்று நினைக்கிறேன். தலையில் தொப்பி இல்லை என்பதால் அவர் பணி முடிந்து வீட்டிற்கு செல்கிறார் என்பது உறுதி. அப்பெரியவர் 'ஏம்மா, தூறல் போடுதே, உனக்கு கஷ்டமாயிருந்தால் கொஞ்சம் பொறுமையுடன் சொல்லக்கூடாதா?' என்றார். அதற்கு 'அப்படிதான் யா பேசுவேன், மூடிகினு போ' என்று பொரிந்து விட்டு சென்று விட்டார்.
 
ஐயா, நீங்கள் எப்போதும் குற்றவாளிகளை கையாள்பவராக இருக்கலாம். அதற்காக மக்கள் அனைவரையும் 'குற்றவாளிகள்' போல் நடத்துதல் சரியா? நாங்களும் உங்கள் 'நண்பர்கள்' தான். எங்களுடனும் அன்பாக பேசுங்கள். பொது இடத்தில் வயதுக்கு சிறிது கரிசனம் காட்டலாம். சிலர் மக்கள் குடும்பத்துடன் நடக்கலாம், ஆசிரியர் மாணவர்களுடன் நடந்து செல்லலாம், ஏன், ஊர் பெரியவர் மக்களுடன் நடந்து செல்லலாம். அனைவரின் முன்பாக 'அவமதிப்பது' என்பது சரியாகுமா? சராசரி குடிமகன் ஒரு குற்றவாளியா?
 
கண்டிக்கும் உரிமை உங்களுக்கு மட்டும் தான் உண்டு. தேவைப்பட்டால் அனுமதியுடன் 'தண்டிக்கும்' உரிமையும் உண்டு. அதனை சாமானிய மக்களிடம் தான் காட்டுவதா? பேருந்து பயணத்தின் போது படியில் தொங்குவோரை இறக்கி விடுங்கள். தேவைப்பட்டால் 10 நிமிடங்கள் ரோட்டோரமாய் நிற்க சொல்லுங்கள். தவறே இல்லை. ஆனால் அனைவரின் முன்பிலும் '....யே, உள்ளே போயேன்' என்று திட்டுவது நிச்சயம் மனதை காயப்படுத்தும். மற்றொரு சம்பவம். ஒருநாள் போக்குவரத்தை சரிசெய்யும் தோழர் ஒருவர், 'அந்த பக்கம் எங்கே போற. அதான் பிளாக் பண்ணி வச்சிருக்கில்ல. இப்பிடி போ' என்று சற்று காட்டமாகவே சொல்லிக்கொண்டிருந்தார். மேலோட்டமாக அவரின் செயல்பாடு சரியென்றாலும், அணுகுமுறை தவறல்லவா?
 
இதனால் மக்கள் அனைவரும் சரி என்று வாதிடவில்லை. சூழ்நிலை, வயது பார்த்து கொஞ்சம் 'அன்பாகவும்' நடந்து கொள்ளலாமே என்று தான் சொல்ல வருகிறேன். மக்களும் சற்று யோசித்து நடக்க வேண்டும். சூழ்நிலையை பார்த்து, புரிந்து நடக்க வேண்டும்.
 
தோழர்களே, தனிமனித ஒழுக்கத்தை கடைபிடிக்க உதவுங்கள். மாறாக மனங்களை காயப்படுத்தாதீர்கள்.
 
நாங்களும் உங்கள் 'நண்பர்கள்' தான்.

Monday, August 8, 2011

காஞ்சனா - திரை விமர்சனம்:

"கொலையுண்டவன் கொலையாளிகளை ஆவியாய் வந்து பழிவாங்கும்" பேய் கதை. அதை சிறிது மசாலா தூவி விருந்து படைத்திருக்கிறார் இயக்குனர் லாரன்ஸ். மாலை 6 மணிக்குமேல் 'பேய்' பயம், இரவு சிறுநீர் கழிக்கவும் தாயின் துணை, பகலில் அதிபயங்கர வீரன் என்று பல காட்சியமைப்புகள் முனி முதல் பாகத்தை அடிக்கடி நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளன.
 
