இந்த வலைப்பூவில் தேட....

திருக்குறள்

Sunday, November 27, 2011

அடைமழை:

        சமீப காலங்களில் மழையே பெய்யவில்லையோ என்று நினைக்கும் அளவிற்கு கொட்டோ கொட்டென்று கொட்டி தீர்த்துவிட்டார் வருணன். தமிழகத்தில் எங்கு நோக்கினும் ஒரே மழை நீர். வெள்ளக்காட்டின் மத்தியில் மாட்டிக்கொண்டோரின் நிலைதான் கொஞ்சம் பரிதாபம். விவசாய நிலங்கள் எல்லாம் பாழ். நகரங்களில் சாக்கடைகள் நிரம்பி மழை நீருடன் கலந்து ஒரே நாற்றம். நோய் கிருமிகளை சுமந்துகொண்டு இங்கும் அங்குமாக அலைகிறது, ஆள் தேடி. சாலைகள் எல்லாம் சேதமடைந்து பல ஊர்கள் தொடர்பு துண்டித்து போய்விட்டது. குண்டும் குழியுமான பாதைகள் இன்று முழு பள்ளங்களாக மாறி வாய் பிளந்து காத்திருக்கின்றன.
 
        நிவாரண பணிகளை துரிபடுத்தும் நிலையில் அரசு. ஆங்காங்கே நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள். மக்களும் தங்களுக்குள்ளே ஒற்றுமையோடு ஒருத்தருக்கு ஒருத்தர் உதவியாய். புயல் சின்னம் அரபிக்கடலை நோக்கி சென்றதால் கொஞ்சம் தப்பித்தோம். இல்லையென்றால் மழையின் கோரப்பிடியில் சிக்கி சின்னாபின்னமாகியிருப்போம்.
 
         இந்த மழைநீரையாவது சேமிப்போமா? சந்தேகமே. நமக்கென்ன. பழிபோடத்தான் அரசும், அரசாங்க அதிகாரிகளும் உள்ளனரே. நம் கடமையை என்றைக்கு செய்திருக்கிறோம்>

Wednesday, November 23, 2011

பேருந்து கட்டணம் உயர்வு:

                    சில நாட்களுக்கு முன்பு நமது அரசு பேருந்து கட்டணம், பால் விலை, மின்கட்டணம் ஆகியவற்றை உயர்த்தி ஆணையிட்டது. ஆணையிட்டது முதல் இன்று வரை சென்னை மாநகர போக்குவரத்திற்கு இவ்வளவுதான் கட்டணம் என்று வரையறுக்கவில்லை. மற்ற பேருந்துகளுக்கு கி.மீ க்கு இவ்வளவு என்று ஏற்றியதால் அதிக குழப்பம் இல்லை. ஆனால் சென்னைக்குள் இயங்கும் பேருந்துகளில் எந்தவித வரைமுறையும் இல்லாமல் வசூலிக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் பேருந்தின் அறிவிப்பு பலகையின் நிறத்தை மட்டும் மாற்றி இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கும் 'அராஜகம்' நடந்தேறுகிறது.
 
                    எங்கள் ஏரியாவில்: பேருந்து நிலையத்தில் இருந்து எங்கள் ஏரியாவுக்கு சாதாரண பேருந்து 'M' அடைமொழியுடன் இயங்கி வந்தது. கட்டணம் ரூ.4 வசூலித்தனர். அறிவிப்புக்கு பின்பு 'M' நீக்கிவிட்டு 'Express' என்று எழுதிவிடு ரூ.8 வசூலிக்கின்றனர். 'M' சீரிஸ் வண்டிகளின் நிலை அனைவரும் அறிந்ததே. விவேக் காமெடியில் வரும் ஷேர் ஆட்டோவும் 'M' மற்றும் சாதாரண பேருந்துகளின் (White போர்டு) நிலையும் ஒன்றுதான்.  சேவையின் தரத்தை உயர்த்தமல் வெறுமனே கட்டணத்தை மட்டுமே உயர்த்தி ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வயித்தெரிச்சலை கிளப்பியுள்ளது மாநகர போக்குவரத்து கழகம்.
 
                    சேவையின் தரம் உயராமல் வெறும் விலையேற்றம் என்பது மக்களை ஏமாற்றும் வேலை. விலையேற்றத்திற்கு காரணம் முந்தய ஆட்சியின் தவறு என்றே எடுத்துக்கொண்டாலும் இப்படி ஒரே அடியில் அடித்தது கொஞ்சம் வேதனைக்குரிய விஷயம்.