வெறும் பாடலுக்காக மட்டும் வந்து போகும் கதையின் நாயகி லஷ்மி ராய், ஒரே ஒரு காட்சியில் வரும் வீட்டு வேலைக்காரி, கதாநாயகன் அதிரடி அறிமுகத்திற்காக வரும் கிரிக்கெட் போட்டி என்று படத்தில் ஒட்டாத பல அம்சங்கள் நிறைந்துள்ளன. காதலியை வெறுப்பேற்ற வரும் பாடல் காட்சி 'வாழ்வே மாய'த்தை நினைவுபடுத்துகிறது.
 
சுப்ரீம் ஸ்டார் 'சரத்குமார்' திருநங்கையாய் அசத்தியுள்ளார். அவர் வரும் காட்சிகள் அனைத்தும் அழுத்தமாக, விருவிருப்புடன் உள்ளன. படத்தின் சில பல குறைகளை சமன் செய்கிறது அவரின் பள்ளி மேடை பேச்சு.
 
லாரான்சின் 'ஜவுளிக்கடை' நடிப்பு பிரமாதம். வீட்டில் குளிக்கும் போது மஞ்சளை பார்க்கும் பார்வையிலேயே 'அனைத்தையும்' புரியவைத்துவிடுகிறார். நடிப்பில் நல்ல முதிர்ச்சி. திருநங்கைகளின் பிரச்சனைகளை கையில் எடுத்தது பலம். இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம். இருந்தாலும் அவரின் முயற்சிக்காக ஒரு 'சபாஷ்'.
 
நில அபகரிப்பு வில்லனாக வரும் நபருக்கு திரைக்கதையில் சரியான முக்கியத்துவம் தரப்படவில்லை. சர்வ சாதாரணமாக செத்துப்போகிறார். காணாமல் போன தன் கோஷ்டியினரை பற்றி 'சாமியாரிடம்' முறையிடுகிறார். சாமியாரும் 'நீ கொலை செய்து புதைத்த சடலங்களை....' ரீதியில் பேசுகிறார். போலீஸ் எங்கே? திரைக்கதையில் ஏன் இல்லை?
 
வழக்கமான கிளைமாக்ஸ் தான் என்றாலும் ஸ்பெஷல் ஏபெக்ட்ஸ் பின்னிஎடுக்கிறது. தேவதர்ஷணி, கோவை சரளா வயிறு புண்ணாகும் அளவிற்கு காமெடியில் மிகவும் இயல்பாக கலக்கியுள்ளனர்.
 
திருநங்கைகளும் இறைவனின் படைப்புகள் தான் என்ற நல்லதொரு செய்தியை சமுதாயத்திற்கு எடுத்து சொல்ல நினைத்த லாரான்சுக்கு எனது மனமார பாராட்டுக்கள்.

Monday, August 1, 2011

Holographic சேமிக்கும் தொழில்நுட்பம்:

Compact டிஸ்க்-கள் புழக்கத்தில் வந்ததிலிருந்து Data Storage தொழில்நுட்பம் நல்ல வளர்ச்சி அடைய ஆரம்பித்தது. காலங்கள் ஓட ஓட CD-R என்பது DVD என்று வளர்ந்தது. சினிமா மற்றும் இதர வீடியோ கோப்புகளை அதன் தரம் குறையாமல் ஒரே டிஸ்கில் சேமிக்க முடிந்தது. காலங்கள் மாற, இப்போது HDD தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பித்துள்ளது. அதன் தேவைக்கு தீனி போடும் வகையில் உருவாக்கப்பட்டது தான் Blu-Ray டிஸ்க். சுமார் 25 ஜி‌பி முதல் 50 ஜி‌பி அளவுக்கு அதில் DATA சேமிக்க முடியும்.
 
இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தானே. சரி, விஷயத்திற்கு வருகிறேன்.
 
Blu-ray டிஸ்க்கிற்கு மாற்றாக, இன்னும் அதிக கொள்ளவு திறன் கொண்ட  ஒரு DISC ஐ உருவாக்க GE யின் வல்லுனர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். அந்த தொழிநுட்பத்திற்கு 'Holographic Disc' என்று பெயரிட்டுள்ளனர். அது சுமார் 500 ஜி‌பி முதல் 1000 ஜி‌பி (1 டெராபைட்) கொள்ளவு திறன் கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு disc இல் ஒரு பெரிய மருத்துவ மனையின் அனைத்து எக்ஸ்ரே படங்களையும் சேமிக்கும் திறன் கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
 
மேலும் விபரங்களுக்கு http://news.discovery.com/tech/ge-holographic-storage-110730.html

Friday, July 29, 2011

பயம் எதற்கு:

சமீப காலமாக செய்தித்தாள்களில் அடிபடும் விஷயங்கள் 'நில அபகரிப்பு', மற்றும் முந்தைய ஆட்சியில் நடந்ததாக பல்வேறு குற்றச்சாட்டுகள்.ஆட்சி மாற்றம் ஏற்படும்போது, முந்தைய ஆட்சியில் நடந்த தவறுகளை சுட்டிக்காட்டி திருத்துதல் என்பது ஆரோக்கியமான ஒன்றுதான். ஆனால் அதுவே ஐந்து வருட வேலையாகிப்போனால் மக்களுக்கு என்னதான் நல்லது நடக்கும்? ஆளும் வாய்ப்பை இழந்தவர்கள், ஆட்சியில் இருக்கும் பொது 'தவறுகளை' கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு, இப்போது 'நடப்பவை எல்லாம் ஆளுங்கட்சியின் சதி' என்று அறிக்கை வேறு விடுகின்றனர்.
 
ஓட்டு போட்ட குடிமகனுக்கு கடைசியில் மிஞ்சுவது என்ன? தினம் காலை பரபரப்பு செய்தி. சில பல அறிக்கைகள். ஆங்காங்கே 'சாலை மறியல்', கொடும்பாவி எரிப்பு. இதை தவிர மக்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள் எதுவும் கிடைப்பதாக தெரியவில்லை. 500 ரூபாய் கையூட்டு பெரும் ஒரு சாதாரண குமாஸ்தாவை மடக்கி பிடிக்க சட்டத்தில் வழியுண்டு (அவர் ஆளுங்கட்சியை சேர்ந்தவராயினும்). ஆனால் 500 கோடி ஊழல் செய்யும் ஒரு அரசியல்வாதியை அக்கட்சி ஆட்சியில் இருக்கும் போதே தண்டிக்க முடிவதில்லை. மக்களாகிய நாமும் உயிர் பயத்தால் எதையும் வெளிசொல்வதில்லை. ஆளுங்கட்சியில் இருக்கும் சிலர் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி நியாயம் பெற இந்தியாவில் வழியே இல்லையா அல்லது நியாயமே கிடைக்காதா? புரியவில்லை.
 
ஆட்சி மாற்றத்திற்கு பிறகு எத்தனை பேர் வழக்கு போடுகின்றனர். இவர்கள் முந்தய ஆட்சி காலத்தில் என்ன செய்தனர்? காவல் துறையில் புகார் அளித்தனரா? அல்லது அளித்த புகாருக்கு பதிலேதும் கிடைக்கவில்லையா? அதிகாரதில் இருப்பவர்கள் தவறு செய்யலாமா? அவர்களை தட்டிக்கேட்க மக்களுக்கு அதிகாரம் இல்லையா?  அரசு அதிகாரிகளை கண்காணிக்க Vigilance என்றொரு துறை இருக்கிறது. அதுபோல் அரசியல் கண்காணிக்க துறை ஒன்றை ஏன் ஏற்படுத்தக்கூடாது. தவறு செய்பவனை தண்டிக்காமல் விட்டுவிட்டு தனது சுயலாபத்தை மட்டுமே குறிக்கோளாய் கொண்டவர்களால் மக்களுக்கு என்ன பயன்.
 