Wednesday, November 16, 2011

வேலாயுதம், ஏழாம் அறிவு - திரை விமர்சனம்

இந்திய நாட்டுக்கு எதிராக செயல்படும் தீய சக்தியை அழிக்கும் ஒருவனின் கதையே இரண்டு படங்களின் மூல கருவாகும். ஒரே கதையை திரைக்கதையில் மட்டும் சில மாற்றங்களை செய்து இரண்டு விதமான படங்களாக தந்துள்ளனர். தன்னுடைய கதாநாயகனுக்காக திரைக்கதையை எழுதிய இயக்குனர்களை நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும். இதில் 'போதி தர்மர்' என்ற தமிழரின் பெருமையை எடுத்துணர்த்திய இயக்குனர் முருகதாசுக்கு தமிழர்கள் சார்பாக எனது பாராட்டுக்கள்.
 
வேலாயுதம் திரைப்படத்தில் ஹன்ஸிகாவை நீக்கி பார்த்தாலும் திரைக்கதையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. பழைய திரைப்படங்களில் வரும் கவர்ச்சி நடிகையின் வேலையை மட்டும் 'திறம்பட' செய்திருக்கிறார். ஹன்ஸிகா, பாஸ்கர், மற்றும் விஜய்யின் நண்பர்களின் பங்கு திரைக்கதையில் ஒட்டவில்லை. ஆரம்பத்தில் விஜய் மற்றும் சரண்யா மோகன் செய்யும் குறும்புக்காக அவர்களை ஊர்க்காரர்கள் விரட்டுவதைப்போல் கதையை ஆரம்பிக்கும் இயக்குனர் பின்பு தங்கையின் திருமணத்திற்கு பொருள் வாங்க சென்னை வருவதாய் குழப்பியுள்ளார். வழக்கமான 'விஜயகாந்த்', 'அர்ஜூன்' பட ஃபார்முலா தான் என்றாலும் விஜய் ரசிக்க வைக்கிறார்.
 
ஏழாம் அறிவில் கதாநாயகியின் பங்களிப்பு திரைக்கதையில் ஒன்றி வருகிறது. ஆராய்ச்சி, டி‌என்‌ஏ என்று ஏகத்துக்கு குழப்பியிருந்தாலும் தமிழனின் பெருமையை கூறுவதால் அதனை பொறுத்துக்கொள்ளலாம். பாடல்கள் சுமார் ரகம்தான். சண்டை காட்சிகள் பிரமிப்பூட்டுகின்றன. போதி தர்மராக சூர்யா வரும் சண்டை காட்சிகள் அற்புதம். புதிய, அறிவியல் சார்ந்த திரைக்கதை தமிழுக்கு ஏ.ஆர். முருகதாஸ் -ன் பரிசு. ஹாலிவுட் வில்லன் தமிழுக்கு புதுவரவு. மனோவசியத்தை வைத்துக்கொண்டு கார், பைக் -ஐ சூர்யா மேல் மோதவிடும் சண்டை காட்சிகள் புதுமை, அருமை.
 
வேலாயுதத்தில் ஜெனிலியா, ஏழாம் அறிவில் ஸ்ருதிஹாஸன் - கதாநாயகனை 'சூப்பர் மேன்' ஆக மாற்றுகிறார்கள்.
 
இரண்டு திரைப்படங்களிலும் கதாநாயகர்கள் சொல்லும் செய்தி ' உள்ளுக்குள் புதைந்திருக்கும் வீரத்தையும், விவேகத்தையும், அறிவையும் வெளிக்கொணர்ந்து தீய சக்திகளை அடியோடு அழிக்க வேண்டும்' என்பதே. அநியாயத்தை பார்த்தால் தட்டிக்கேட்க வேறு ஒருவனுக்காக ஏன் காத்திருக்கவேண்டும் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.
 
ஒரே தோசைமாவில் மசாலா சேர்த்து இரண்டு வித 'தோசைகளை' வழங்கிய இயக்குனர்களை பாராட்டியே ஆகவேண்டும்.