மக்களே! பயம் எதற்கு. தவறு செய்பவர்களை காவல் துறையின் துணை கொண்டு தண்டிப்போம். காலம் கடந்த நீதியினால் பயனேதும் இல்லை. காலத்தே பயிர் செய்வோம். காலத்தே களை எடுப்போம். சுயஒழுக்கம் ஒன்றே தீர்வு. அடுத்த தலைமுறையாவது நிம்மதியாக வாழட்டும்.

Saturday, July 16, 2011

கவிதை தொகுப்பு :

முரண்பாடு:
 
சிறிய எழுத்துக்கள்
பெரியதாய் தெரிய
லென்ஸுடன் பேனா
விலை ஐந்து
விற்கிறான்
பார்வை இல்லாதவன்!
 
காகம்:
 
இட்லி துண்டில் பங்கா?
விரட்டியது காகம்!
விதைத்து விட்டானா
மனிதன்
காகத்திற்குள்ளும்
சுயநல
விஷத்தை?
 
மரவெட்டி:
 
ஒற்றைக்கால்
தவசிகளை
வதைக்கும்
அரக்கன்.
 

Tuesday, July 12, 2011

அடைகாக்கும் சேவல் (கவிதை):




















காதல் கண்மறைக்க
பெற்றோரை விட்டு வந்து
எதுவும் தெரியாத ஊரிலே
புதிதாய்
ஒரு குடித்தனம்!
மனமெல்லாம் மகிழ்ச்சி
பின்பு கருவாகி
ஆனந்த கண்ணீருடன்
ஓரினிய வாழ்க்கை!
கையிருப்பு கரைந்த பின்பு
கூலிவேலை பல
செய்தும்
தீரவில்லை சுயதேவை,
கனவுடன் ஓடிவந்து
இன்று
கனவு மட்டும்
கையிருப்பு!
கனவை நனவாக்குபவன்
தான்
கணவன் என்று
கள்ள காதல் கண்மறைக்க,
பெற்ற குழந்தையை
கைவிட்டு
வேறு ஊருக்கு பயணம்!
கையில் குழந்தையும்
நெஞ்சில் காதல் மனைவியும்
சுமந்தவன்
குழந்தையின் பசி போக்க
இன்று சுமை தூக்கியாய்!
தாயில்லா குழந்தைக்கு
தாயாகி
அடைகாக்குது சேவல்!

Saturday, July 9, 2011

நெட்டில் படித்தவை:

சிரிப்பதற்க்கு மட்டும்:
-------------
தருமன் தனது பாட்டியின் நினைவு நாளை முன்னிட்டு அவரின் சமாதியில் மலர் கொத்தை வைத்து வணங்கிவிட்டு தன்னுடைய காருக்கு திரும்பிக்கொண்டிருந்தார். வழியில் அவர் கண்ட காட்சி அவரை மிகவும் நெகிழ வைத்துவிட்டது. அங்கு ஒருவன் ஒரு சமாதியின் முன்னே மண்டியிட்டு கதறி அழுதுகொண்டிருந்தான். ஏன் என்னை தவிக்கவிட்டு போனாய்? ஏன் என்னை தவிக்கவிட்டு போனாய்? என்று அவன் கதறியது தருமனின் நெஞ்சத்தை ஏதோ செய்தது.
 
அவனருகே சென்று ஆறுதலாய், 'தம்பி, உங்கள் தனிப்பட்ட விஷயத்தில் தலையிடுவதற்கு மன்னிக்கவும். நீங்கள் இப்படி துடிப்பதை பார்க்க மிகவும் வருத்தமாய் உள்ளது. இறந்து போனது உனது பையனா? என்று கேட்டார்.
"இல்லை".
பின்பு அண்ணனா?.
"இல்லை".
உன் நண்பனா?
"இல்லை"
.......!?!?!
 