Saturday, November 12, 2011

தினம் தினம் தீபாவளி

       சென்னையில் குடியிருப்போருக்குத் தெரியும் நான் என்ன சொல்ல வருகிறேன் என்று. தீபாவளி திருநாள் அன்று காலை வெளியில் வந்து நின்று பாருங்கள். எங்கும் பட்டாசு ஒலி, புகை, பட்டாசினால் ஏற்பட்ட குப்பை என்று அந்த திருநாளின் கோரத்தாண்டவம் கண் முன்னே அரங்கேறும். இது சாதாரண நிகழ்வாக தெரிந்தாலும் அதனால் சுற்றுப்புறத்திற்கு ஏற்படும் தீங்கு அளவிடமுடியாத ஒன்று. விஷயத்திற்கு வருகிறேன். நம் சிங்கார சென்னையில் நாள்தோறும் பெருகும் மக்கள் தொகையினால் ஏற்படும் குப்பை, பெருகிவரும் வாகனங்களால் வரும் புகைமண்டலம் மற்றும் இரைச்சல் என்று தினம் தினம் இங்கு தீபாவளிதான்.
 
      கிராமபுரத்தில் இருந்து இங்கு குடிபெயரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அவர்களின் தேவை 'பணம்'. கிராம மக்களின் தேவைகளை சிறிது சிறிதாக பூர்த்தி செய்வதன் மூலம் இந்த 'இடப்பெயர்ச்சியை' சிறிது குறைக்கலாம். கூட்டம் குறைந்தால் குப்பையும் குறையும். குற்றங்களும் குறையும். நிறைவேற்றுமா அரசு?
 
        தனி ஒருவர் அலுவலகம் செல்ல 'இன்னோவா' எதற்கு? ஒரு மணிநேரத்தில் எனை கடந்து சென்ற 154 கார்களில் 78 தனியே சென்றவர்கள், 54 ஓட்டுனர் மற்றும் ஒருவர் மட்டும், மீதி 22 கார்களில் 5 வயது முதல் 12 வயதுள்ள பள்ளி செல்லும் பிள்ளைகள் (அதுவும் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் மட்டுமே பயணம்). இது தவிர இருசக்கர வாகனங்கள் புற்றிலிருந்து ஈசல் போல் கிளம்பி எங்கும் நிறைந்து வழிந்தோடின. அரசே ஏற்று நடத்தும் பேருந்து போக்குவரத்து இருந்தும் இவ்வளவு மக்கள் தங்களின் சொந்த வண்டியில் செல்வதேன்? ஒன்று கௌரவம் (?), மற்றொன்று கூட்ட நெரிசல். இந்த இழிநிலையை போக்க, பேருந்து எண்ணிக்கையை உயர்த்தி, பயணத்தின் தரத்தினை உயர்த்தினால் நிச்சயம் பலன் கிடைக்கும்.
 
        நிறைவேற்றுமா அரசு?

Wednesday, November 2, 2011

மழலை விளையாட்டு :

பிஞ்சு கையால்
என் கண் மறைத்து
கண்ணாமூச்சி விளையாட்டு
 
அம்மாவின் புடவையில்
ஒளிந்து கொண்டு
ஓடிப்பிடித்து விளையாட்டு
 
தத்தித் தத்தி நடந்து
சிறிது தூரம் சென்ற பின்பு
லேசாய் திரும்பி பார்த்து,
பின்னால் நான்
தொடர்வதை கண்டு
எனக்கு போக்கு காட்டி
ஒரு விளையாட்டு
 
யாரிடம் கற்கிறாய்
என் செல்ல மகளே!
இந்த புது புது விளையாட்டுகளை
எப்போதும் நீயே ஜெயிக்கிறாய்
எங்கள் மனதை
கொள்ளை கொண்டு!

காதல் மொழி

கதவிடுக்கு வழியே
காதல் வலை வீசும் விழிகள்
வெட்கத்துடன் சொல்லிற்று
'சீ போ!'
 
பதிலேதும் சொல்லாமல்
செல்லும் தென்றல் காற்றை
மடக்கிக் கேட்டேன்
என்ன சொன்னாள் என்னவள் என்று
 
பார்த்ததும் உள் மறையும்
நிலவும் சொல்லாமல் மறைத்தது
அவள் விழி மொழியின்
அர்த்தங்களை
 
ஆனது ஆகட்டுமென்று
ஏதோ ஒரு தைரியத்தில்
என்னவோ சொன்னாய் அன்று!
அது முதல்
கண்ணில் தூக்கமில்லை
வயிற்றில் பசியில்லை
மற்றும் சில பல இல்லைகள்
இன்றாவது சொல்!
 