சற்றே கோபமுற்ற தருமன், சற்று வேகமாய் " பின்னே யாருக்காக இப்படி அழுகிறாய்?" என்று கேட்க,
சிறிது நேரம் நிதானித்து பின்பு இப்படி பதிலளித்தான்,
 
"இவன் என் மனைவியின் முதல் கணவன்"
-----------
ஒரு ஊரில் ஒரு குளம் இருந்தது. அந்தக்குலத்தில் யாரேனும் வேண்டுதலோடு காசு போட்டால் நினைத்தது கைகூடும் என்ற நம்பிக்கை இருந்தது. ஒருநாள் ஒரு கணவனும் மனைவியும் அங்கு வந்தனர். கணவன் கண்ணை மூடி வேண்டிக்கொண்டு காசு போட்டான். பின்பு மனைவி கண்ணை மூடிக்கொண்டு காசை போட எத்தனிக்க, தவறிப்போய் உள்ளே விழுந்து இறந்துபோனாள். கணவன் மனதுக்குள் "அதற்குள் பலித்துவிட்டதே!".
-----------

Thursday, July 7, 2011

பருவ மழை :

கடலிடம் கடன் வாங்கி
மேகமாய் திரிந்து
மழையாய் பெய்து
பின்பு
கடலுக்கு திரும்பும் பொது
வட்டியாய்
மனித உயிர்கள்!
 
துளி துளியாய்
வானத்து நீர்
விழும்போது
வரமாய் ,
பின்பு
உயிர்களை வாங்கும்போது
சாபமாய்.
 
ஒரே மழை
இரு வேடங்களில்!

ஏன் இலவசங்கள் :

தமிழகத்தில் இப்போது இலவசங்களின் அணிவகுப்பு சற்று மும்முரமாகவே இருக்கிறது. எந்த வகையிலும் மக்கள் தானாக சிந்தித்துவிடக்கூடாது என்பதில் இன்றைய அரசியல்வாதிகள் மிகவும் கவனத்துடன் செயல்படுகின்றனர். இலவசங்களை வாரி வாரி இறைப்பதால் 'ஓட்டு வங்கி'யில் ஓட்டு குவிந்துவிட போவதில்லை. அதற்கு நடந்து முடிந்த தேர்தல் ஒரு நல்ல உதாரணம். இருந்தாலும் அவர்களும் கொடுக்காமல் விடப்போவதில்லை, இவர்களும் வாங்காமல் விடப்போவதில்லை.
 
'ஒருவனுக்கு மீனை தானமாக கொடுக்காதே, அதற்கு பதில் அவனுக்கு மீன் பிடிக்க கற்றுக்கொடு' என்பது உலகவழக்கில் உள்ள தத்துவம். அதுபோல, நம் மக்களுக்கு சிறந்த வேலைவாய்ப்பினை அமைத்து தருவதன் மூலம் அவர்களின் வறுமையை ஒழிக்கலாமே. அவர்களின் தேவையை பூர்த்தி செய்து கொள்ள நல்ல வழியை காட்டலாமே. அவர்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்தலாமே. இலவச அரிசி ஏன்? எதற்கு?
 
படிப்பதற்கு நல்ல பள்ளி இல்லை. அப்படியே நல்ல பள்ளியை கண்டெடுத்தாலும், கல்வி கட்டணம் மலை போல் அழுத்துகிறது. நல்ல தரமான கல்வி, நியாமான கல்விகட்டணம், உலக தரத்திற்கு படத்திட்டம் போன்றவற்றினை அமைத்து மக்களின் 'அறிவுக்கண்'ணை திறக்கலாமே. அரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை உயர்த்தி, தனியார் பள்ளிகளின் கொட்டத்தை அடக்கலாமே. இலவச 'மடிக்கணினி' ஏன்? எதற்கு?
 