கதவிடுக்கு வழியே
காதல் வலை வீசும் விழிகள்
வெட்கத்துடன் சொல்லிற்று
மீண்டும்
'சீ போ!'

Monday, October 24, 2011

பருவ மழை

சோவென்று பெய்யும்
புது மழையில் துள்ளித்
தாளம் போட மனமில்லை
குளிரில் நடுங்கிய
புன்னை மரத்து
குருவி குஞ்சை
பார்த்தபின்பு!
 
 

கலப்பு திருமணம்

கறவை மாடு அதிகம் கரக்க,
வயலில் மகசூல் பெருக
கனிவகை விரைவில் காய்க்க என்று
விவசாயத்தில் வேண்டும் 'கலப்பு'
 
காவலுக்கு வீரம் சேர்க்க
உடலில் கம்பீரம் மிளிர
பெண்ணுக்கு பரிசாய் கொடுக்க என்று
நாயிலும் வேண்டும் 'கலப்பு'
 
சூடு அதிகம் தாங்க
சக்தி அதிகம் பெருக
தாங்குதிறன் மிகுதியாய் என்று
உலோகத்தில் வேண்டும் 'கலப்பு'
 
பணத்திற்காக
கலப்பினை ஏற்பவன்
மணமென்று வந்தால்
கசப்பினை உமிழ்வதேன்?
 
கலப்பின் பலனை
மனதனிலும் புகுத்திட்டால்
சக்தி பெருகுமென்றும்
பலன் ஆயிரமென்றும்
புரிந்துகொள் 'சாதி வெறியனே'!

Thursday, October 20, 2011

மாணவ சக்தி

பகல் வரும் சூரியனின் ஒளி
உயிர் கொடுக்கும் ஆக்க சக்தி
புவி உயிர்க்கு!
அதையே
குவித்தால் கொன்று குவிக்கும்
அழிவு சக்தி
அது அழிக்கும் சக்தி!
 
மாணவர் என்றோர் ஆக்க சக்தி
குவிகிறது அழிப்பதற்கு மட்டும்.
ஆக்கத்தை போதிக்க ஆளில்லை!
போதிக்கத் துணிந்தோர்
அச்சக்தி முன் நிலைப்பாரில்லை.
 
கல்விபயில கூடம் செல்வோர் கூட்டு
இப்போ போதைக்கு மட்டும்.
படிப்பயண உற்சாகம்
பெண்களிடம் கலாட்டா என்று
இன்றைய மாணவ பருவம் தயாரானது
நாளைய மாணவருக்கு அறிவுரை கூற!
 
ஆக்கசக்தியை ஒன்றாக்கி நாட்டுக்கு
உயிர் கொடுக்க ஆளில்லை!
மாணவர் தனது சக்தி உணர
நமது கல்வி தரமில்லை!
 

Monday, October 17, 2011

மனதில் தோன்றியது

ஒருநாள் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தேன். திடீரென என் மூளைக்குள் ஏதோ திரும்ப திரும்ப ஒலித்துக்கொண்டிருப்பது போன்றோரு பிரமை. சிறிது ஓரமாய் நின்று அமைதியாக யோசிக்க, வார்த்தைகள் தெளிவாக புரிய ஆரம்பித்தன.
 
"நீ என்னை எவ்விதம் பார்க்கிறாயோ, நான் அவ்விதமே உனக்கு காட்சியளிப்பேன்!"
"நீ என்னை எவ்விதம் பார்க்கிறாயோ, நான் அவ்விதமே உனக்கு காட்சியளிப்பேன்!"
"நீ என்னை எவ்விதம் பார்க்கிறாயோ, நான் அவ்விதமே உனக்கு காட்சியளிப்பேன்!"
 
எனக்கொன்றும் விளங்கவில்லை. பழையபடி நடக்க ஆரம்பித்தேன். இன்றும் எனக்குள் ஒரு ஐயம், அன்று நடந்தது என்ன? வினாவுக்கு விடைதான் கிடைக்கவில்லை. தேடல் தொடர்கிறது. அன்றிரவு நல்ல இடியுடன் கூடிய மழை. மின்னல் வெளிச்சம் என்னுள் பாய்ந்த உணர்வு. இறந்து விட்டேனா? இல்லை. உணர்விருக்கிறது. பின்பு நடந்தது என்ன? உங்களுக்கு புரிகிறதா?
 
அன்று தான் நான் என்னை உணர்ந்தேன். 'நான்' என்பதை துறந்தேன். பேரின்பம் என்னை ஆட்கொண்டது.
 
----
ஒரு கற்பனை சொற்பொழிவிலிருந்து....
 

Saturday, October 15, 2011

சமுதாயம் ஒரு கேள்விக்குறி

           என்னுடைய முந்தைய பதிவு வேடிக்கை கதைதான் என்றாலும் அதில் புதைந்துள்ள உண்மைகளை பார்த்தால் நமக்கு தலை சுற்றல் வரும் போல் உள்ளது. மதத்தின் பெயரால் அனைவரும் தங்களது சுயநல தேவையை மட்டுமே பூர்த்திசெய்து கொள்கின்றனர் என்பது தெளிவாக புலனாகும். மனித நேயம் என்பதையே மறந்து தங்களது சுய லாபத்திற்காக 'மதத்தை' பயன்படுத்தும் இழிநிலை வருந்த தக்கது.
 
          ஆதியில் மனிதன் மிருகத்தோடு மிருகமாய் வாழ்ந்த காலத்தில், அவைகளிடமிருந்து தனித்து தெரிய சற்று புத்தி முற்றிய மனிதரால் தோற்றுவிக்கப்பட்டது தான் 'சமூக கட்டுபாடு'. அதுதான் நாளடைவில் மாறி மதமாய், பின்பு ஜாதியாய் உருவெடுத்தது. நாகரீகம் தோன்றிய காலத்தில், குழுக்களாய் வாழ்ந்த மனிதன் வேறொரு குழுவை எதிரிகளாக பாவித்து பகை பாராட்டி வந்தான். ஒரு நாகரீகத்தை சேர்ந்தவன் மற்றவனை பகையாக நினைத்தான்.
 
          நாகரீகம் வளர்ந்த இன்றைய காலகட்டத்தில் மதத்தின் பெயரால் பகை பாராட்டி வருகிறோம். மிருக வாழ்க்கை வாழ்ந்த 'கற்கால' மனிதர்களாய் இன்றும் நம்முள் சில புல்லுருவிகள். வெறும் பாண்ட், சட்டை, டை மட்டுமே நாகரீகமில்லை. மனித நேயம் தான் நாகரீகம். வெறும் மதப்பற்று மட்டுமே பக்தியில்லை, பிற உயிர்களின் மேல் அன்பு தான் பக்தி.

சிங்கும் மதபோதகரும் (நெட்டில் படித்தவை)

                ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வேலை முடிந்த பின்பு, வீட்டிற்கு வெளிப்புறத் தோட்டத்தில் நமது திருவாளர் சிங் அவர்கள் தந்தூரி சிக்கனையும், மட்டன் வருவலையும் செய்வது வழக்கம். ஆனால் பக்கத்து வீடுகளில் குடியிருப்பவர்கள் அனைவரும் தீவிர கத்தோலிக்கர்கள். அவர்கள் வெள்ளிக்கிழமைகளில் அசைவம் சாப்பிடுவதில்லை. அசைவம் சமைக்கும் போது அதிலிருந்து வரும் வாசம் கத்தோலிக்கர்களின் விரதத்தை சீண்டி பார்த்தது. அதனால் அவர்கள் தங்களின் மதபோதகரிடம் முறையிட்டனர்.
 
                ஒருநாள் அவரும் திருவாளர் சிங்கை சந்தித்து மதம் மாறிவிடும்படி வற்புறுத்தினார். நீண்ட நாள் போதனைகளுக்கு பிறகு அந்த நன்னாளும் வந்தது. போதகர் சிங்கின் மீது புனித நீரை தெளித்து " ஒரு சீக்கியனாக பிறந்தாய், சீக்கியனாக வளர்ந்தாய். ஆனால் இப்போது நீ ஒரு கத்தோலிக்கன்" என்றார்.
 