கிராமங்களில் விவசாயம் இல்லை. இயற்கை வளங்கள் இல்லை. வாழ வழி இல்லை. சுகாதாரம் இல்லை. இப்படி பல 'இல்லை'கள் இருக்கும் போது, இலவசங்கள் எதற்கு?  ஆயிரம் 'ஏன், எதற்கு'கள் இருக்கும் போது கோடி கோடியாய் பண விரயம் எதற்கு? அவற்றை வேறு நல்ல நோக்கில் பயன்படுத்தலாமே.
 
சிந்திப்போமா இனியாவது!

Wednesday, July 6, 2011

மழலை:

ஆ..ஆ..ஆ.ஆ
மம்..மம்...மம்
பிர்ர்...பிர்ர்
க்கும்...க்கும்..
தித்..தித்..தித்
 
எந்த அகராதியில்
தேடினாலும்
கிடைக்கவில்லை
என் பிஞ்சு மகளின்
செல்ல
மழலை மொழிக்கு
அர்த்தம்!

Tuesday, June 28, 2011

ஹன்சிகா (சிறுகதை) :

எங்கள் அலுவலகத்தில் யாரேனும் நீண்ட விடுப்பில் சென்றாலோ அல்லது பிரசவ விடுப்பில் சென்றாலோ, அப்பணிகளை செய்ய தற்காலிகமாய் ஒப்பந்த அடிப்படையில் அலுவலர்களை வேலைக்கு அமர்த்துவதுண்டு. அவ்வாறு புதியதாய் பணியில் சேர்ந்த சிலரில் ஹன்சிகாவும் அடக்கம். நல்ல திறமைசாலி. வேலையில் சேர்ந்த ஓரிரு நாட்களில் மிகவும் சுறுசுறுப்பாகவும், திறமையாகவும் செயல் பட்டாள்.
 
அலுவலகம் முடிந்ததும் வீட்டிற்கு செல்ல பேருந்து நிறுத்ததிற்கு வந்தேன். அவள் சாலையின் மறுபுறத்தில் நின்றிருந்தாள். நான் முதலில் பேருந்தில் ஏறினாலோ அல்லது அவள் முதலில் பேருந்தில் ஏறினாலோ ஒருவரை ஒருவர் கடந்துதான் செல்ல வேண்டும். அவ்வாறு கடக்கையில் பரஸ்பரம் ஒரு புன்னகையை பரிமாறி கொள்வதுண்டு. ஒரு நாள் அவளை அலுவலக கேண்டீனில் காபி சாப்பிட அழைத்தேன். மறுப்பேதுமின்றி வந்தாள். சிறிது நேரம் பேசிவிட்டு இருக்கைக்கு திரும்பி விட்டோம். இவ்வாறு பல நாட்கள் சென்றன. இதை கவனித்த என் சக ஊழியர் ஒரு நாள் இது விஷயமாக அவளிடம் வம்பிழுக்க, விஷயம் விபரீதமானது.
 
பின்பு அவள் என்னிடம் பேசுவதுமில்லை. பேருந்து நிறுத்தத்தில் பார்த்தாலும் முகத்தை திருப்பிக்கொள்ள எனக்கு கோபம் கோபமாய் வந்தது. அவளிடம் கேட்டே விட்டேன். பதிலேதும் சொல்லாமல் வெடுக்கென்று சென்று விட்டாள். நாட்கள் நகர்ந்தன. அவளின் ஒப்பந்தம் முடியும் நாளும் வந்தது. எனக்கு அலுவலகத்தில் கொஞ்சம் வேலை இருந்ததால், அன்று சிறிது காலதாமதமாகவே புறப்பட்டேன். அன்று அவள் எதிர் புறத்தில் நின்றிருந்தாள். காத்திருந்தாள் என்றே சொல்லலாம். அவளை கவனிக்காததுபோல் பேருந்தில் ஏறினேன். இருக்கையில் அமர்ந்து, அவளை பார்த்தேன். அவளின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்ததை என்னால் கவனிக்க முடிந்தது. அது வெறும் கண்ணீர் மட்டுமல்ல என்பதையும் நான் கவனிக்க தவறவில்லை.