               பிறகென்ன, அண்டைவீட்டார் அனைவருக்கும் சந்தோஷம் தாங்கமுடியவில்லை. ஆனந்த கூத்தாடினர். ஆனால் அவர்களின் ஆனந்தம் நீடிக்கவில்லை. அடுத்த வெள்ளிக்கிழமையே அசைவத்தின் வாசம் அவர்களின் மூக்கை துளைத்தது. கோபமுற்ற அவர்கள் மதபோதகரிடம் முறையிட்டனர். உடனே புறப்பட்ட அவர் சிங்கின் தோட்டத்திற்கு விரைந்தார். இன்று அவனை கடுமையாக கண்டிக்கவேண்டும் என்று சென்றவர் அங்கு நடந்ததை பார்த்து அதிர்ச்சியுற்று மயங்கி விழுந்தார்.
 
                 நடந்தது இதுதான். நம்ம திருவாளர் மிகவும் பக்தியுடன் புனித நீர் இருத்த ஒரு புட்டியை திறந்து வறுத்த கோழி மற்றும் ஆட்டு கறி துண்டுகள் மேல் தெளித்து இவ்வாறு சொன்னார் "நீங்கள் கோழியாகவும், ஆடாகவும் பிறந்தீர்! கோழியாகவும், ஆடாகவும் வளர்ந்தீர்! ஆனால் இன்று நீங்கள் உருளை கிழங்கும் தக்காளியும்".

Monday, October 10, 2011

தேர்தல் அறியாமை:

தேர்தல் நாள்?
வினா எழுப்பினேன்
 
ரூவா ஐநூறு
கிடைக்கும் நாள்,
இலவசமாய் வாசலில்
அஞ்சி கிலோ
அரிசி கெடைக்கும் நாள்,
 
பிரியாணி கூடவே
முட்டையும் போடும்
ஃபங்சன் என்று
பலவாறு பதில்கள்!
 
எப்படி புரிய வைக்க?
 
அஞ்சுக்கும் பத்துக்கும்
சுயமரியாதையை
அடகு வைக்கும்
மூடர்களுக்கு
'உங்கள் தலைவிதி'யை
நீங்களே எழுதும்
நாளென்று!
 

காதலி !

அவள்
என் காதலி!
 
அவள்
என்
இதயம் கிழித்து
இரத்தம் பூசிக்கும்
அழகிய ராட்சசி,
 
அவளின்
கடைக்கண்
பார்வையால்
கசையடி கொடுக்கும்
கன்னி அரசி,
 
அவள்
கண்ணசைவால்
கட்டளையிடும்
காவிய நாயகி,
 
அவள்
சிரிப்பால் என்
உயிர் குடிக்கும்
சிரிப்பழகி,
 
அவள்
என் காதலி!

மாணவபருவ குறும்புகள்:

         சமீபத்தில் நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த பொது சிறுவயதில் படித்த பள்ளிகளை பற்றி பேச்சு வந்தது. அப்போது அவர் சொன்ன ஒரு 'குறும்பை' உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.நண்பர்  எட்டாம் வகுப்பு படிக்கும் பொது அரையாண்டு தேர்வின் பொது வேறு சில காரணங்களால் சரியாக படிக்கவில்லை. வேறு என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு நல்ல சினிமா பாடலை பத்து மதிப்பெண்கள் பகுதிக்கு எழுதி இருக்கிறார். தேர்வு முடிந்து விடுமுறை ஆரம்பமாக அனைவரும் மகிழ்ச்சியாக வெளியூர் சுற்ற கிளம்பிவிட்டனர்.
 
        அரையாண்டு விடுமுறை கழிந்து பள்ளிக்கு சென்ற அவருக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. ஆம். அவரின் பாடலுக்கு ஆசிரியர் 10 மதிப்பெண்கள் இட்டிருந்தார். லேசாக அதிர்ச்சியுற்றவர் ஆசிரியரை வினவ, அவர் புண் சிரிப்புடன் " பாட்டு புத்தகம் வாங்கி சரிபார்த்தேன். ஒரு பிழையும் இல்லை. அதனால் தான் முழுமதிப்பெண்கள்" என்று கூற, வகுப்பில் ஒரே சிரிப்பலை. ஆனால் மற்றுமொருமுறை இவ்வாறு நிகழ்ந்தால் 10 மதிப்பெண்கள் கழிக்கப்படும் என்று பின்குறிப்பாக கூற மாணவர்கள் இன்னும் பெருங்குரலெடுத்து சிரிக்க அன்றைய தினம் மறக்க முடியாத ஒரு 'கல்வெட்டாக' அனைவரின் மனதிலும் நீங்கா இடம்பெற்றதாக அதே களிப்புடன் பகிர்ந்துகொண்டார்.